சென்னை: போதைப் பொருள் கடத்தலை ஒழிப்பதில் சிறப்பாக பணியாற்றிய 15 காவல் துறை அதிகாரிகளுக்கு சுதந்திர தின விழாவில் முதல்வர் ஸ்டாலின் விருது வழங்கி கவுரவிக்க உள்ளார்.
மாநிலத்தில் போதைப் பொருள் உற்பத்தி மற்றும் சட்ட விரோத கடத்தலை ஒழிப்பதில் சிறந்து விளங்கிய காவல் துறை அதிகாரிகளுக்கு ‘தமிழக முதல்வரின் காவல் பதக்கம்’ கடந்த 2023-ம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது. இந்த பதக்கங்களின் எண்ணிக்கை 5-ல் இருந்து 15 ஆக உயர்த்தப்படும் என கடந்த சட்டப்பேரவை கூட்டத்தொடரில் மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை மானிய கோரிக்கையில் அறிவிக்கப்பட்டது.
இந்த அறிவிப்பை செயல்படுத்தும் விதமாக, கடந்த 6-ம் தேதி அரசாணை வெளியிடப்பட்டது. அதன் அடிப்படையில், டிஜிபி பரிந்துரையின்படி, தமிழகம் முழுவதும் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 15 காவல் துறை அதிகாரிகளுக்கு பதக்கம் வழங்க முதல்வர் ஸ்டாலின் ஆணை பிறப்பித்துள்ளார்.
அதன்படி, சிவகங்கை காவல் கண்காணிப்பாளர் ஆசிஷ் ராவத், காவல் ஆய்வாளர்கள் மாரிமுத்து (மேலூர்), வசந்தகுமார் (பெருமாநல்லூர்), ராஜாசிங் (சென்னை), ராதாகிருஷ்ணன் (சென்னை), எம்.சி.ரமேஷ் (அம்பத்தூர்), பாபு சுரேஷ் குமார் (சேலம்), அன்பரசி (சென்னை), சி.முருகன் (மதுரை), காவல் உதவி ஆய்வாளர்கள் ந.தனபாலன் (போத்தனூர்), இரணியன் (வலிவலம்), கதிரேசன் (குமளி), சிறப்பு காவல் உதவி ஆய்வாளர்கள் எம்.சுசீந்திரன் (திண்டுக்கல்), சு.ரமேஷ் (சென்னை), குருசாமி (சென்னை) ஆகிய 15 பேருக்கும் வரும் சுதந்திர தின விழாவின்போது முதல்வர் ஸ்டாலின் விருது வழங்கி கவுரவிக்க உள்ளார்.