சென்னை: திமுக மற்றும் கூட்டணி கட்சிகளின் சிண்டு முடியும் வேலை எடுபடாது. முருக பக்தர்கள் மாநாடுபோல சட்டப்பேரவை தேர்தலிலும் அதிமுக – பாஜக கூட்டணி மாபெரும் வெற்றி பெறும் என்று தமிழக பாஜக செய்தி தொடர்பாளர் ஏஎன்எஸ்.பிரசாத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: மதுரையில் நடந்த முருக பக்தர்கள் மாநாடு மாபெரும் வெற்றி பெற்றுள்ளது. வரலாறு காணாத வகையில் வெற்றி பெற்றதை பொறுத்துக்கொள்ள முடியாத திமுகவும், அதன் கூட்டணி கட்சிகளும், மாநாட்டில் ஒளிபரப்பப்பட்ட 3 நிமிட வீடியோ காட்சிகளை வைத்து அதிமுக – பாஜக இடையே சிண்டு முடியும் வேலையில் இறங்கியுள்ளனர்.
அதிமுக – பாஜக கூட்டணி, திமுகவுக்கு பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அதனால்தான், முருக பக்தர்கள் மாநாட்டில், இந்து முன்னணி கடந்து வந்த பாதையை சுட்டிக்காட்டும் 3 நிமிட வீடியோவை வைத்து, கூட்டணியை உடைக்க முடியுமா என்று பார்க்கின்றனர்.
அதிமுக – பாஜக இடையே கொள்கை வேறுபாடுகள் உள்ளன. மாற்று கொள்கை உடைய கட்சிகளுடன் கூட்டணி வைத்தாலும், எந்த கட்சியும் தங்கள் அடிப்படை கொள்கையை விட்டுக்கொடுக்க மாட்டார்கள். கொள்கை வேறு, கூட்டணி வேறு என்ற புரிதல், அதிமுக, பாஜகவுக்கு உள்ளது.
வரும் 2026 சட்டப்பேரவை தேர்தலில் திமுகவை வீழ்த்துவது மட்டுமே இரு கட்சிகளின் ஒரே நோக்கம். எனவே, திமுகவும், அதன் கூட்டணி கட்சிகளும் என்னதான் சிண்டு முடியும் வேலையில் ஈடுபட்டாலும், அவதூறுகளை பரப்பினாலும் அது எடுபடாது. முருக பக்தர்கள் மாநாடுபோல, 2026 சட்டப்பேரவை தேர்தலிலும் அதிமுக – பாஜக கூட்டணி மாபெரும் வெற்றியை பெறும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.