புதுடெல்லி: ஆறு ஆண்டு கால காத்திருப்புக்கு பிறகு, கைலாஷ் மானசரோவர் புனித யாத்திரை மீண்டும் தொடங்கியுள்ளது. கைலாஷ் மானசரோவர் யாத்திரை என்பது கயிலை மலை மற்றும் மானசரோவர் ஏரிக்குச் செல்லும் புனிதப் பயணமாகும். ஒவ்வொரு ஆண்டும் ஜூன் முதல் செப்டம்பர் வரை நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை வெளியுறவு அமைச்சகம் செய்து வருகிறது. உத்தராகண்ட் மாநிலத்தில் உள்ள லிபுலேக் கணவாய் மற்றும் சிக்கிம் மாநிலத்தில் உள்ள நாது லா கணவாய் வழியாக இந்த யாத்திரை நடைபெறுகிறது.
சவாலான 45 கி.மீ. மலையேற்றப் பயணம் உட்பட இந்த யாத்திரை 23 முதல் 25 நாட்கள் வரை நீடிக்கிறது. இதில் ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று வருகின்றனர்.
இந்நிலையில் கரோனோ பெருந்தொற்று மற்றும் கல்வான் பள்ளத்தாக்கில் இந்தியா -சீனா இடையிலான மோதலால் எல்லையில் அதிகரித்த பதற்றம் காரணமாக இந்த யாத்திரை நிறுத்தப்பட்டது.
இந்நிலையில் 6 ஆண்டு கால காத்திருக்குப் பிறகு கைலாஷ் மாணசரோவர் யாத்திரை இந்த ஆண்டு மீண்டும் தொடங்கியுள்ளது.
கடந்த ஜூன் 21-ம் தேதி சிக்கிமின் நாது லா கணவாய் வழியாக சீனாவின் திபெத் தன்னாட்சிப் பகுதிக்குள் இந்திய பக்தர்களின் முதல் குழு சென்றது. இக்குழுவில் 750 பேர் இடம்பெற்றுள்ளனர். 5,500-க்கும் மேற்பட்ட விண்ணப்பதாரர்களிடமிருந்து இவர்கள் கணினி லாட்டரி மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.