கடந்த இரண்டு தேர்தல்களாக கிட்டத்தட்ட கோவை மாவட்டத்தின் அனைத்துத் தொகுதிகளையும் தன்வசப்படுத்தி வைத்திருக்கிறது அதிமுக கூட்டணி. அதை உடைக்க இம்முறை பலகணக்குகளைப் போட்டு வருகிறது திமுக. 2021-ல் கோவை மாவட்டத்தில் ஒரு தொகுதியைக்கூட பெறமுடியாத திமுக கூட்டணி, மக்களவைத் தேர்தலிலும் உள்ளாட்சி தேர்தலிலும் கிட்டத்தட்ட நூற்றுக்கு நூறு வெற்றியை அள்ளியது. அதற்கும் காரணம், முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜியின் தேர்தல் வியூகங்கள் எனச் சொல்லப்பட்டது. ஆனால், அதுமட்டுமே காரணமாக இருந்தால் இம்முறை 10 தொகுதிகளையும் திமுக கைப்பற்றியாக வேண்டும். ஆனால், கோவையின் கள நிலவரம் அப்படி இல்லை என்பதே யதார்த்தம்.
இதுகுறித்து நம்மிடம் பேசிய கோவையைச் சேர்ந்த அரசியல் பார்வையாளர்கள், “இந்த மாவட்ட மக்களின் அபிமானத்தைப் பெறுவதற்காக கோவைக்கென சிறப்புத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது திமுக அரசு. ஆனால், அப்படி இருந்தும் கோவை மக்களில் பெரும்பகுதியினர் இன்னமும் அதிமுக மனநிலையிலேயே இருக்கிறார்கள்.
இதற்குக் காரணம், இங்கு பெருவாரியாக வசிக்கும் கொங்கு வேளாளக் கவுண்டர் சமூகத்தினர். எஃப்சி பட்டியலில் இருந்த இவர்களை பிற்படுத்தப்பட்டோர் பட்டியலுக்குள் கொண்டு வந்தது கருணாநிதி அரசு தான் என்றாலும் இந்த மக்கள் திமுக மீது ஏனோ பற்றுதல் இல்லாமல் இருக்கிறார்கள். திமுக-வுக்கென செல்வாக்கான முகம் யாரும் இந்த மாவட்டத்தில் இல்லாமல் போனதும் இதற்கு முக்கியக் காரணம்.
கோவை தொழில்துறையில் கொங்கு வேளாளக் கவுண்டர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் பெருவாரியாக கோலோச்சுகிறார்கள். தேர்தல் நேரத்தில் இவர்கள் சத்தமில்லாமல் செய்யும் திரைமறைவு வேலைகள் தேர்தல் முடிவுகளையே தலைகீழாக மாற்றிவிடும். 2021 தேர்தலில் பாஜக வேட்பாளரான வானதி சீனிவாசனை கோவை தெற்கில் ஜெயிக்கவைக்க இவர்கள் எடுத்துக் கொண்ட முயற்சிகள் ஏராளம். இவர்கள் அனைவருமே, தாங்களோ தங்களைச் சார்ந்தவர்களோ தான் அரசியல் அதிகாரத்திலும் இருக்க வேண்டும் என நினைக்கிறார்கள். அப்படி நினைப்பவர்களின் ஒரே சாய்ஸ் அதிமுக-வாகத்தான் இருக்கிறது.
திமுக-விலும் தங்கள் சமூகத்தைச் சேர்ந்தவர்களே வேட்பாளராக நிறுத்தப்பட்டாலும் எடப்பாடி பழனிசாமி, எஸ்.பி.வேலுமணி, தங்கமணி உள்ளிட்டவர்கள் தங்கள் சமூகத்தின் அசைக்கமுடியாத அரசியல் ஆளுமைகளாக இருப்பதால் அவர்களை இவர்கள் கொண்டாடுகிறார்கள். எதுவாக இருந்தாலும் நம்மவர்களிடம் பேசி சாதித்துக் கொள்ளலாம். திமுக வந்தால் அவர்களிடம் போய் கைகட்டி நிற்கமுடியாது என்ற எண்ணவோட்டம் தொழில் துறையில் இருக்கும் கொங்கு வேளாளக் கவுண்டர் சமூகத்தினருக்கு இருக்கிறது. கோவை அதிமுக கோட்டையாக மாறிப் போனதற்கு இது தான் பிரதான காரணம்” என்றார்கள்.
கோவை அதிமுக கோட்டையாக இருப்பதற்கு இப்படி ஒரு காரணம் சொல்லப்பட்டாலும் இம்முறை அந்தக் கோட்டையில் ஓட்டை போடவும் சில பல கணக்குகளைப் போட்டு வருகிறது திமுக. இதுகுறித்து நம்மிடம் பேசிய கோவை திமுக நிர்வாகிகள் சிலர், “இங்கு கொங்கு வேளாளக் கவுண்டர்கள் தான் வெற்றி தோல்வியை தீர்மானிக்கிறார்கள் என்பது ஓரளவுக்கு உண்மைதான். இது தெரிந்து தான் அந்த சமூகத்தினர் கணிசமாக வசிக்கும் புறநகர் பகுதிகளை விட்டுவிட்டு நகர் பகுதிக்குள் வரும் கோவை வடக்கு, தெற்கு, சிங்காநல்லூர், கவுண்டம்பாளையம் ஆகிய நான்கு தொகுதிகளை இம்முறை குறிவைத்திருக்கிறோம்.
கடந்த முறை இந்த நான்கு தொகுதிகளிலும் சுமார் பத்தாயிரத்துக்கும் குறைவான வாக்குகள் வித்தியாசத்தில் தான் திமுக தோற்றது. இந்தத் தொகுதிகளில் குறிப்பிட்ட இந்த சமூகம் தான் கணிசமாக இருக்கிறது என்று சொல்லமுடியாத அளவுக்கு அனைத்து சாதியினரும் பரவலாக வசிக்கிறார்கள். திமுக ஆதரவு மலையாளிகள் உள்ளிட்ட மொழிச் சிறுபான்மையினரும் இந்தத் தொகுதிகளில் குறிப்பிடும் படியாக இருக்கிறார்கள்.
இதெல்லாம்தான் இந்த நான்கு தொகுதிகளிலும் திமுக-வுக்கு கணிசமான வாக்குகளை விழவைத்திருக்கிறது. இம்முறை 10 தொகுதிகளையும் வென்றெடுக்க வேண்டும் என்பது தலைமையின் கட்டளையாக இருந்தாலும் குறிப்பிட்ட இந்த நான்கு தொகுதிகளையாவது கட்டாயம் கைப்பற்றியாக வேண்டும் என்ற திட்டத்தில் இருக்கிறோம்” என்றனர்.
கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, கரூர், திண்டுக்கல் மாவட்டங்களை உள்ளடக்கிய கொங்கு மண்டலத்தில் 64-க்கும் மேற்பட்ட சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. இதில் 24 தொகுதிகளில் மட்டுமே கடந்த முறை திமுக வெற்றி பெற்றது.
இம்முறை இந்த மண்டலத்தில் முப்பதுக்கும் மேற்பட்ட தொகுதிகளில் வாகை சூட கணக்குப் போடும் திமுக-வினர், “கொங்கு வேளாளக் கவுண்டர் சமூகத்தில் பெண்களின் கணிசமான ஆதரவு விஜய் கட்சிக்கு இருக்கிறது. ஆகவே, அதிமுக கூட்டணிக்கு விழவேண்டிய கொங்கு வேளாளக் கவுண்டர் சமூகத்துப் பெண்களின் பெருவாரியான வாக்குகள் இம்முறை தவெக-வுக்கு போகும் என எதிர்பார்க்கிறோம். எங்கள் கணிப்பு சரியாக இருந்தால் இம்முறை கொங்கு மண்டலத்திலும் திமுக கொடி பறக்கும்” என்கிறார்கள். பார்க்கலாம்!