சென்னை: டாஸ்மாக் முறைகேடு தொடர்பான விவகாரத்தில் தொடர்பு இருப்பதாக கூறி திரைப்பட தயாரிப்பாளரான ஆகாஷ் பாஸ்கரன், தொழிலதிபர் விக்ரம் ரவீந்திரன் ஆகியோரது வீடுகள், அலுவலகங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வீடு, அலுவலகங்களுக்கு சீல் வைத்தனர்.
அமலாக்கத்துறையின் இந்த நடவடிக்கைக்கு எதிராக இருவரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுக்கள் மீதான விசாரணை ஏற்கெனவே நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், வி.லட்சுமி நாராயணன் ஆகியோர் அடங்கிய அமர்வில் நடந்தது.
அப்போது வீடு மற்றும் அலுவலகங்களுக்கு சீல் வைக்கும் அதிகாரம் அமலாக்கத்துறைக்கு உள்ளதா என நீதிபதிகள் கேள்வி எழுப்பிய நிலையில், அவ்வாறு சீல் வைக்கும் அதிகாரம் அமலாக்கத்துறைக்கு இல்லை என தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் நீதிபதிகள் நேற்று பிறப்பித்துள்ள இடைக்கால உத்தரவில், ‘‘டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக மனுதாரர்களுக்கு எதிராக எந்த ஆதாரங்களும் அமலாக்கத்துறையினரால் தாக்கல் செய்யப்படவில்லை, அப்படியிருக்கும்போது ஆதாரமின்றி அவர்களின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் சோதனை நடத்தவும், மின்னணு சாதனங்களை பறிமுதல் செய்யவும் அமலாக்கத்துறைக்கு அதிகாரம் இல்லை.
இந்த சோதனையின் அடிப்படையில், மனுதாரர்களுக்கு எதிராக அமலாக்கத்துறை மேல் நடவடிக்கை எடுக்க இடைக்கால தடை விதிக்கிறோம். பறிமுதல் செய்யப்பட்ட மின்னணு சாதனங்களை அவர்களிடம் திருப்பி ஒப்படைக்க வேண்டும்’’ என உத்தரவிட்டு விசாரணையை 4 வார காலத்துக்கு தள்ளி வைத்துள்ளனர்.
மேல்முறையீடு செய்ய ஏதுவாக இடைக்கால தீர்ப்பை நிறுத்தி வைக்க அமலாக்கத்துறை வழக்கறிஞர் என்.ரமேஷ் கோரிக்கை விடுத்தார். ஆனால் அந்த கோரிக்கையை ஏற்க நீதிபதிகள் மறுத்து விட்டனர்.