‘பறந்து போ’ படத்தை எப்படியாவது மக்களிடையே கொண்டு போய் சேர்த்துவிடுங்கள் என்று திரை விமர்சகர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார் இயக்குநர் பாலா.
ராம் இயக்கத்தில் சிவா, அஞ்சலி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘பறந்து போ’. ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனம் இதன் தமிழக உரிமையினை கைப்பற்றி வெளியிடுகிறது. ஜூலை 4-ம் தேதி வெளியாகவுள்ள இப்படத்தின் ட்ரெய்லர் மற்றும் பாடல்கள் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் படக்குழுவினருடன் சிறப்பு விருந்தினர்களாக இயக்குநர் பாலா, வெற்றிமாறன், மிஷ்கின், விஜய், மாரி செல்வராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டார்கள். இந்த விழாவில் இயக்குநர் பாலா பேசும்போது, “ராமின் ‘பறந்து போ’ படத்தைப் பார்த்தவுடன், இந்தப் படத்தை எப்படியாவது மக்கள்கிட்ட கொண்டு போய் சேர்க்க வேண்டும் என மாரி செல்வராஜிடம் கூறினேன். அவரோ நானும் அதற்குதான் ஓடிக் கொண்டிருக்கிறேன் என்றார்.
இங்கு விமர்சகர்களுக்கு ஒரு வேண்டுகோள் வைக்கிறேன். எப்படியாவது இந்தப் படத்தை மக்களிடம் கொண்டு போய் சேர்த்துவிடுங்கள். உங்கள் பாதம் தொட்டு வேண்டி வணங்கி கேட்டுக் கொள்கிறேன். ராம் மாதிரியான ஓர் இயக்குநர் நமக்கும் தமிழ்நாட்டுக்கும் தேவை” என்றார் இயக்குநர் பாலா.