பார்படோஸ்: மேற்கு இந்தியத் தீவுகள் கிரிக்கெட் அணியின் வேகப் பந்துவீச்சாளர் ஜெய்டன் சீல்ஸுக்கு அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது.
மேற்கு இந்தியத் தீவுகள், ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி பார்படோஸில் நடைபெற்று வருகிறது. முதல் இன்னிங்ஸின்போது ஆஸ்திரேலிய வீரர் பாட் கம்மின்ஸ் விக்கெட்டை வீழ்த்திய ஜெய்டன் சீல்ஸ், கம்மின்ஸை நோக்கி ஆடுகளத்திலிருந்து கிளம்பு என்ற ரீதியில் சைகை காண்பித்தார். இதுதொடர்பாக போட்டி நடுவரிடம் புகார் செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து ஐசிசி நடத்தை விதிமுறையின்படி ஜெய்டன் சீல்ஸுக்கு போட்டிக்கான ஊதியத்திலிருந்து 15 சதவீதம் அபராதமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
முதல் இன்னிங்ஸில் ஜெய்டன் சீல்ஸ் 5 விக்கெட்கள் வீழ்த்தினார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், கடந்த 2 ஆண்டுகளில் ஜெய்டன் ஷீல்ஸ் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவது 2-வது முறை என்பதால் அவருக்கு 2 தகுதி இழப்புப் புள்ளிகளும் அபராதமாக வழங்கப்பட்டுள்ளன.
முதல் டெஸ்டில் ஆஸி. வெற்றி: மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்கெதிரான முதல் டெஸ்ட் போட்டியின் 2-வது இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய அணி நிதானமாக விளையாடியது. பார்படோஸில் கடந்த 25-ம் தேதி தொடங்கிய இந்த டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய அணி 180 ரன்களும், மேற்கு இந்தியத் தீவுகள் அணி 190 ரன்களும் குவித்து ஆட்டமிழந்தன.
2-ம் நாள் ஆட்டநேர இறுதியில் ஆஸ்திரேலிய அணி தனது 2-வது இன்னிங்ஸில் 4 விக்கெட் இழப்புக்கு 92 ரன்கள் எடுத்திருந்தது. இந்நிலையில் நேற்று 3-ம் நாள் ஆட்டத்தை டிராவிஸ் ஹெட் 13 ரன்களுடனும், பியூ வெப்ஸ்டர் 19 ரன்களுடனும் தொடங்கினர்.
81.5 ஓவர்களில் ஆஸ்திரேலிய அணி 310 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. ஆஸ்திரேலியா தரப்பில் டிராவிஸ் ஹெட் 61, பியூ வெப்ஸ்டர் 64, அலெக்ஸ் கேரி 64 ரன்கள் எடுத்தனர். 300 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய மேற்கு இந்தியத் தீவுகள் அணி 141 ரன்களில் ஆட்டமிழந்தது. ஹேசில்வுட் 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார். 159 ரன்களில் ஆஸ்திரேலியா இந்த போட்டியில் வெற்றி பெற்றது.