மேட்டூர்: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 37,263 கன அடியாக அதிகரித்துள்ளது. அதேநேரத்தில் டெல்டா பாசனத்துக்கு நீர் திறப்பு 22,500 கன அடியாக அதிகரித்து திறக்கப்பட்டு வருகிறது.
கேரளா, கர்நாடகவில் தென்மேற்கு பருவமழை பெய்து வரும் நிலையில், அங்குள்ள அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதன் காரணமாக, கபினி, கே.ஆர்.எஸ் அணைகளில் இருந்து உபரிநீர் காவிரி ஆற்றில் திறக்கப்பட்டு வருகிறது. தற்போது, காவிரி ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கு காரணமாக மேட்டூர் அணைக்கான நீர்வரத்து வெகுவாக அதிகரித்துள்ளது.
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு புதன்கிழமை காலை 7,815 கன அடியாகவும், மாலை 13,332 கன அடியாகவும், வியாழக்கிழமை காலை 18,290 கன அடியாக இருந்த நிலையில் மாலை 37,263 கன அடியாக அதிகரித்துள்ளது. இதனிடையே, அணையிலிருந்து டெல்டா பாசனத்துக்கு நீர் திறப்பு விநாடிக்கு 20,000 கன அடியிலிருந்து 22,500 கன அடியாக அதிகரித்து திறக்கப்பட்டு வருகிறது.
அணையிலிருந்து திறக்கப்படும் நீரின் அளவை விட, நீர்வரத்து அதிகமாக இருப்பதால் நீர்மட்டமும் வெகுவாக உயர்ந்து வருகிறது. அணையின் நீர்மட்டம் 112.73 அடியிலிருந்து 113.05 அடியாகவும், நீர் இருப்பு 82.34 டிஎம்சியிலிருந்து 82.81 டிஎம்சியாகவும் உயர்ந்துள்ளது.