இங்கிலாந்து அணிக்கு எதிராக லீட்ஸ் நகரில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. 371 ரன்கள் இலக்கை துரத்திய இங்கிலாந்து அணி எந்தவித நெருக்கடியும் இல்லாமல் எளிதாக இலக்கை விரட்டி வெற்றி கண்டது.
இந்திய அணியின் முன்னணி பேட்ஸ்மேன்கள் அனைவரும் சிறந்த பங்களிப்பை வழங்கினர். ரிஷப் பந்த் இரண்டு ஆக்கப்பூர்வமான சதங்களை அடித்தார். தொடக்க வீரர்கள் (யஷஸ்வி ஜெய்ஸ்வால், கே.எல்.ராகுல்) ஒவ்வொரு இன்னிங்ஸிலும் சிறந்த சதத்தை அடித்தனர். கேப்டனாக கில்லும் தனது பங்குக்கு ஒரு சதத்தை விளாசினார்.
பந்து வீச்சில் பும்ரா முதல் இன்னிங்ஸில் 5 விக்கெட்களை வேட்டையாடினார். ஆனாலும் இந்திய அணி தோல்வியை சந்தித்து 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் 0-1 என பின்தங்கியுள்ளது. தோற்க முடியாத டெஸ்டில் இந்திய அணி தேடிச் சென்று தோல்வி அடைந்தது போன்று லீட்ஸ் போட்டி அமைந்துவிட்டது.
தாக்கத்தை ஏற்படுத்தாத நடுவரிசை பேட்டிங் மற்றும் எந்தவித பொறுப்பும் இல்லாமல் செயல்பட்ட பின்வரிசை பேட்டிங், பீல்டிங்கில் ஏறக்குறைய ஒரு டஜன் கேட்ச்களை தவறவிட்டது, டிஆர்எஸ் எடுப்பதில் செய்த தவறுகள், கேப்டனாக ஷுப்மன் கில் முக்கியமான கட்டங்களில்
செய்த பிழைகள் என இந்திய அணியின் தோல்விக்கு அடுக்கான காரணங்கள் அணிவகுக்கின்றன.
இரு இன்னிங்ஸிலும் இந்திய அணியின் பின்வரிசை பேட்டிங் வெறுமையாக இருந்தது. கடைசி 4 இடங்களில் களமிறங்கிய வீரர்கள் இரு இன்னிங்ஸிலும் கூட்டாக சேர்த்தது வெறும் 9 ரன்களே. முதல் இன்னிங்ஸில் இந்திய அணியின் கடைசி 7 விக்கெட்கள் 41 ரன்களுக்கும், 2-வது இன்னிங்ஸில் கடைசி 6 விக்கெட்கள் 31 ரன்களுக்கும் கொத்து கொத்தாக தாரை வார்க்கப்பட்டன. நடுவரிசையில் கருண் நாயர் இரு இன்னிங்ஸிலும் முறையே 0, 20 ரன்களும், ரவீந்திர ஜடேஜா 11, 25 ரன்களே எடுத்தனர். ஆல்ரவுண்டர் என்ற அடிப்படையில் விளையாடும் லெவனில் முன்னுரிமை கொடுக்கப்பட்ட ஷர்துல் தாக்குர் முதல் இன்னிங்ஸில் ஒரு ரன்னுக்கும், 2-வது இன்னிங்ஸில் 4 ரன்களுக்கும் நடையை கட்டினார்.
இது ஒருபுறம் இருக்க ‘கேட்ச்சஸ் வின் தி மேட்சஸ்’ என்ற தாரகமந்திரத்தை இந்திய வீரர்கள் கேலிக்கூத்தாக்கினர். முதல் இன்னிங்ஸில் 5 கேட்ச்கள், 2-வது இன்னிங்ஸில் 2 கேட்ச்களை தவறவிட்டனர். இதுபோக ரிஷப் பந்த், மட்டை விளிம்பில் பட்ட பந்துகள் சென்ற திசை தெரியாமல் ஒரு சில கேட்ச் வாய்ப்புகளை கைப்பற்ற தவறினார். கடந்த 20 ஆண்டுகளில் இங்கிலாந்தில் நடந்த டெஸ்டில் எந்த அணியும் இந்த அளவுக்கு கேட்ச்களை தவறவிட்டது இல்லை என்ற மோசமான சாதனையையும் படைத்துள்ளது இந்திய அணி.
அடுத்தடுத்து பந்து வீச்சில் ஷர்துல் தாக்குர், ரவீந்திர ஜடேஜா ஆகியோரிடம் இருந்து தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய அளவிலான செயல் திறன் வெளிப்படவில்லை. 371 ரன்கள் இலக்கை இங்கிலாந்து அணி துரத்திய நிலையில் ஜடேஜாவின் பந்துகளில் பென் டக்கெட் சரளமாக ரீவர்ஸ் ஸ்வீப் ஷாட்களில் பவுண்டரிகள் அடித்தார். முதல் இன்னிங்ஸில் ஜடேஜா 23 ஓவர்களை வீசி 68 ரன்களை விட்டுக்கொடுத்து விக்கெட் ஏதும் கைப்பற்றவில்லை. 2-வது இன்னிங்ஸில் 104 ரன்களை தாரை வார்த்த நிலையில் ஒரு விக்கெட் கைப்பற்றினார்.
ஷர்துல் தாக்குதர் முதல் இன்னிங்ஸில் 6 ஓவர்களில் 38 ரன்களை வழங்கினார். 2-வது இன்னிங்ஸில் 10 ஓவர்களில் 51 ரன்களை விட்டுக்கொடுத்து 2 விக்கெட் கைப்பற்றினார். ஒட்டுமொத்தமாக இரு இன்னிங்ஸிலும் இவர்கள் இருவருமே ஆல்ரவுண்டர்களாக தங்களது உயரிய பங்களிப்பை வழங்க தவறினர். பிரசித் கிருஷ்ணா இரு இன்னிங்ஸையும் சேர்த்து 5 விக்கெட்கள் கைப்பற்றிய போதிலும் இங்கிலாந்து பேட்டிங் வரிசைக்கு அவரால் பெரிய அழுத்தம் கொடுக்க முடியாமல் போனது.
முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 5 கேட்ச்களை தவறவிடாமல் இருந்திருந்தால் இங்கிலாந்து அணியை 2-வது நாள் ஆட்டத்தின் போதே குறைந்த ரன்களில் கட்டுப்படுத்தி பெரிய அளவில் முன்னிலையை பெற்றிருக்க முடியும். 2-வது இன்னிங்ஸில் இந்திய அணியின் நடுவரிசை மற்றும் பின் வரிசை பேட்டிங்கில் கை கொடுத்திருந்தால் மேற்கொண்டு 100 ரன்கள் சேர்த்து இங்கிலாந்து அணிக்கு அழுத்தம் கொடுக்க முயற்சி செய்திருக்கலாம்.
பின் வரிசை பேட்ஸ்மேன்கள் ஆட்டமிழப்பதில் தவறு இல்லை. ஆனால் எதிர் முனையில் முறையான பேட்ஸ்மேன் இருக்கும் நேரத்தில் அவருக்கு உறுதுணையாக இருப்பதற்கான வழியை கண்டறியாமல் எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தாத பந்து வீச்சுக்கு எதிராக பெரிய அளவிலான ஷாட்களை விளையாட முயன்று எளிதான முறையில் விக்கெட்களை இழப்பது என்பது பொறுப்பின்மையையே காட்டுகிறது.
அறிமுக கேப்டனாக ஷுப்மன் கில் தனது பணியை திறம்பட செய்தாரா என்பது கேள்விக்குறியே. கல்லி திசையில் பல முறை ஜெய்ஸ்வால் கேட்ச்களை தவறவிட்ட போதிலும் அவரை அங்கிருந்து மாற்றுவதற்கான எந்தவித முனைப்பையும் ஷுப்மன் கில் காட்டவில்லை. மேலும் களத்தில் ரிஷப் பந்த், கே.எல்.ராகுல் ஆகியோரே பெரும்பாலும் பீல்டிங் மற்றும் களவியூகங்கள் அமைப்பதில் பந்து வீச்சாளர்களுடன் ஆலோசனை நடத்தியதை காண முடிந்தது.
பந்து வீச்சாளர்கள், பீல்டர்கள் தவறு செய்தால் களத்திலேயே கண்டிப்புடன் செயல்பட்டு அவர்களை உத்வேகப்படுத்தி ஆட்டத்தில் துடிப்புடன் செயல்படுவதற்கான ஊக்கியாக கேப்டன் செயல்பட வேண்டும். இந்த விஷயத்தில் ஷுப்மன் கில் மென்மையாக நடந்துகொள்வது போன்று உள்ளது. வீரர்களின் ஓய்வறையில் நல்ல சூழ்நிலையும் மரியாதையும் இருப்பது சிறந்த விஷயம்தான். ஆனால் கேப்டன் பற்றி சிறிது பயமும் இருக்க வேண்டும். அதுதான் வெற்றிக்கான வேட்கையை முன்னெடுக்கும்.
இந்திய அணி தோற்க முடியாத டெஸ்டில் தோற்றதற்கு பின் வரிசை பேட்டிங் மட்டுமே முக்கிய காரணம் என்றும் கூறிவிட முடியாது. ஷுப்மன் கில் களத்தில் கேப்டனாக தீவிரமாக செயல்படவேண்டிய கட்டத்தில் சரியான வியூகங்கள் அமைக்க தவறியதும் சரிவுக்கு வழிவகுத்தது. கடைசி நாள் ஆட்டத்தில் இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு 350 ரன்கள் தேவையாக இருந்த நிலையில் பந்து வீச்சில் தொடர்ச்சியாக அழுத்தம் கொடுக்கக்கூடிய அளவிலான ஸ்பெல்லை அமைப்பதில் இந்திய அணி எந்தவித திட்டமும் இல்லாமல் செயல்பட்டது.
ஜஸ்பிரீத் பும்ரா, முகமது சிராஜ் வேகக் கூட்டணி ஒருவிக்கெட் கூட கைப்பற்ற முடியாமல் போனது ஏமாற்றமாக அமைந்தது. தொடக்கத்தில் முகமது சிராஜ் அச்சுறுத்தல் கொடுத்தார். ஆனால் 42 ஓவர்கள் முதல் 80 ஓவர்கள் வரை அவர், பந்துவீச அழைக்கப்படவில்லை. மேலும் ஜஸ்பிரீத் பும்ரா கடைசியாக 65-வது ஓவரை வீசினார். அதன் பின்னர் ஆட்டத்தின் இறுதிப் பகுதியில்அவர், வெளியே அமர்ந்திருந்தார். பந்துவீச உள்ளே வரவில்லை.
இங்கிலாந்து அணி 82-வது ஓவரில்தான் வெற்றியை எட்டியது. இந்த 17 ஓவர்களில்தான் இங்கிலாந்து அணி 85 ரன்களை விளாசியது. தொடரில் இந்திய அணி 0-1 என பின்தங்கி இருக்கும் நிலையில் 2-வது டெஸ்ட் போட்டி வரும் ஜூலை 2-ம் தேதி பர்மிங்காமில் தொடங்குகிறது. போதுமான ஓய்வு உள்ளதால் இந்த போட்டிக்கு கேப்டன் ஷுப்மன் கில்லும், பயிற்சியாளர் கவுதம் கம்பீரும் புதிய வியூகங்களை வகுப்பது அவசியம்.