புதுடெல்லி: வங்கதேசத்துடன் செய்து கொண்ட கங்கை நீர் பகிர்வு ஒப்பந்தத்தை மாற்றியமைப்பது குறித்து மத்திய அரசு பரிசீலனை செய்து வருகிறது. சிந்து நிதி நீரை பகிர்ந்து கொள்ள இந்தியா – பாகிஸ்தான் இடையே ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தது. பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு பதிலடியாக அந்த ஒப்பந்தத்தை நிறுத்துவதாக மத்திய அரசு அறிவித்தது. இதனால் பாகிஸ்தானில் வறட்சி ஏற்படும்.
வங்கதேசத்தில் முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. வங்கதேசத்துடன் இந்தியா கடந்த 1996-ம் ஆண்டு கங்கை நதி நீர் பகிர்வு ஒப்பந்தம் செய்தது. கொல்கத்தா துறைமுகத்தில் போக்குவரத்து வசதிக்காக, ஃபராக்கா என்ற இடத்தில் தடுப்பனை அமைத்து கங்கை நதி நீர் ஹூக்ளி ஆற்றுக்கு கடந்த 1975-ம் ஆண்டு திருப்பிவிடப்பட்டது. இதனால் வங்கதேசத்தில் வறட்சி ஏற்பட்டது.
இதனால் இரு நாடுகள் இடையே கங்கை நதி நீரை பகிர்ந்து கொள்ளும் ஒப்பந்தம் செய்யப்பட்டது. வங்கதேச எல்லையிலிருந்து 10 கி.மீ தொலைவில் கங்கை நதியின் கிளை நதியான பகீரதி ஆற்றில் தடுப்பனை கட்டப்பட்டது. இதன் மூலம் மார்ச் 11ம் தேதி முதல் மே 11-ம் தேதி வரை 10 நாட்களுக்கு 35,000 கன அடி நீர் இரு நாடுகளுக்கும் மாறி மாறி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
தற்போது இந்தியாவின் தேவை அதிகரித்துள்ளதால், கூடுதலாக 30,000 முதல் 35,000 கன அடி தேவைப்படுகிறது. வங்கதேசத்துடனான 30 ஆண்டு கால கங்கை நதி நீர் பகிர்வு ஒப்பந்தம் அடுத்தாண்டு காலாவதியாகிறது. இந்த ஒப்பந்தத்தை புதுப்பிக்க பரஸ்பர ஒப்புதல் தேவை. வங்கதேசம் இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபடுவதால், அந்நாட்டுடனான கங்கை நதி நீர் பகிர்வு ஒப்பந்தத்தை மாற்றியமைப்பது பற்றி மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.