‘மனுஷி’ படத்தில் இடம்பெற்றுள்ள ஆட்சேபகரமான காட்சிகளை நீக்கினால் சான்றிதழ் வழங்குவது குறித்து பரிசீலிக்கப்படும் என தணிக்கை வாரியம், சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
ஆண்ட்ரியா நடித்துள்ள ‘மனுஷி’ படத்தை இயக்குநர் வெற்றி மாறனின் கிராஸ் ரூட் ஃபிலிம் கம்பெனி தயாரித்துள்ளது. கோபி நயினார் இயக்கியுள்ளார். இந்தப் படத்துக்குத் தணிக்கை வாரியம் சான்றிதழ் வழங்க மறுப்பு தெரிவித்தது. இதையடுத்து, நிபுணர் குழு அமைத்து படத்தை மீண்டும் தணிக்கை செய்து சான்றிதழ் வழங்கக்கோரி, தயாரிப்பாளர் வெற்றிமாறன், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு, நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது, படத்தில் உள்ள ஆட்சேபனைக்குரிய காட்சிகள், வசனங்களை நீக்கினால் சான்றிதழ் வழங்குவது குறித்து பரிசீலிக்கப்படும் என தணிக்கை வாரியம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. வெற்றிமாறன் தரப்பில், ஆட்சேபகரமான காட்சிகள் மற்றும் வசனங்கள் என முக்கியமான காட்சிகளைத் தணிக்கை வாரியம் நீக்கக் கூறுவதாகத் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து நீதிபதி, தணிக்கை வாரியத்தின் ஆட்சேபனையை எதிர்த்து வழக்கு தொடரலாம் என வெற்றிமாறனுக்கு அனுமதியளித்து வழக்கை முடித்து வைத்தார்.