‘வாத்தி’ படத்துக்குப் பிறகு தனுஷ் நடித்துள்ள நேரடி தெலுங்கு படம். தேசிய அளவில் பல விருதுகளை குவித்த சேகர் கம்முலாவுடன் முதல் முறையாக தனுஷ் இணைகிறார் என்ற அறிவிப்பு வெளியானதுமே ‘குபேரா’ படத்துக்கு நல்ல எதிர்பார்ப்பு நிலவியது. படத்தின் ட்ரெய்லரும் ஆர்வத்தை தூண்டும் வகையில் ‘கட்’ செய்யப்பட்டிருந்தது. இத்தகைய எதிர்பார்ப்பை முழுமையாக பூர்த்தி செய்ததா ‘குபேரா’?
இந்தியாவின் நம்பர் ஒன் பணக்காரர் நீரஜ் மித்ரா (ஜிம் சர்ப்). அரசாங்கத்தை கைக்குள் வைத்துக் கொண்டு நினைத்ததை நினைத்த நேரத்தில் செய்பவர். தமிழக கடல் பகுதியில் கச்சா எண்ணெய் கண்டுபிடிக்கப்படும் தகவல் அரசாங்கத்துக்கு முன்பே அவருக்கு கசிந்து விடுகிறது. அதை பொதுமக்களுக்கு தெரியவிடாமல், தன்னிடம் ஒப்படைத்தால் கிடைக்கப் போகும் பலன்களை கூறி மத்திய அமைச்சரிடம் டீல் பேசுகிறார். இதற்காக பெரும் தொகையை கைமாற்ற திட்டமிடப்படுகிறது. இந்த வேலையை செய்து முடிக்க செய்யாத குற்றத்துக்கு ஜெயிலில் இருக்கும் முன்னாள் சிபிஐ அதிகாரி தீபக்கை (நாகர்ஜுனா) நாடுகிறார் நீரஜ். முதலில் மறுக்கும் தீபக் பின்னர் தன் குடும்பத்தை எண்ணி ஒப்புக் கொள்கிறார்.
கறுப்பு பணத்தை பினாமி சொத்து மூலம் வெள்ளையாக மாற்ற சில பிச்சைக்காரர்களை பயன்படுத்தலாம் என்று ஐடியா கொடுக்கிறார் தீபக். இதற்காக நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் இருந்து நான்கு பிச்சைக்காரர்கள் கொண்டு வரப்படுகின்றனர். திருப்பதியில் இருந்து அழைத்து வரப்படும் தேவாவும் (தனுஷ்) அதில் ஒருவர். பிச்சைக்காரர்களை பணக்காரர்கள் போல மாற்றி, பயிற்சி கொடுத்து பணத்தை கைமாற்றுகின்றனர். இதில் நீரஜ்ஜின் உத்தரவின்படி பணம் கைமாறியபின் ஒவ்வொரு பிச்சைக்காரராக கொல்லப்படுகின்றனர்.
இதை தெரிந்து கொள்ளும் தேவா, நீரஜ் ஆட்களிடம் இருந்து தப்பிக்கிறார். வழியில் காதலனால் கைவிடப்பட்டு தற்கொலைக்கு முயலும் சமீராவை (ராஷ்மிகா) சந்திக்கிறார். ஏற்கெனவே சிக்கலில் இருக்கும் சமீராவுக்கு தேவாவால் மேலும் பல பிரச்சினைகள் வருகிறது. எதிரிகளிடமிருந்து தேவா தப்பித்தாரா? சமீராவின் பிரச்சினைகள் தீர்ந்ததா? என்பதே ‘குபேரா’ படத்தின் திரைக்கதை.
இதேபோன்ற கதையை தமிழிலேயே பல படங்களில் இதற்கு முன்னால் பார்த்திருந்தாலும், அதை இயன்றவரை மசாலாத்தனங்கள் இல்லாமல் உண்மைக்கு நெருக்கமாக சொல்ல முயன்றிருக்கிறார் இயக்குநர் சேகர் கம்முலா. படம் தொடங்கியதுமே வரும் எண்ணெய் படிமம், மத்திய அமைச்சருடன் ஜிம் சர்ப் போடும் டீல், தனுஷின் அறிமுகம், நாகர்ஜுனாவின் பின்னணி என படம் நம்மை உள்ளிழுத்துக் கொள்கிறது. ஆர்ப்பாட்டம் இல்லாத நிதானமான திரைக்கதையாக இருந்தாலும் கிட்டத்தட்ட முதல் பாதி எந்த தொய்வும் இல்லாமலேயே நகர்கிறது.
வில்லன் ஆட்களிடம் இருந்து தனுஷ் தப்பிக்கும் காட்சிக்குப் பிறகு சூடுபிடித்திருக்க வேண்டிய திரைக்கதை சுருண்டு படுத்து விடுகிறது. இங்கிருந்துதான் படத்தின் மொத்த பிரச்சினையும் தொடங்குகிறது. ராஷ்மிகாவை தனுஷ் சந்தித்த பின் வரும் காட்சிகளுக்குப் பின்னால் படம் எங்கெங்கோ சென்று தலையை சுற்ற வைக்கிறது. முதல் பாதியில் சில இழுவைகள் இருந்தாலும் கூட கதாபாத்திரங்களின் தன்மைகளை ஆடியன்ஸ் மனதில் பதிய வைக்க அவை உதவின. குறிப்பாக ஜிம் சர்ப், நாகர்ஜுனா, தனுஷ் என கதாபாத்திரங்களின் பண்புகளே முதல் பாதி முழுவதும் அலசப்படுகின்றன. அவற்றில் பெரிதாக எந்த தொய்வும் இல்லை.
ஆனால், இரண்டாம் பாதி முழுவதும் திரைக்கதை எங்கே செல்கிறது என்று இயக்குநருக்கும் தெரியவில்லை. பார்க்கும் நமக்கும் தெரியவில்லை. ஒரு கட்டத்தில் எல்லாம் எங்கே தொடங்கியது என்றே மறந்து போகும் அளவுக்கு இழு… இழு.. என இழுத்து வைத்திருக்கிறார்கள்.
படத்தின் ஒற்றை ஆன்மா தனுஷ் மட்டுமே. உயிரைக் கொடுத்து நடிப்பது என்ற வார்த்தைக்கு உண்மை செய்யும் அசுரத்தனமான நடிப்பு. இப்படி ஓர் அறிமுகக் காட்சிக்கு 2 படங்கள் ஹிட் கொடுத்த ஹீரோ கூட ஒப்புக் கொள்வாரா என்பது சந்தேகமே. அந்த அளவுக்கு சிலிர்ப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். நாகர்ஜுனா, ராஷ்மிகா, ஜிம் சர்ப், சில காட்சிகளே வரும் சுனைனா என அனைவரும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர். தனுஷுடன் பிச்சைக்காரர்களாக வருபவர்கள் இன்னும் சற்று நடிக்கத் தெரிந்தவர்களாக போட்டிருக்கலாம். பல இடங்களில் ஓவர் ஆக்டிங் செய்கிறார்கள்.
தேவிஸ்ரீ பிரசாத்தின் பின்னணி இசை ஓகே ரகம். தனுஷின் அறிமுகக் காட்சி உள்ளிட்ட சில இடங்களில் மட்டுமே தனித்து தெரிகிறார். பாடல்களில் ’போய் வா.. நண்பா’ படமாக்கிய விதம் சிறப்பு. ‘எனது எனது’ பாடல் சரியாக பயன்படுத்தப்படவில்லை. நிகேத் பொம்மியின் ஒளிப்பதிவில் ஒவ்வொரு பிரேமிலும் உழைப்பு தெரிகிறது. கார்த்திகா ஸ்ரீனிவாஸ் எடிட்டிங்கில் இன்னும் கவனம் செலுத்தி இருக்கலாம். பல இடங்களில் காட்சிகள் ஒன்றுக்கு ஒன்று தொடர்பே இல்லாதது போல அப்படியே கட் ஆவது நெருடுகிறது.
படத்தின் மற்றொரு மிகப் பெரிய குறை, எந்த இடத்திலும், எந்த கதாபாத்திரத்துடனும் ஆடியன்ஸால் உணர்வு ரீதியாக ஒன்ற முடியாமல் போவது. நாகர்ஜுனா – தனுஷ், தனுஷ் – ராஷ்மிகா, தனுஷ் – குஷ்பு கதாபாத்திரங்களுக்கு இடையே எமொஷனலுக்காக வைக்கப்பட்ட காட்சிகளில் எந்த கனமும் இல்லை. இன்னொரு குறை, படத்தின் தொடக்கத்தில் இருந்து எந்தக் காட்சியிலும் நுணுக்கம் இல்லாதது. ஜிம் சர்ப் கதாபாத்திரம் அரசாங்கத்தையே ஆட்டுவிக்கும் மிகப் பெரிய கோடீஸ்வரர். ஆனால் பினாமி என்றால் என்ன என்பது கூட அவருக்கு தெரியாமல் இருக்குமா? இதற்காக நாகர்ஜுனா வந்து அவருக்கு க்ளாஸ் எடுக்கிறார். எதற்காக அவர் நாகர்ஜுனாவை தேடிப் போக வேண்டும் என்பதற்கும் கூட வலுவான பின்னணி எதுவும் சொல்லப்படவில்லை.
படத்தின் நீளம் 3+ மணி நேரம். படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் எல்லாம் முடிந்து ஒருமுறை பார்த்திருந்தாலே படத்தில் எங்கெல்லாம் தொய்வு இருக்கிறது என்று தெரிந்திருக்குமே. கண்ணை மூடிக் கொண்டு படத்தில் இருந்து 40 நிமிடங்கள் அளவுக்கு வெட்டி இருக்கலாம். அந்த அளவுக்கு தேவையற்ற விஷயங்கள் படத்தில் உள்ளன. அதையும் தாண்டி 3 மணி நேர நீளத்துடன் இப்படத்தை வெளியிட முரட்டு தைரியம் வேண்டும்.
எடுத்துக் கொண்ட கதைக்களத்தை அழுத்தமாகவும், உணர்வுபூர்வமாகவும் சொல்ல முடியாமல் போனதால், தலையை சுற்றி மூக்கை தொடும் கதையாக எங்கெங்கோ சென்று முடிகிறது படம். இதனால் தனுஷின் அபார நடிப்பு உள்ளிட்ட நல்ல அம்சங்கள் கூட வீணாகி விட்டன.