பொறியியல் கல்லூரி மாணவர் சேர்க்கைக்கான தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதில், அரசுப் பள்ளி மாணவர்கள் 4 பேர் உட்பட மொத்தம் 144 பேர் 200-க்கு 200 கட்ஆஃப் மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளனர். கலந்தாய்வு ஜூலை 7-ம் தேதி தொடங்குகிறது.
தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின்கீழ் இயங்கும் 400-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகளில் இளநிலை படிப்புகளுக்கு சுமார் 1.50 லட்சம் இடங்கள் உள்ளன. இதில் சேர, 3 லட்சத்து 2,374 பேர் இணையவழியில் விண்ணப்பம் பதிவு செய்தனர். இதில், 2 லட்சத்து 50,298 பேர் பதிவு கட்டணம் செலுத்தி முழுமையாக விண்ணப்பத்தை பூர்த்தி செய்தனர். அதில், தகுதியின்மை காரணமாக 8,657 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டன. எஞ்சிய 2 லட்சத்து 41,641 பேரின் விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டன. அதேபோல, அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத ஒதுக்கீட்டில் 51,004 மாணவர்கள் விண்ணப்பித்தனர். அதில் 47,372 பேர் கலந்தாய்வில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளனர்.
இந்நிலையில், சென்னை கிண்டியில் உள்ள தொழில்நுட்ப கல்வி இயக்ககத்தில் நேற்று நடந்த நிகழ்வில், பொறியியல் கலந்தாய்வில் பங்கேற்க தகுதி பெற்றுள்ள மாணவர்களின் தரவரிசை பட்டியலை உயர்கல்வி துறை அமைச்சர் கோவி.செழியன் வெளியிட்டார். அதில், அரசுப் பள்ளி மாணவர்கள் 4 பேர் உட்பட மொத்தம் 144 பேர் 200-க்கு 200 கட்ஆஃப் மதிப்பெண் பெற்றுள்ளனர். கடந்த ஆண்டில் 65 பேர் முழு கட்ஆஃப் மதிப்பெண் பெற்றிருந்தனர். பொதுப் பிரிவில் சகஸ்ரா (காஞ்சிபுரம்), கார்த்திகா (நாமக்கல்), அமலன் ஆண்டோ (அரியலூர்), கிருஷ்ணபிரியன் (தருமபுரி), தீபா (கடலூர்) ஆகியோர் முதல் 5 இடங்களை பிடித்துள்ளனர். அதேபோல, அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத ஒதுக்கீடு பிரிவில் தாரணி (கடலூர்), மைதிலி (சென்னை), முரளிதரன் (கடலூர்), வெற்றிவேல் (திருவண்ணாமலை), பச்சையம்மாள் (திருவண்ணாமலை) ஆகியோர் முன்னிலையில் உள்ளனர். மாணவர்கள் தங்களது தரவரிசை விவரங்களை www.tneaonline.org என்ற இணையதளத்தில் அறியலாம்.
தரவரிசை பட்டியலை வெளியிட்ட பிறகு, அமைச்சர் கோவி.செழியன் கூறியதாவது: பொறியியல் கலந்தாய்வில் பங்கேற்க கடந்த ஆண்டைவிட இந்த முறை 41,773 பேர் கூடுதலாக விண்ணப்பித்துள்ளனர். தரவரிசை பட்டியலில் ஏதேனும் குறைகள் இருந்தால், நிவர்த்தி செய்துகொள்ள ஜூலை 2-ம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. மாணவர்கள் தெரிவிக்கும் குறைகளில் நியாயம் இருந்தால், ஆராயப்பட்டு உடனே சரிசெய்யப்படும். பொறியியல் கல்வி கட்டணத்தில் மாற்றம் இல்லை. கடந்த ஆண்டு வசூலித்த கட்டணமே தொடரும்.
மாணவர் சேர்க்கை கலந்தாய்வு ஜூலை 7-ல் தொடங்கி ஆகஸ்ட் 26-ம் தேதி வரை நடத்தப்பட உள்ளது. அதன்படி, சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு ஜூலை 7 முதல் 11-ம் தேதி வரை நடைபெறும். இதில், அரசுப் பள்ளி மாணவர்கள் (7.5% ஒதுக்கீடு), விளையாட்டு பிரிவினர், முன்னாள் ராணுவத்தினர் வாரிசுகள், மாற்றுத் திறனாளிகள் பங்கேற்க உள்ளனர். பிறகு, பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வு ஜூலை 14-ல் தொடங்கி ஆகஸ்ட் 19-ம் தேதி வரை 3 சுற்றுகளாக நடைபெறும். இதுதவிர, துணை கலந்தாய்வு ஆகஸ்ட் 21 முதல் 23-ம் தேதி வரையும், எஸ்.சி. பிரிவினருக்கான கலந்தாய்வு ஆகஸ்ட் 25, 26-ம் தேதிகளிலும் நடைபெறும். இவ்வாறு அவர் கூறினார்.
உயர்கல்வி துறை செயலர் பொ.சங்கர், தொழில்நுட்ப கல்வி துறை ஆணையர் இன்னசென்ட் திவ்யா, தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கை செயலர் டி.புருஷோத்தமன் ஆகியோர் உடன் இருந்தனர்.