புதுச்சேரி மறைமலை அடிகள் சாலையில் ராஜீவ்காந்தி புதிய பேருந்து நிலையம் செயல்பட்டு வந்தது. அடிப்படை வசதிகள் குறைபாட்டால் இந்த புதிய பேருந்து நிலையத்தை முழுவதுமாக இடித்து, புதிதாக கட்ட தீர்மானிக்கப்பட்டது. ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தின் கீழ் இதற்கான பணி கடந்தாண்டு தொடங்கியது. ரூ.29.50 கோடி செலவில் இதற்கான பணிகள் நடந்தன. இதற்காக, கடலுார் சாலையில் உள்ள ஏஎப்டி மில் திடலுக்கு பேருந்து நிலையம் தற்காலிகமாக இடமாற்றம் செய்யப்பட்டது.
இதற்கிடையே பேருந்து நிலைய கட்டுமானப் பணிகள் நடந்து முடிந்தன. ஆனாலும், சில மாதங்களாக அதை திறக்காமல் அப்படியே வைத்திருந்தனர். “ஏஎப்டி மில் திடலில் இயங்கி வரும் தற்காலிக பேருந்து நிலையத்தில் வசதிகள் இல்லை; பணிகளை முடித்து புதிய பேருந்து நிலையத்தை ஏன் திறக்காமல் வைத்துள்ளீர்கள்?’’ என பல அமைப்புகள் கேள்வி எழுப்பின. பல கட்ட போராட்டங்களுக்குப் பிறகு, கடந்த மே 2-ம்தேதி புதிய பொலிவுறு பேருந்து நிலைய முனையம்திறக்கப்பட்டது.
இந்த புதிய பேருந்து நிலையத்தில் 42 கடைகள், உணவகங்கள் உள்ளன. பேருந்துகள் நின்று, பயணிகளை ஏற்றிச் செல்ல நடைமேடைகள் உள்ளன. பயணிகள் காத்திருப்பு பகுதியும் உள்ளது. புதிய பேருந்து நிலையத்தில் இருந்து பேருந்துகள் இயங்கத் தொடங்கினாலும், இங்கு கடைகள் ஏதும் இதுவரையிலும் திறக்கப்படவில்லை. இதனால் பயணிகள் கடும் அவதிக்கு ஆளாகி வருகின்றனர். இதுபற்றி அரசு தரப்பில் விசாரித்தால், கடைகள் ஒதுக்கீடு தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு உள்ளது. அதனால் வணிகர்களுக்கு கடைகள் ஏதும் ஒதுக்கப்படவில்லை என்று தெரிவிக்கின்றனர்.
பேருந்து நிலையத்தில் ஏற்கெனவே இருந்த இடங்களில் அந்தந்த ஊர்களுக்கான பேருந்துகளை நிறுத்த இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் சென்னை, விழுப்புரம் பேருந்துகள் நிற்கும் இடத்தில் மேற்கூரைகள் இல்லை. பயணிகள் வெயிலில் காத்திருந்து ஏறிச் செல்கின்றனர்.

நிறுத்தப்பட்டிருக்கும் இருசக்கர வாகனங்கள்.
அதேபோல் திருச்சி, ஈரோடு, சேலம், திருப்பதி, பெங்களூரு, திருவனந்தபுரம் ஆகிய ஊர்களுக்குச் செல்லும் பேருந்துகள் நிற்கும் பகுதியிலும் மேற்கூரைகள் இல்லை. இலவச கழிப்பிடமும் இல்லை. பயணிகள் பெரும்பாலும் நகராட்சி வாகன நிறுத்தத்தில் டூவீலர்களை நிறுத்துகின்றனர். அங்கேயும் மேற்கூரையும் இல்லை.

பெயர்ந்து விழத் தொடங்கியிருக்கிறது.
வண்டிகள் வெயிலில் நிற்கின்றன. இங்குள்ள இடநெருக்கடியால் பேருந்துக்கு உள்ளேயே இருசக்கர வாகனங்களை நிறுத்துகின்றனர். காவல்துறையினரும் இதை கண்டுகொள்வதில்லை. பேருந்து நிலையத்தில் தூண்களின் பூச்சுகள் பெயர்ந்து விழுந்து வருகின்றன.

அத்தனை கடைகள் திறந்திருக்கும். தற்போது எந்த சிறுதேவைக்கு
என்றாலும் வெளியேதான் செல்ல வேண்டும்.
அழகிய நிலையில் இருந்த நடைபாதை டைல்ஸ்கள் இரு மாதங்களுக்குள் பெயர்ந்து விழுந்து வருகின்றன. இருக்கைகள் கால்கள் முறிந்து கிடக்கின்றன. இதுபற்றி பொதுமக்கள் கூறுகையில், “கிட்டத்தட்ட 30 கோடி ரூபாய் வரை செலவு செய்து இந்த புதிய பேருந்து நிலையத்தை கட்டியுள்ளனர். இரண்டு மாதங்கள் ஆவதற்குள்ளேயே இப்படி இருக்கிறது.
கடைகள், உணவகங்கள் எதையும் இதுவரையிலும் திறக்கவில்லை. வெயிலில் ஒதுங்க கூட இடம் இல்லை. துணைநிலை ஆளுநர், முதல்வர் இதில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று தெரிவிக்கின்றனர்.முன்பெல்லாம் புதுச்சேரி பேருந்து நிலையத்துக்குள் வந்தால் அத்தனை கடைகள் திறந்திருக்கும். தற்போது எந்த சிறுதேவைக்கு என்றாலும் வெளியேதான் செல்ல வேண்டும்.