திருப்பூர்: இன்ஸ்டாகிராம் குழுவால் திருப்பூரில் மாணவிகள் மோதல் சம்பவத்தை தொடர்ந்து, மாணவிகளுக்கு கவுன்சிலிங் தர கல்வித் துறை அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.
திருப்பூர் மாநகராட்சிப் பகுதியில் மாநகராட்சிப் பள்ளி இயங்கி வருகிறது. இந்தப் பள்ளியில் பிளஸ்-2 மற்றும் பிளஸ்-1 படிக்கும் சில மாணவிகள் சேர்ந்து இன்ஸ்டாகிராமில் குழு ஆரம்பித்து சமூக வலைத்தளங்களில் போட்டோ மற்றும் வீடியோக்களை பதிவிட்டு வந்துள்ளனர். அதேபோல், திருப்பூரில் இருந்து 10 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள அரசுப் பள்ளி மாணவிகளும் இதுபோலவே இன்ஸ்டாகிராமில் குழு தொடங்கி தங்கள் பதிவுகளை போட்டு வந்துள்ளனர்.
ஒரு கட்டத்தில் இரு குழுக்களும் இடையில் யாருடைய குழு பெரியது என்ற மோதல் ஏற்பட்டுள்ளது. இன்ஸ்டாகிராமில் சண்டை முற்றியதில், கோபமடைந்த திருப்பூர் மாநகராட்சிப் பள்ளியைச் சேர்ந்த மாணவிகள் சுமார் 50-க்கும் மேற்பட்டவர்கள் 10 கிலோமீட்டர் தொலைவில் உள்ள அரசுப் பள்ளிக்கு பேருந்தில் வந்துள்ளனர். பின்னர், அந்தப் பள்ளி மாணவிகளிடம் திருப்பூரில் இருந்து சென்ற மாணவிகள், சாலையிலேயே சண்டை போட்டுள்ளனர். இந்த சண்டை பெரிதானதில் அந்த சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
அப்போது சாலையோரத்தில் இருந்தவர்கள் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிடவே அது வைரலானது. மாணவிகள் தாக்கிக் கொள்வதைப் பார்த்து பொதுமக்கள் அதை தடுக்க முற்பட்டுள்ளனர். தடுக்க முற்பட்டவர்களுடன் மாணவிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து பள்ளி நிர்வாகத்துக்கும், காவல்துறைக்கும் தகவல் கிடைக்க போலீஸாரும், பொதுமக்களும் சேர்ந்து மாணவிகளை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்துள்ளனர்.
திருப்பூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் (பொ) காளிமுத்து கூறும்போது, “இரு தரப்பு மாணவிகளின் கல்வி பாதிக்காத வகையில், அவர்களுக்கு கவுன்சிலிங் தர பள்ளித் தலைமை ஆசிரியர்களிடம் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுதொடர்பாக மாணவிகளின் இன்று (ஜூன் 27) பெற்றோரை வரவழைத்து பேசவுள்ளோம் என்றார். இன்ஸ்டாகிராம் குழுவால் மாணவிகள் குழுவாக சேர்ந்து சாலையில் தாக்குதலில் ஈடுபடும் வீடியோ, தற்போது சமூகவலைதளங்களில் பலரும் பதிவிட்டு விமர்சிக்கின்றனர்.
இது தொடர்பாக மனநல சிகிச்சையாளர் வெ.சிவராஜ் கூறும்போது, “இன்றைக்கு அடையாளத்துடன் வாழ ஒவ்வொருவரும் ஆசைப்படுகிறோம் அல்லது சமூகத்தில் பழக்கப்படுத்தப்படுகிறோம். முதல் மதிப்பெண் பெறு என பெற்றோர்கள் வற்புறுத்தும் போது, குழந்தைகள் எந்த வழியிலாவது மதிப்பெண் பெற முயல்கிறார்கள். பள்ளி மற்றும் வீடுகளில் அவர்களது தனித்துவத்தை வெளிக்கொண்டுவர வேண்டும்.
அதாவது போட்டி உலகம் என்று சொல்லாமல், உனக்கான உலகம் இது என்று சொல்லி பழக்க வேண்டும். போட்டித்தேர்வு அல்ல; சுய தேர்வு தான். சமூக வலைதளங்களான ’இன்ஸ்டா’ உள்ளிட்டவையில், வீடியோக்கள் போட்டு அதன் மூலம், எளிதில் தங்களை பிரபலப்படுத்திக்கொள்ள பலரும் ஆசைப்படுகிறார்கள்.
ஐஏஎஸ், ஐபிஎஸ் மற்றும் மத்திய, மாநில அரசுத் துறையின் உச்சப்பட்ச பொறுப்பில் கஷ்டப்பட்டு வேலைக்கு சேர்பவர்கள் ஒருபக்கம் என்றால், சோசியல் மீடியாக்கள் மூலம் எளிதாக வீடியோக்கள் வெளியிட்டு பிரபலமடைவர்கள் மற்றொரு பக்கம். இந்த போக்கு சமூகத்தில் அதிகரித்துள்ளது. இதனை பள்ளிகளும், வீடுகளில் இருப்பவர்களும் கவனித்து மனம் மாற்றினால் தான், இன்றைக்கு ’ரீல்ஸ்’ மோக பிரச்சினைகளை தீர்க்க முடியும்” என்றார்.