புதுடெல்லி: உலகின் மிகச் சிறந்த போர் விமானமாக அமெரிக்காவின் பி-2 விமானம் கருதப்படுகிறது. மொத்தம் 172 அடி அகலம், 69 அடி நீளமுடைய இந்த விமானத்தை ரேடாரில் கண்டறிய முடியாது. அணு குண்டுகளை சுமந்து செல்லும் திறன் கொண்டது. தொடர்ந்து 11,000 கி.மீ. வரை தரையிறங்காமல் பறக்கும். இந்த பி-2 ரகபோர் விமானங்கள் வேறு எந்த நாட்டிடமும் இல்லை, அந்தளவுக்கு உலகிலேயே மிக சக்தி வாய்ந்த பி-2 ரக விமான வடிவமைப்பில் இந்தியர் ஒருவர் உதவி செய்து, பின்னர் உளவு பார்த்த வழக்கில் சிறை தண்டனை பெற்றுள்ளார். ஈரான் மீது பி-2 விமானம் தாக்குதல் நடத்திய நிலையில், தற்போது அவருடைய தகவல்கள் மீண்டும் வலம் வந்துள்ளன.
அதன் விவரம் வருமாறு:கடந்த 1944-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 11-ம் தேதி மும்பையில் பிறந்தவர் நோஷிர் ஷெரியார்ஜி கவுடியா. பார்சி குடும்பத்தில் பிறந்த கவுடியா சிறு வயதிலேயே மிகவும் புத்திசாலியாக இருந்தார். தனது 15-வது வயதிலேயே பிஎச்.டி பட்டத்துக்கு நிகரான பட்டம் பெற்றுள்ளார். அதன்பிறகு 19-வது வயதில் ஏரோநாட்டிக்கல் இன்ஜினீயரிங் படிப்பதற்காக அமெரிக்காவுக்கு சென்றுள்ளார்.
பின்னர் வெர்ஜினியாவில் உள்ள நார்த்ராப் என்ற நிறுவனத்தில் பணியில் சேர்ந்தார். இந்த நிறுவனம் விண்வெளி கருவிகள் மற்றும் ஆயுதங்களை உற்பத்தி செய்து வந்தது. அங்குதான் பி-2 விமான வடிவமைப்பில் கவுடியா ஈடுபட்டுள்ளார். குறிப்பாக பி-2 விமானத்தின் உந்து சக்தி பிரிவுக்கு உதவியுள்ளார்.
பின்னர் நார்த்ராப் நிறுவனத்தில் இருந்து விலகி சொந்தமாக பாதுகாப்புத் ஆலோசனை நிறுவனத்தை தொடங்கி உள்ளார். அவர் லாஸ் அலமோஸில் அமெரிக்க உளவு நிறுவனம் சிஐஏ விமானங்கள் மற்றும் அணு ஆயுதங்கள் குறித்து ஆலோசனை வழங்கினார்.
மேலும் 1999-ம் ஆண்டு, என்.எஸ் கவுடியா என்ற பெயரில் நிறுவனத்தைத் தொடங்கினார். நிறுவனத்தின் திட்டங்களை செயல்படுத்த நிறைய பணம் தேவைப்பட்டதால், வெளிநாடுகளில் இருந்து வாடிக்கையாளர்களை தேடினார். அப்போதுதான் அவர் சீனாவுடன் தொடர்பை ஏற்படுத்தினார்.
மூன்று முறை சீனாவுக்கு சென்று வந்த கவுடியா, பி-2 விமானத்துக்குப் பயன்படுத்தும் உந்து சக்தி பற்றிய தகவல்களை வழங்கி உள்ளார். அந்த தகவல்களை வைத்து ரேடாரில் சிக்காத போர் விமான தயாரிப்பில் சீனா ஈடுபட்டது. அப்போது கவுடியாவுக்கு ஒரு லட்சத்து 10 ஆயிரம் அமெரிக்க டாலரை சீனா வழங்கியதாக கூறப்படுகிறது.
அடுத்த சில ஆண்டுகளில் அமெரிக்காவின் பி-2 விமானத்தை போலவே சீன விமான தளங்களில் போர் விமானம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததை செயற்கைக் கோள்கள் புகைப்படம் எடுத்து காட்டின. இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதன்பின் உஷாரான அமெரிக்க புலனாய்வு அமைப்பு எப்பிஐ, ஹவாயில் தங்கியிருந்த கவுடியாவை கடந்த 2005-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 26-ம் தேதி கைது செய்தது.
அவர் மீது தேசிய பாதுகாப்பு ரகசியங்களை வெளிநாடுகளுக்கு விற்றது, ஆயுதங்கள் ஏற்றுமதி கட்டுப்பாடு சட்டத்தை மீறியது, உளவு பார்த்தது போன்ற 14 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. இந்த வழக்குகளில் கவுடியாவுக்கு கடந்த 2011-ம் ஆண்டு ஜனவரி 24-ம் தேதி 32 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. தற்போது அவர் அமெரிக்காவின் கொலராடோவின் பிளாரன்ஸ் சிறையில் தண்டனை அனுபவித்து வருகிறார். அவருக்கு வயது 81 ஆகிறது.