ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூரில் 2000-ல் அப்போதைய சென்னை மேயர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்த உழவர் சந்தை 25-வது ஆண்டை நிறைவு செய்யும் நிலையில், பொதுமக்கள் ஆர்வம் காட்டாததால் குளிர் பதன சேமிப்புக் கிடங்கு வசதி இருந்தும் விவசாயிகள் வெளிச்சந்தையில் இடைத்தரகர்களிடம் குறைவான விலைக்கு விளை பொருட்களை விற்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழகத்தில் விவசாயிகளின் உற்பத்தி பொருட்களுக்கு உரிய விலை கிடைப்பதற்காகவும், வெளிச்சந்தையில் இடைத்தரகர்களுக்கு குறைந்த விலைக்கு பொருட்களை விற்று கமிஷன் கொடுப்பதை தவிர்க்கும் வகையில் கடந்த 1999-ம் ஆண்டு திமுக ஆட்சியில் அப்போதைய முதல்வர் கருணாநிதியால் உழவர் சந்தை திட்டம் தொடங்கப்பட்டது. இதில் இடைத்தரகர் இல்லாமல் விவசாயிகள் நேரடி வர்த்தகம் செய்வதால் விளை பொருட்களை நியாயமான விலைக்கு பொதுமக்களுக்கு விற்பனை செய்யும் சூழல் ஏற்பட்டது.
இத்திட்டத்தின்படி ஶ்ரீவில்லிபுத்தூர் நகராட்சியில் அமைக்கப்பட்ட உழவர் சந்தையை கடந்த 2000-ம் ஆண்டு ஜூலை 1-ம் தேதி அப்போதைய சென்னை மாநகராட்சி மேயர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். மதுரை – கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் சர்ச் சந்திப்பு அருகே உள்ள ஶ்ரீவில்லிபுத்தூர் உழவர் சந்தை 48 விற்பனை கடைகள், பொருட்கள் வைப்பு வரை, பார்க்கிங் உள்ளிட்ட வசதிகளுடன் தொடங்கப்பட்டது.
ஆரம்பத்தில் 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் உழவர் சந்தையில் பொருட்களை விற்பனை செய்வதற்கான அடையாள அட்டை பெற்று, பயன்படுத்தி வந்த நிலையில் பொதுமக்கள் அதிகம் வராததால் விவசாயிகள் வெளி சந்தைகளை நாட தொடங்கினர்.
இந்நிலையில் விவசாயிகள் விளை பொருட்களை இருப்பு வைத்து விற்பனை செய்யும் வகையில் கடந்த 2023-ம் ஆண்டு 5 மெட்ரிக் டன் அளவிலான விளை பொருட்களை இருப்பு வைக்கும் அளவுக்கு குளிர்பதன சேமிப்பு கிடங்கு வசதி ஏற்படுத்தப்பட்டது. ஆனாலும் அனைத்து வகை காய்கறிகளும் கிடைப்பதில்லை எனக்கூறி பொதுமக்கள் வராததால், தற்போது சாதாரண நாட்களில் 5 முதல் 8 விவசாயிகளும், விடுமுறை நாட்களில் 10 முதல் 15 விவசாயிகள் மட்டுமே உழவர் சந்தையை தொடர்ந்து பயன்படுத்தி வருகின்றனர்.
இன்னும் சில நாட்களில் உழவர் சந்தை திறக்கப்பட்டு 25 ஆண்டுகள் நிறைவு பெற உள்ள நிலையில் பொதுமக்கள் மற்றும் விவசாயிகளிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி சந்தையை முழுமையாக நினைத்து வர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில்: விருதுநகர் மாவட்டத்தில் ஆண்டு முழுவதும் விவசாயம் நடைபெறக்கூடிய ஸ்ரீவில்லிபுத்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் தென்னை, மா, பலா மற்றும் கத்தரிக்காய், தக்காளி, வெண்டைக்காய், சின்ன வெங்காயம், கீரை வகைகள் உள்ளிட்டவை அதிகளவு சாகுபடி செய்யப்படுகிறது.
ஆனால் பொதுமக்கள் கேரட், பீட்ரூட், உருளை கிழங்கு உள்ளிட்ட காய்கறிகள் இங்கு இல்லாததால் வெளி சந்தைக்கு செல்கின்றனர். ஒரு சிலர் நாட்டு காய்கறிகளை வாங்க உழவர் சந்தைக்கு வருவதால், விளைவித்த பொருட்களில் பெருமளவு சந்தையில் விற்று விட்டு, ஒரு பகுதியை உழவர் சந்தைக்கு கொண்டு வருகிறோம்.
மாவட்ட நிர்வாகம் வேளாண் துறைகளை ஒருங்கிணைத்து ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் உள்ள முன்னோடி விவசாயிகள் மற்றும் உழவர் உற்பத்தி குழுக்களுக்கு வேளாண் குடில்கள் அமைத்தல், பண்ணை விவசாய முறை, பந்தல் அமைத்து பயிர் சாகுபடி செய்தல் உள்ளிட்டவற்றிற்கு மானியம் வழங்கி உருளை கிழங்கு, கேரட், முட்டை கோஸ், பீட்ரூட் போன்ற காய்கறிகளை சாகுபடி செய்ய விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்க வேண்டும். உழவர் சந்தை குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு எடுத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர்.