திருச்சி: திருச்சி விமான நிலையத்தில் இருந்து துபாய், சார்ஜா செல்லும் விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
ஈரான்- இஸ்ரேல் போர் பதற்றம் காரணமாக வளைகுடா நாடுகளுக்கான வான் எல்லைகள் மூடப்பட்டுள்ளன. இதனால் திருச்சியில் இருந்து வளைகுடா நாடுகளுக்குச் செல்லும் விமான போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சூழலில், சார்ஜா, துபாய் செல்லும் விமானங்கள் இன்று (ஜூன் 24) திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளதால் பயணிகள் அவதிக்கு உள்ளாகியுள்ளனர்.
இன்று அதிகாலை 4 மணிக்கு துபாயில் இருந்து புறப்பட்டு திருச்சி விமான நிலையம் வரும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. இதேபோல திருச்சி விமான நிலையத்தில் இருந்து இன்று மதியம் 1.55 மணிக்கு துபாய் செல்லும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான சேவையும் ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும், திருச்சி விமான நிலையத்தில் இருந்து இன்று அதிகாலை 4 மணிக்கு சார்ஜா செல்ல வேண்டிய ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.
இந்த பகுதிகளுக்கு மீண்டும் விமானங்கள் எப்போது விமானங்கள் இயக்கப்படும் என்ற அறிவிப்பு வெளியிடப்படவில்லை. இதனால் திருச்சி விமான நிலையத்தில் இருந்து வளைகுடா நாடுகளுக்கு செல்லவிருக்கும் பயணிகள் செய்வதறியாது திகைத்து வருகின்றனர்.