காஞ்சிபுரம் நகரத்தின் நடுவே அமைந்துள்ள மஞ்சள் நீர் கால் வாய் நகரப்பகுதி குடியிருப்புகளின் கழிவுநீர் மற்றும் மழைநீர் வடிகால்வாயாக விளங்கி வருகிறது. ஒக்கப்பிறந்தான் குளத்திலிருந்து வெளியேறும் உபரிநீர், நகரத்தின் நடுவே உள்ள விவசாயிகளின் பாசனத்தேவையை பூர்த்தி செய்து, நத்தப்பேட்டை ஏரியை சென்றடையும் வகையில் மன்னர்கள் காலத்தில் கட்டமைக்கப்பட்டதாக தெரிகிறது. எனினும், ஒக்கப்பிறந்தான் குளத்தின் ஆக்கிரமிப்புகள் காரணமாக நீர்வரத்து இன்றியும் நகரின் பல்வேறு பகுதிகளில் இருந்து வெளியேற்றப்படும் சாயப்பட்டறை கழிவுநீரும் இந்த கால்வாயில் வெளியேற்றப்பட்டு வருகிறது.
நகரப்பகுதியில் உள்ள குடியிப்புகளின் கழிவுநீர் மற்றும் சாலைகளில் தேங்கும் மழைநீர் வெளியேறி நத்தப்பேட்டை ஏரியை சென்றடைகிறது. இதனால், ஏரியின் நீர் மாசடைந்துள்ளது. இதனால், மஞ்சள் நீர் கால்வாயில் கழிவுநீர் மற்றும் பிளாஸ்டிக் கழிவுகள் கலப்பதை தடுத்து, கால்வாயை சீரமைக்க வேண்டும் என உள்ளூர் மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
இந்நிலையில், மஞ்சள்நீர் கால்வாயை சீரமைப்பதற்காக மாநகராட்சி நிர்வாகம் ரூ.40 கோடி நிதி ஒதுக்கியது. இதன்மூலம், 6 கி.மீ. நீளம் கொண்ட மஞ்சள்நீர் கால்வாயின் இருபுறங்களிலும் கான்கிரீட் தடுப்பு சுவர் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனால், திருக்காலிமேடு செல்லும் பிரதான சாலையோரம் உள்ள கால்வாயின் கரையோரத்தில் உள்ள குடியிருப்புகளில் இருந்து வெளியேறும் கழிவுநீரை, கால்வாயில் விடுவதற்காக சாலையை உடைத்து அமைக்கப்பட்ட குழாய்கள், கரையின் அருகே துண்டிக்கப்பட்டன. மேலும், அப்பகுதியில் கான்கிரீட் சுவர்களும் அமைக்கப்பட்டுள்ளன.
ஆனால், துண்டிக்கப்பட்ட கழிவுநீர் குழாய்களில் இருந்து தொடர்ந்து வெளியேறி வருகிறது. இவ்வாறு வெளியேறும் கழிவுநீர் சாலையில் ஆங்காங்கே குட்டைபோல் தேங்குவதால் கடும் துர்நாற்றத்துடன் சுகாதாரசீர் கேடு ஏற்பட்டுள்ளது. மழையின் போது, கழிவுநீர் சாலையில் வழிந்தோடுவதால் நோய் தொற்று ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும், வாகன போக்குவரத்து மிகுந்த இந்த சாலையில் கழிவுநீர் தேங்கி நிற்பதால் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்கள் சிரமத்துடன் செல்லும் நிலை உள்ளது. அவ்வப்போது வாகன விபத்துகளும் ஏற்படுகிறது.
அதனால், கழிவுநீரை வெளியேற்றும் குடியிருப்பாளர்கள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு அபராதம் விதித்து, கழிவுநீர் குழாய்களை வீட்டின் அருகே துண்டிக்க வேண்டும் மற்றும் கால்வாயின் அருகே உள்ள சிறிய கழிவுநீர் குட்டைகளை மூடவேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து, காஞ்சிபுரம் மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது: மஞ்சள்நீர் கால்வாயில் கான்கிரீட் தடுப்புசுவர் அமைக்கப்பட்டுள்ளதால், சட்டவிரோத கழிவுநீர் குழாய்கள் துண்டிக்கப்பட்டுள்ளன. ஆனால், குடியிருப்பாளர்கள் மாற்று ஏற்பாடுகள் செய்யாமல் தொடர்ந்து அந்த குழாய்களின் வழியே கழிவுநீரை வெளியேற்றி வருவதாக தெரிகிறது. சாலையில் கழிவுநீர் தேங்குவதை தடுக்கவும், கழிவுநீர் வெளியேற்றத்தை நிறுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.