கொழும்பு: இலங்கை – வங்கதேசம் அணிகள் அணி இடையிலான கடைசி மற்றும் 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கொழும்பு நகரில் நடைபெற்று வருகிறது. இதன் முதல் நாளில் வங்கதேச அணி 71 ஓவர்களில் 8 விக்கெட்கள் இழப்புக்கு 220 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ஷத்மான் இஸ்லாம் 46 ரன்கள் சேர்த்தார். தைஜூல் இஸ்லாம் 9, எபாதத் ஹொசைன் 5 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
நேற்று 2-வது நாள் ஆட்டத்தை தொடர்ந்து விளையாடிய வங்கதேச அணி 79.3 ஓவர்களில் 247 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. எபாதத் ஹொசன் 8, தைஜூல் இஸ்லாம் 33 ரன்களில் ஆட்டமிழந்தனர். இலங்கை அணி தரப்பில் அஷிதா பெர்னாண்டோ, சோனல் தினுஷா ஆகியோர் தலா 3 விக்கெட்களையும், விஷ்வா பெர்னான்டோ 2 விக்கெட்களையும் வீழ்த்தினர்.
இதையடுத்து பேட் செய்த இலங்கை அணிக்கு தொடக்க வீரரான பதும் நிஷங்கா அற்புதமான தொடக்கம் கொடுத்தார். அவருக்கு உறுதுணையாக விளையாடிய லகிரு உதரா 65 பந்துகளில், 4 பவுண்டரிகளுடன் 40 ரன்கள் எடுத்த நிலையில் தைஜூல் இஸ்லாம் பந்தில் எல்பிடபிள்யூ ஆனார். இதையடுத்து களமிறங்கிய தினேஷ் சந்திமால், பதும் நிஷங்காவுடன் இணைந்து பார்ட்னர்ஷிப்பை கட்டமைத்தார்.
சிறப்பாக விளையாடிய பதும் நிஷங்கா 167 பந்துகளில், 12 பவுண்டரிகளுடன் தனது 4-வது சதத்தை விளாசினார். மறுமுனையில் சதம் அடிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்பட்ட தினேஷ் சந்திமால் 153 பந்துகளில், ஒரு சிக்ஸர், 10 பவுண்டரிகளுடன் 93 ரன்கள் எடுத்த நிலையில் நயிம் ஹசன் பந்தில் ஆட்டமிழந்தார். 2-வது விக்கெட்டுக்கு இந்தஜோடி 194 ரன்கள் குவித்தது.
2-வது நாள் ஆட்டத்தின் முடிவில் இலங்கை அணி 78 ஓவர்களில் 2 விக்கெட்கள் இழப்புக்கு 290 ரன்கள் எடுத்தது. பதும் நிஷங்கா 146, பிரபாத் ஜெயசூர்யா 5 ரன்களுடன் களத்தில் இருந்தனர். கைவசம் 8 விக்கெட்கள் இருக்க 43 ரன்கள் முன்னிலை பெற்றுள்ள இலங்க அணி இன்று 3-வது நாள் ஆட்டத்தை தொடர்ந்து விளையாடுகிறது.