இந்தியா – இங்கிலாந்து டெஸ்ட் தொடர் ஹெட்டிங்லியில் உள்ள லீட்ஸ் மைதானத்தில் கடந்த 20-ம் தேதி தொடங்கியது. முதல் ஆட்டத்தின் 3-ம் நாள் முடிவில் போட்டியில் எந்த ஒரு முடிவும் சாத்தியம் என்பது போல் பரபரப்பான கட்டத்தில் உள்ளது. பும்ரா 5 விக்கெட்டுகளைச் சாய்த்தார். ஆனால், எதிர்முனையில் இவருக்கு சரியான ஆதரவு பவுலர் இல்லை. இது இந்தத் தொடரில் இந்திய அணிக்குப் பெரிய தலைவலியாக மாற வாய்ப்புள்ளது.
அவர் காயமடைந்தார் என்றால் இங்கிலாந்து பேட்டர்கள் நிச்சயம் இந்திய பவுலிங்கை துவைத்து எடுத்து விடுவார்கள். இந்திய அணியின் பீல்டிங்கும் சிறப்பாக இல்லை. ஜடேஜாவே கேட்சை விடுகிறார், ரன்களைக் கொடுக்கிறார். என்ன செய்வது? பும்ராவின் உடற்தகுதி பற்றி பெரிய ரகசியம் காக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:
“மக்கள் என்ன எழுதுகிறார்கள் என்பதை நான் கட்டுப்படுத்த முடியாது. அவர்கள் என்னைப் பற்றி என்ன எழுத வேண்டும் என்பதை நான் அவர்களுக்கு சொல்லிக் கொடுக்கவும் முடியாது. அனைவரும் விரும்புவதை எழுத சுதந்திரம் உள்ளவர்கள். கிரிக்கெட் நம் நாட்டில் புகழ்பெற்ற விளையாட்டு என்பதை நான் அறிவேன். என்னைத் தலைப்புச் செய்தியாக்கினால் நிறைய பேர் படிப்பார்கள் என்பதையும் நான் அறிவேன். ஆனால், கடைசியில் இது பற்றியெல்லாம் எனக்குக் கவலையில்லை.
இதையெல்லாம் நான் என் மண்டையில் ஏற்றிக் கொண்டால் நானே அவற்றையெல்லாம் நம்ப ஆரம்பிப்பேன். நான் என் நம்பிக்கை என்ன சொல்கிறதோ அதன் படி நடப்பவன். அடுத்தவர் என்னை எப்படி ஆட வேண்டும் என்று சொல்கிறார்களோ அப்படி ஆடுபவன் அல்ல.
இந்தியாவுக்காக நான் என் நம்பிக்கையில் ஆடுகிறேன். ஒவ்வொரு வடிவத்திலுமே நான் என் நம்பிக்கையில்தான் ஆடுகிறேன். இல்லை உன்னால் முடியாது என்று சிலர் கூறினார்கள். இல்லை 6 மாத காலம்தான் தாக்குப் பிடிப்பாய் என்றார்கள், பிறகு 8 மாதத்திற்கு மேல் உன்னால் உடல்தகுதியைத் தக்க வைக்க முடியாது என்றார்கள். ஆனால், இவை எல்லாவற்றையும் கேட்டுக்கொண்டே நானும் 10 ஆண்டுகள் சர்வதேச கிரிக்கெட்டில் ஆடி விட்டேன். ஐபிஎல் தொடரில் 12-13 ஆண்டுகள் ஆடி விட்டேன்.
ஆனால், இப்போதும் காயமடைந்தால் அவ்வளவுதான் இனி முடியாது என்கின்றனர். நான் இதையெல்லாம் சிந்திக்காமல் என் கடன் பணி செய்து கிடப்பதே என்று இருக்கிறேன். ஒவ்வொரு 3-4 மாதங்களிலும் என் காயம் பற்றி தலைப்புச் செய்திகள் வருகின்றன. எனக்கு எதுவரை நிர்ணயிக்கப்பட்டுள்ளதோ அது வரை நான் ஆடத்தான் செய்வேன்.
நன்றாகத் தயார்படுத்திக் கொள்கிறேன். மற்றவற்றைக் கடவுளிடம் விட்டு விடுகிறேன். கடவுள் எனக்கு என்ன நன்மைகளை அளித்துள்ளாரோ அதை முன்னோக்கி சுமந்து செல்வேன். இந்திய கிரிக்கெட்டை முன்நோக்கி இட்டுச் செல்வேன்.
எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்று தெரியாது. அந்தக் கணத்தில் மைதானத்தில் இருக்கிறேன் அவ்வளவுதான். அங்கு எனக்கு பணி இருக்கிறது. இப்போதைக்கு பிட்ச் எப்படி உள்ளது என்பதை மதிப்பாய்வு செய்கிறேன். என்ன நடக்கிறது என்பதை ஆராய்கிறேன். என்னுடைய தெரிவுகள் என்ன? பிட்ச் எப்படி நடந்து கொள்கிறது, எதிரே இருக்கும் பேட்டர் யார், அவர் இப்போது என்ன சிந்திக்கிறார், அவரை வீழ்த்த நான் என்ன செய்ய வேண்டும்? இவற்றையெல்லாம் இப்போது பார்த்து வருகிறேன்.
இன்னும் எத்தனை போட்டிகளில் நான் ஆடுவேன், என் எதிர்காலம் பற்றியெல்லாம் என் சிந்தனை இப்போது இல்லை. இப்போதைக்கு டெஸ்ட் கிரிக்கெட் தான் முக்கியம். அது முடிந்த பிறகுதான் மற்றவையெல்லாம். ஒவ்வொரு இரவும் என்னை நோக்கி ஒரு கேள்வியை எழுப்பிக் கொள்வேன். நான் என்னில் சிறந்தவற்றை பங்களிப்புச் செய்கிறேனா என்பதுதான் அந்தக் கேள்வி. இதற்குப் பதில் ‘ஆம்’ என்றால் நான் நிம்மதியாகத் தூங்கச் செல்வேன்” இவ்வாறு கூறினார் பும்ரா.