திருநெல்வேலி: டிஎன்பிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் நேற்று முன்தினம் திருநெல்வேலியில் நடைபெற்ற ஆட்டத்தில் மதுரை பாந்தர்ஸ் – திருச்சி கிராண்ட் சோழாஸ் அணிகள் மோதின. முதலில் பேட் செய்த மதுரை அணி 7 விக்கெட்கள் இழப்புக்கு 131 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக சரத் குமார் 37, அதீக் உர் ரஹ்மான் 30, சரவணன் 17, குர்ஜப்னீத் சிங் 17 ரன்கள் சேர்த்தனர். திருச்சி அணி சார்பில் ஈஸ்வரன், அதிசயராஜ் டேவிட்சன், சரவணகுமார் ஆகியோர் தலா 2 விக்கெட்கள் கைப்பற்றினர்.
132 ரன்கள் இலக்குடன் பேட் செய்த திருச்சி அணி 18.1 ஓவர்களில் 6 விக்கெட்கள் இழப்புக்கு 137 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. அதிகபட்சமாக கேப்டன் சுரேஷ் குமார் 44, ராஜ் குமார் 37 ரன்கள் சேர்த்தனர். 4 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற திருச்சி அணிக்கு இது 2-வது வெற்றியாக அமைந்தது. 6 ஆட்டங்களில் விளையாடி உள்ள அந்த அணி 4 புள்ளிகளுடன் 5-வது இடத்தில் உள்ளது. மதுரை அணிக்கு இது 4-வது தோல்வியாகும்.