மதுரை: நெல்லையப்பன் கோயில் ஆனி தேரோட்டம் சாதி அடையாளங்கள் இல்லாமல் அமைதியாக நடைபெறுவதை உறுதி செய்ய டிஜிபி, அறநிலையத்துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பாளையங்கோட்டையைச் சேர்ந்த வழக்கறிஞர் மாதவன், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனு: நெல்லையப்பர் காந்திமதியம்மன் திருக்கோயில் ஆனித் திருவிழாவில் ஜூலை 8-ல் தேர் திருவிழா நடைபெறுகிறது. இந்த தோரோட்டத்தில் மாநிலம் முழுவதும் இருந்து லட்சக்கணக்காக பக்தர்கள் கலந்து கொள்வர்.
பொதுவாக நெல்லையப்பர் கோயில் திருவிழாவின் போது சாதி ரீதியான கலர் வண்ணங்களை கொண்ட பட்டாசுகள் வெடிக்க செய்வது, சாதி தலைவர்களை வாழ்க வாழ்க என கோஷமிடுவது, சிலர் ஒழிக என கோஷம் போடுவது, திருவிழாவுக்கு வரும் இளைஞர்கள் சாதி ரீதியான டி- ஷர்டுகள், சாதி ரீதியான ரிப்பன்கள் அணிந்து வருவது ஆகியன நடக்கும்.
நெல்லை மாவட்டத்தில் சாதி படுகொலைகள் அதிகளவில் நடைபெற்று வருகின்றன. பொது இடங்களில் சாதி அடையாளங்களை வெளிப்படுத்துவது இப்படுகொலைகளுக்கு முக்கிய காரணமாக இருந்து வருகிறது. இப்படியிருக்கும் போது கோயில் திருவிழாக்களில் சாதி அடையாளங்களுடன் ஆட்கள் பங்கேற்பதால் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்பட்டு பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய முடியாத நிலை ஏற்படுகிறது.
சாதி மோதலுக்கு மூல காரணமாக இருக்கும் செயல்பாடுகளுக்கு தடை விதிக்க வேண்டும். நெல்லையப்பர் காந்திமதியம்மன் கோயில் திருவிழா மற்றும் தேரோட்டதுக்கு வரும் இளைஞர்கள் சாதி ரீதியான கலர், கலராக பட்டாசுகள் வெடிக்கவும், சாதி ரீதியான படம், பெயர், கொடிகளை காண்பிக்கவும் தடை விதித்து உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனுவை நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், ஏ.டி.மரிய கிளாட் அமர்வு இன்று விசாரித்து, சாதிய ரீதியான அடையாளங்கள் பயன்பாட்டை முறைப்படுத்தும் விதிகள் உள்ளன. அதன் அடிப்படையில் டிஜிபி, அறநிலையத்துறை ஆணையர் ஆகியோர் இணைந்து நெல்லையப்பர் கோயில் ஆனித் தேரோட்டம், எந்த வித சாதி அடையாளங்கள் இல்லாத வகையில் அமைதியான முறையில் நடைபெறுவதை உறுதிப்படுத்த வேண்டும் என உத்தரவிட்டது.