இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நாளை மறுநாள் லீட்சில் தொடங்கும் ஆண்டர்சன் – டெண்டுல்கர் டிராபி முதல் டெஸ்ட் போட்டிக்கான பிட்ச் பொதுவாக வறண்டிருக்கும் என்றும் டாஸ் வென்றால் முதலில் பவுலிங் எடுத்து முதல் நாள் பவுலிங் சாதக நிலைமைகளை அணிகள் பயன்படுத்தும் என்று பிட்ச் பராமரிப்பாளர் ரிச்சர்ட் ராபின்சன் தெரிவித்துள்ளார்.
இப்போதைக்குப் பிட்சைப் பார்த்தால் புற மைதானத்தின் பச்சைப்புல்வெளி போல் வித்தியாசம் இல்லாமல் உள்ளது, ஆனால் மேட்சிற்கு முன்னால் புற்கள் 8மிமீ நீளம் வரை இருக்குமாறு வெட்டப்பட்டு விடும். பிட்ச் இப்போதைக்கு மூடிவைக்கப்பட்டிருக்கிறது, ஏனெனில் லீட்ஸில் 22-23 டிகிரி செல்சியசில் தொடங்கி 30 டிகிரி செல்சியஸ் வரை வெயில் அடிப்பதால் பிட்சைத் திறந்து வைத்தால் முதல் நாளே வறண்ட பிட்ச் ஆகிவிடும். ஆகவே மூடப்பட்டுள்ளது.
முதல் நாள் பிட்சில் பந்துகள் கொஞ்சம் பவுன்ஸ் ஆகும். ஸ்விங் ஆகும். ஆனாலும் பந்திற்கு நேரான டிரைவ்களை ஆட முடியும் என்கிறார் ராபின்சன். வெயில் அடிக்க பிட்ச் வறண்டு போகும். எனவே முதல் நாளுக்குப் பிறகு விரைவில் பிட்ச் ஃபிளாட் ஆக மாறும் என்பதால் முதல் நாள் பவுலிங் சாதக அம்சங்களைப் பயன்படுத்த டாஸ் வெல்லும் அணி முதலில் பவுலிங்கைத் தேர்வு செய்யும்.
கடந்த 22 டெஸ்ட் போட்டிகளில் லீட்ஸில் 16 டெஸ்ட் போட்டிகளில் டாஸ் வென்ற அணி முதலில் பவுலிங்கை தேர்வு செய்துள்ளது. இங்கிலாந்து இதில் 9 வெற்றிகளையும் 6 தோல்விகளையும் சந்தித்துள்ளது.. ஒவ்வொரு முறை முதலில் பேட்டிங் எடுக்கும் அணி தோல்வி கண்டுள்ளது.
இங்கிலாந்து இதே ஹெடிங்லீயில் நியூஸிலாந்துக்கு எதிராக 4வது இன்னிங்சில் 296 ரன்களையும் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 251 ரன்களையும் எடுத்து வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
பொதுவாகவே லீட்சில் அதிக ரன்களையும் அடிக்க முடியாது அதற்காக மிகவும் லோ ஸ்கோர் பிட்ச் ஆகவும் இருக்காது. 250-350 ரன்கள் பிட்ச் ஆக இருக்கும்.
இந்தியாவுக்கு சாதகமற்ற சூழ்நிலை என்னவெனில் சமீப ஆண்டுகளில் ஹெடிங்லேயில் இந்திய அணி ஆடியதில்லை என்பதே. 2021-ல் இன்னிங்ஸ் தோல்விக்கு முன்னர் 2002-ல் இங்கு ஆடியுள்ளனர். 2002-ல் கங்குலி தலைமையில் இன்னிங்ஸ் வெற்றி பெற்று தொடரை 1-1 என்று ட்ரா செய்தது.
2002 டெஸ்ட்டை மறக்க முடியாது, ஏனெனில் இந்திய முதல் இன்னிங்சில் பேட் செய்து 628/8 என்று ரன்களைக் குவித்தது. சஞ்சய் பாங்கர் 68, ராகுல் திராவிட் 148, சச்சின் டெண்டுல்கர் 193, சவுரவ் கங்குலி 128 என்று விளாசினர். அதுவும் ஒரு மாலை வேளையில் போதிய வெளிச்சமின்மை காரணமாக ஆட்டத்தை முடித்துக் கொள்ளலாம் என்று நடுவர்கள் வாய்ப்பு வழங்க கேப்டன் கங்குலி மறுத்து நாங்கள் ஆடுகிறோம் என்று அவரும் சச்சினும் அன்று 10-11 ஓவர்களில் இங்கிலாந்து பந்து வீச்சை கிட்டத்தட்ட 100 ரன்கள் பக்கம் டி20 பாணியில் விளாசியதை இன்றும் மறக்க முடியாது.
குறிப்பாக இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஆண்ட்ரூ காடிக் 40 ஓவர்களில் 150 ரன்கள் விளாசப்பட்டார். அலெக்ஸ் டியூடர் 36 ஓவர்களில் 146 ரன்கள் நொறுக்கப்பட்டார். இங்கிலாந்து பந்து வீச்சில் நான்கு பேர் சதமடித்தனர். அன்றைய மாலை கங்குலி அத்தகைய முடிவை எடுக்கவில்லையெனில் இந்தியாவுக்கு இன்னிங்ஸ் வெற்றி வாய்ப்புக் கிட்டியிருக்காது, இங்கிலாந்து 273 மற்றும் 309 ரன்களுக்கு ஆட்டமிழந்து இன்னிங்ஸ் தோல்வி கண்டதோடு தொடரையும் வெல்ல முடியாமல் போனது. அனில் கும்ப்ளே இந்த டெஸ்ட்டில் 7 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். ஆட்ட நாயகன் ராகுல் திராவிட்.