சென்னை: “படைப்பாளிகளை, அவர்கள் வாழும் காலத்திலேயே போற்ற வேண்டும். எழுத்தாளரைப் போற்றும் சமூகம்தான் உயர்ந்த சமூகமாக இருக்க முடியும்,” என்று சாகித்ய அகாடமி மற்றும் JNU பல்கலை. தமிழ்த்துறை இணைந்து நடத்திய கருணாநிதி நூற்றாண்டு விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேசியுள்ளார்.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (ஜூன் 27) சென்னை, கலைவாணர் அரங்கில் நடைபெற்ற விழாவில், சாகித்ய அகாடமி மற்றும் ஜவஹர்லால்நேரு பல்கலைக்கழகம் சிறப்புநிலைத் தமிழ்த்துறை இணைந்து நடத்தும் கருணாநிதி நூற்றாண்டுக் கருத்தரங்கை தொடங்கி வைத்தார். விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: இலக்கியத்தின் வழி இந்தியர்கள் அனைவரையும் ஒன்றாக இணைக்கும் மகத்தான பணியினை சாகித்ய அகாடமி செய்து வருகிறது.
ஒருவரின் இலக்கியத் தகுதி என்பதற்கு சாகித்ய அகாடமிதான் அளவுகோல் எனும் அளவுக்கு புகழோடு செயல்பட்டு வருகிறது. எழுத்தாளர்களையும், மொழிபெயர்ப்பாளர்களையும் ஊக்குவிக்கும் சாகித்ய அகாடமியின் பணி மகத்தானது. போற்றுதலுக்குரியது. அவர்கள் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை JNU-வுடன் இணைந்து இங்கு கொண்டாடுவது சிறப்புக்குரிய ஒன்றாக அமைந்திருக்கிறது.
இந்தியாவில் எத்தனையோ பல்கலைக்கழகங்கள் இருந்தாலும் JNU-வுக்கு என்று, தனி குணம் உண்டு. கருத்தாழமிக்க உரையாடல்களுக்கு இடமாக உள்ள JNU-வில் வெளிவரும் ஆய்வுகள், உலக அளவில் பேசப்படுகிறது. அதனால்தான் உலக அளவிலான பல்வேறு பல்கலைக்கழகங்கள் JNU-வோடு இணைந்து பணியாற்ற விரும்புகின்றன. அதனால்தான், மறைந்த முதல்வர் கருணாநிதி JNU-வில் தமிழுக்கு ஒரு தனி இருக்கை இருக்க வேண்டும் என்று விரும்பி, அதைச் செயல்படுத்திக் காட்டினார்.
15 ஆண்டுகள் கழித்து, இன்றைக்கு அந்த இருக்கையை தனி ஒரு துறையாக வளர்க்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. அந்த வகையில் ‘தமிழ் இலக்கியவியல்’ என்ற தனித்துறையை உருவாக்க 5 கோடியே 30 லட்சம் ரூபாய் வழங்கினோம். JNU-வோடு பன்னோக்கு கலையரங்கத்துக்கு அருகே உலகப் பொதுமறை தந்த திருவள்ளுவரின் சிலையை நிறுவ நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
சாகித்ய அகாடமியும், JNU-வும் இணைந்து நடத்தும் இந்த விழா மூலமாக மறைந்த முதல்வர் கருணாநிதி இந்திய இலக்கிய முகமாக அங்கீகரிக்கப்படும் நாளாக இது அமைந்திருக்கிறது. சாகித்ய அகாடமி விருது பெறும் படைப்பாளர்களுக்கும் வீடு வழங்க வேண்டும் என்று முடிவு செய்து மறைந்த முதல்வர் கருணாநிதியின் பிறந்த நாளன்று, ‘கனவு இல்லம்’என்று ஒரு திட்டத்தை நடைமுறைப்படுத்தினேன்.
இந்த திட்டத்தில் இதுவரைக்கும் 15 அறிஞர்களுக்கு தமிழக அரசு கனவு இல்லம் வழங்கி இருக்கிறது. பரிசுத்தொகை ஒரு லட்சம் என்றால், வீட்டின் மதிப்பு சுமார் ஒரு கோடி ரூபாய்க்கும் மேல்.
அதுவும், அந்த வீட்டுக்கான பத்திரச் செலவு முதலானவற்றையும் தமிழக அரசே ஏற்கிறது. கனவு இல்லம் திட்டத்தின் நீட்சியாக சாகித்ய அகாடமி மொழிபெயர்ப்பாளர் விருது பெற்றவர்களுக்கும் கனவு இல்லம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு, இதுவரை 10 மொழிபெயர்ப்பாளர்களுக்கு கனவு இல்லம் வழங்கப்பட்டிருக்கிறது.
இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இப்படிப்பட்ட திட்டம் இல்லை என்று சொல்லத்தக்க வகையில் இதனை நாம் செயல்படுத்தி இருக்கிறோம். இதற்கெல்லாம் ஒரே நோக்கம், படைப்பாளிகளை, அவர்கள் வாழும் காலத்திலேயே போற்ற வேண்டும் என்பதுதான். எழுத்தாளரைப் போற்றும் சமூகம்தான் உயர்ந்த சமூகமாக இருக்க முடியும்.
இந்தச் சமூகத்தின் முன்னேற்றத்துக்காக மக்களின் உயர்வுக்காக அவர்களின் சமூக விடுதலைக்காக முற்போக்குச் சிந்தனைக்காக இயங்கிய, இயங்கும் எழுத்தாளர்களை தமிழ்ச் சமூகம் உச்சி மோந்து கொண்டாட தவறியதே இல்லை. அந்த வழியில்தான் மறைந்த முதல்வர் கருணாநிதியும் தமிழ் இலக்கியவாதியாக இருந்து, சிறப்பான படைப்புகளைக் கொடுத்தது மட்டுமல்லாமல் சிறப்பான படைப்பாளிகள் அனைவரையும் அங்கீகரித்தார், அரவணைத்தார். அதுதான் அவரது தனிச் சிறப்பு.
தமிழ்ச் சமூகத்தில் மறைந்த முதல்வர் கருணாநிதியைப் போன்ற படைப்பாளிகள் உருவாக வேண்டும். படைப்பாற்றல் பெற்றவர்கள் தொடர்ந்து தங்களின் படைப்பை எழுதி வழங்க வேண்டும். சிறந்த படைப்புகளை இதுபோன்ற அமைப்புகள் பாராட்ட வேண்டும். படைப்பாளிகள் அவர்கள் வாழும் காலத்திலேயே அங்கீகாரம் பெற வேண்டும். இதைத்தான் தமிழக அரசு செய்து வருகிறது. சாகித்ய அகாடமி போன்ற அமைப்புகளும் இந்தப் பணியை தொய்வில்லாமல் தொடர வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் பேசினார்.