சென்னை: சென்னையில் பருவமழைக் காலங்களில் மழை நீர் தேங்காமல் தடுக்க 21 நீர்வழி கால்வாய்களில் ரூ.211.86 கோடி மதிப்பீட்டில் வெள்ள தடுப்புச் சுவர் அமைக்கும் பணிகள் நடைபெறுவதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: பருவமழைக் காலங்களில் சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் வெள்ளப் பாதிப்பு ஏற்படுவதைத் தவிர்க்கும் வகையில், பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்தவகையில், பருவமழைக் காலங்களில் மழை நீர்வடிகால்களில் இருந்து நீர்வழிக் கால்வாய்களுக்கு செல்லும் மழைநீர், நீர்வழிக் கால்வாயில் தேங்காமல் தவிர்க்கும் வகையில் வெள்ள தடுப்பு சுவர் அமைக்கப்பட்டு வருகிறது.
சென்னை மாநகராட்சி சார்பில் 44 நீர்வழிக் கால்வாய்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. அதன்படி, கொடுங்கையூர் பிரதான கால்வாய், வியாசர்பாடி கால்வாய், கேப்டன் காட்டன் கால்வாய், லிங்க் கால்வாய், கண்ணப்பர் திடல் திறந்தவெளி கால்வாய் உள்பட 21 நீர்வழிக்கால்வாய்களில் ரூ.211.86 கோடி மதிப்பீட்டில் வெள்ளத் தடுப்பு சுவர் புதிதாக அமைக்கும் பணியும், ஏற்கெனவே இருக்கும் வெள்ளத் தடுப்பு சுவரை உயர்த்தி அமைக்கும் பணியும், அதேபோல், வெள்ளத்தடுப்பு சுவர் மேல் வலையுடன் கூடிய சங்கிலி வேலி அமைக்கும் பணியும் நடைபெற்று வருகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.