புதுடெல்லி: இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையிலான போரை நிறுத்தியது யார் என எக்ஸ் தளத்தில் வினவியுள்ளார் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம்.
இந்தியா – பாகிஸ்தான் இடையேயான போர் நிறுத்த விவகாரத்தில் அமெரிக்க நாடு எந்தப் பங்கும் வகிக்கவில்லை என அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்பிடம் பிரதமர் மோடி அண்மையில் தொலைபேசி உரையாடலில் தெளிவுப்படுத்தி இருந்தார். இதன் பின்னர் ‘போரை நிறுத்தியது நான்தான்’ என ட்ரம்ப் கூறி இருந்தார்.
இந்நிலையில், இது தொடர்பாக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ப.சிதம்பரம் எக்ஸ் தளத்தில் ட்வீட் செய்துள்ளார். அந்த பதிவில் அவர் கூறியுள்ளதாவது: போரை நிறுத்தியது யார் என்ற கதை இப்போது சுவாரஸ்ய கட்டத்தை எட்டியுள்ளது. ‘இந்தியா – பாகிஸ்தான் இடையே மத்தியஸ்தம் செய்து போரை நிறுத்தியதாக’ ட்ரம்ப் தெரிவித்து 39 நாட்கள் ஆகிறது. இதன் பிறகே ‘இந்தியா மத்தியஸ்த்தை ஏற்காது’ என ட்ரம்ப் உடனான தொலைபேசி உரையாடலில் பிரதமர் மோடி சொல்லியுள்ளார்.
இந்தியா – பாகிஸ்தான் போரை நிறுத்தியது நான் தான் என ட்ரம்ப் மீண்டும் மீண்டும் கூறி வந்தார். இந்நிலையில், 39 நாட்களுக்கு பிறகு ஏன் அதை மறுக்க வேண்டும்?
இந்திய மக்களிடமோ அல்லது நாடாளுமன்றத்திலோ பிரதமர் மோடி ஏன் இதை நேரடியாக தெரிவிக்கவில்லை? பிரதமர் மோடி உடனான தொலைபேசி உரையாடலுக்கு பிறகும் ‘போரை நிறுத்தியது நான்தான்’ என ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இதோடு போரை நிறுத்த பாகிஸ்தான் தரப்பில் அசிம் முனீர் மற்றும் இந்தியா தரப்பில் மோடி உதவியதாக அவர் கூறி இருந்தார்.
மேலும், பாகிஸ்தானை நேசிப்பதாக ட்ரம்ப் கூறியுள்ளார். பாகிஸ்தான் ராணுவ தளபதி அசிம் முனீரை மதிய விருந்துக்கு அழைத்ததாக வெள்ளை மாளிகை அறிக்கை வெளியிட்டது.” என குறிப்பிட்டுள்ளார்.
பிரதமர் மோடி – ட்ரம்ப் தொலைபேசி உரையாடல்: பிரதமர் மோடி உடன் சுமார் 35 நிமிடங்கள் வரை தொலைபேசியில் அதிபர் ட்ரம்ப் உரையாடி இருந்தார். அப்போது, இந்தியா – பாகிஸ்தான் இடையேயான போர் நிறுத்த விவகாரத்தில் அமெரிக்க நாடு எந்தப் பங்கும் வகிக்கவில்லை என அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்பிடம் பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசி வாயிலாக தெளிவுபடுத்தி இருந்தார்.
இத்தகவலை மத்திய வெளியுறவுத் துறை செயலர் விக்ரம் மிஸ்ரி தெரிவித்துள்ளார். இனிமேலும் அமெரிக்காவின் மத்தியஸ்தத்தை இந்தியா ஏற்காது என்று பிரதமர் மோடி கூறியிருந்தார். இந்த நிலையில்தான் அதிபர் ட்ரம்ப் இதை கூறியுள்ளார். பாகிஸ்தான் ராணுவ தளபதி ஜெனரல் அசிம் முனீரை வெள்ளை மாளிகையில் ட்ரம்ப் இன்று (ஜூன் 18 – அமெரிக்க நேரப்படி) சந்திக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
ட்ரம்ப் விடாப்பிடி: “இந்தியா – பாகிஸ்தான் போரை நிறுத்தியது நான்தான். நான் பாகிஸ்தானை நேசிக்கிறேன். பிரதமர் மோடி அற்புதமான மனிதர் என நினைக்கிறேன். அவருடன் நான் நேற்று பேசினேன். இந்தியா மற்றும் அமெரிக்கா என இரு நாடுகளும் வர்த்தக ஒப்பந்தத்தை மேற்கொள்ள உள்ளது. ஆனால், இந்தியா – பாகிஸ்தான் போரை நிறுத்தியது நான்தான்.
பாகிஸ்தான் தரப்பில் அசிம் முனீர் மற்றும் இந்தியா தரப்பில் பிரதமர் மோடி என போரை நிறுத்த உதவினர். அவர்கள் இருவரும் செல்வாக்கு மிக்க நபர்கள். இரு நாடுகளும் அணு ஆயுத பலம் கொண்டவை. இது நான் எழுதிய கதை அல்ல என நம்புகிறேன். போரை நிறுத்தியது நான்தான்” என ட்ரம்ப் தெரிவித்தார்.