மும்பை: மகாராஷ்டிராவில் மின்சாரக் கட்டணம் குறைக்கப்படுவதாக அம்மாநில முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் அறிவித்துள்ளார். இதன்படி, முதல் ஆண்டில் மின்சாரக் கட்டணம் 10 சதவீதம் குறைக்கப்படும் என்றும், அடுத்த ஐந்து ஆண்டுகளில் படிப்படியாக 26 சதவீதம் கட்டணம் குறைக்கப்படும் என்றும் அறிவித்துள்ளார்
இது குறித்து தேவேந்திர பட்னாவிஸ் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘மின்சாரக் கட்டணங்கள் குறித்த நல்ல செய்தியை அறிவிக்கிறேன். மாநில வரலாற்றில் முதல் முறையாக, மின்சாரக் கட்டணங்கள் குறைக்கப்படுகிறது. முதல் ஆண்டில் 10 சதவீத கட்டணக் குறைப்புடன் தொடங்கி, அடுத்த 5 ஆண்டுகளில் மொத்தம் 26 சதவீதம் மின்சாரக் கட்டணம் குறைக்கப்படும். இந்த கட்டணக் குறைப்பு திட்டத்தை அங்கீகரித்த மகாராஷ்டிரா மின்சார ஒழுங்குமுறை ஆணையத்துக்கு நன்றி. இது வீட்டு உபயோகம், தொழில் துறை மற்றும் வணிக நுகர்வோருக்கு மிகவும் பயனளிக்கும்” என்று தெரிவித்தார்.
மாநிலத்தில் கிட்டத்தட்ட 70 சதவீத நுகர்வோர் 100 யூனிட்டுகளுக்குக் குறைவாகவே மின்சாரத்தை பயன்படுத்துவதாகவும், இந்த 10 சதவீதக் கட்டணக் குறைப்பால் அவர்கள் அதிகம் பயனடைவார்கள் என்றும் மகாராஷ்டிர முதல்வர் குறிப்பிட்டார். மேலும், விவசாயிகளுக்கு பகல்நேர மற்றும் நம்பகமான மின்சார விநியோகத்தை உறுதி செய்வதற்காக போர்க்கால அடிப்படையில் பணிகள் நடைபெற்று வருவதாகவும், வரும் காலத்தில் மின்சார கொள்முதல் ஒப்பந்தங்களில் பசுமை ஆற்றலுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுவதால், மின்சாரம் வாங்கும் செலவு குறையும் என்றும் அவர் கூறினார்.