கொடைக்கானல்: கொடைக்கானலில் மழைக்காலத்தில் மண் சரிவு ஏற்படும் அபாயம் இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், வரும் ஜூலை 1 -ம் தேதி முதல் மண் அள்ளும் இயந்திரம், ஆழ்துளை கிணறு தோண்டும் வாகனங்களை பயன்படுத்த தடை விதித்து கோட்டாட்சியர் திருநாவுக்கரசு உத்தரவிட்டுள்ளார்.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலைப்பகுதியில் மண் அள்ளும் இயந்திர (ஜேசிபி) வாகனங்கள், பாறைகளுக்கு வெடி வைப்பது, ஆழ்துளை கிணறு அமைப்பது ஆகியவற்றுக்கு தடை உள்ளது. இருந்தும் பல்வேறு பகுதிகளில் கட்டுமானப் பொருட்களை அகற்றுவதற்கும், விவசாய நிலம் உட்பட பிற வகை நிலங்களை சமன் செய்வதற்காகவும் அனுமதியில்லாமல் மண் அள்ளும் இயந்திரம் (ஜேசிபி) உள்ளிட்ட கனரக வாகனங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
கடந்த சில ஆண்டுகளாக விவசாய நிலங்கள் அழிக்கப்பட்டு, சட்டத்துக்கு புறம்பாக காட்டேஜ்கள், ரிசார்ட்கள் அதிகளவில் கட்டப்பட்டு வருகின்றன. இந்நிலையில் கொடைக்கானலில் மழைக்காலத்தில் நிலச்சரிவு ஏற்படும் அபாயம் இருப்பதாக பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது. இதையடுத்து, வரும் ஜூலை 1-ம் தேதி முதல் மண் அள்ளும் இயந்திரம், ஆழ்துளை கிணறும் தோண்டும் வாகனங்கள் பயன்படுத்த தடை விதித்து கோட்டாட்சியர் திருநாவுக்கரசு உத்தரவிட்டுள்ளார்.
இது குறித்து இன்று (ஜூன் 24) கோட்டாட்சியர் திருநாவுக்கரசு, செய்தியாளர்களிடம் கூறியதாவது: “கொடைக்கானல் மலைப்பகுதியில் விதிகளை மீறி மண் அள்ளும் இயந்திரம், பாறைகளை துளையிடும் மற்றும் ஆழ்துளை கிணறு அமைக்கும் வாகனங்களின் பயன்பாடு அதிகரித்து வருகிறது. ஜூன் 30-ம் தேதிக்குள் இந்த வாகனங்களை கொடைக்கானலில் இருந்து கீழே இறக்க வேண்டும். ஜூலை 1-ம் தேதி முதல் தடை செய்யப்பட்ட இந்த வாகனங்களை பயன்படுத்தினால், வாகனத்தை இயக்குபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், ஒரு முறை அபராதம் விதிக்கப்படும்.
மீண்டும், பயன்படுத்தினால் அந்த வாகனத்தை பறிமுதல் செய்வதுடன் காவல்துறை மூலம் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். தடை செய்யப்பட்ட வாகனங்களை பயன்படுத்துவதற்கு அரசு அதிகாரிகள் உதவினால் அவர்கள் மீதும் துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும். சென்ற 2 மாதங்களில் அனுமதியின்றி இயக்கிய மண் அள்ளும் இயந்திரம், ஆழ்துளை கிணறு அமைக்கும் வாகனங்களுக்கு ரூ.9 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது,” என்று அவர் கூறினார்.