Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Tuesday, December 23
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»உலகம்»இஸ்ரேல் – ஈரான் போரில் உயிரிழப்புகள் அதிகரிப்பு: சேதங்கள் மிகுந்த 4-வது நாளின் நிலவரம் என்ன?
    உலகம்

    இஸ்ரேல் – ஈரான் போரில் உயிரிழப்புகள் அதிகரிப்பு: சேதங்கள் மிகுந்த 4-வது நாளின் நிலவரம் என்ன?

    adminBy adminJune 16, 2025No Comments5 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    இஸ்ரேல் – ஈரான் போரில் உயிரிழப்புகள் அதிகரிப்பு: சேதங்கள் மிகுந்த 4-வது நாளின் நிலவரம் என்ன?
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    இஸ்ரேலுக்கு ஜூன் 16 அதிகாலை விடியலே ஈரானின் கடும் தாக்குதலோடுதான் தொடங்கியது. ஈரான் – இஸ்ரேல் இடையேயான மோதல் தொடங்கி திங்கள்கிழமையுடன் 4 நாட்கள் ஆகின்றன. ஆனால், இருதரப்பும் மோதலை முன்னெடுக்கும் வீச்சு, உலக நாடுகளை மிரள வைத்துள்ளது. இஸ்ரேல் தாக்குதலில் செவ்வாய்க்கிழமை மட்டுமே ஈரான் ராணுவத்தின் உளவுப் பிரிவு தலைவர் முகமது கசேமி உள்பட 4 முக்கியத் தலைவர்கள் உயிரிழந்தனர்.

    சமீபத்திய நிலவரப்படி, ஈரானில் 220-க்கும் மேற்பட்டோரும், இஸ்ரேலில் 10-க்கும் மேற்பட்டோரும் உயிரிழந்ததாக தகவல்கள் பதிவாகியுள்ளன. ஈரானில் உயிரிழந்தோரில் 90% பேர் அப்பாவி பொதுமக்களாவர். அடுத்ததாக, அணு ஆயுதங்கள் பற்றி ஈரான் பேசுகிறது. ஈரான் – இஸ்ரேல் மோதலில் அமெரிக்காவும் ஈடுபடுவதற்கான வாய்ப்பு இருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்பும் கூறியுள்ளார். மத்திய கிழக்கு பிராந்தியத்தில் மட்டுமல்லாது புவி அரசியலில் திகைக்க வைக்கும் திருப்பங்களை ஏற்படுத்தி வரும் இஸ்ரேல் – ஈரான் மோதலினால் ஏற்பட்ட சேதங்கள் மிகுந்த 4-வது நாளின் நிலவரம் குறித்த தொகுப்பு இது.

    கரும்புகை சூழ காட்சியளித்த டெல் அவிவ்: இன்று (திங்கள்கிழமை) அதிகாலை ஈரான் அடுத்தடுத்து இஸ்ரேல் நகரங்கள் மீது ஏவுகணைகளை வீசியது. ஈரானிய ஏவுகணைகளை இடைமறித்து அழிக்க இஸ்ரேலின் பாதுகாப்பு அமைப்புகளிலிருந்தும் ஏவுகணைகள் பாய்ந்தன. இதனால் பயங்கர சத்தம் ஏற்பட்டது. ஏவுகணைகள் மோதல் சத்தமும், நெரும்பும் அதிகாலையில் டெல் அவிவை உலுக்கியது. சிறிது நேரத்தில் டெல் அவிவ் நகரின் மீது கரும்புகை சூழ்ந்தது. டெல் அவிவ் மட்டுமல்லாது இஸ்ரேலின் ஜெருசலேம், பெட்டா டிக்வா நகரங்களையும் ஈரான் ஏவுகணைகள் தாக்கின.

    அடுத்தடுத்த தாக்குதல்களால், திங்கள்கிழமை காலை இஸ்ரேல் ராணுவம் தனது எக்ஸ் பக்கத்தில், “பொதுமக்கள் பாதுகாக்கப்பட்ட இடத்துக்குள் நுழைந்து மறு அறிவிப்பு வரும் வரை அங்கேயே இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது” என்று குறிப்பிட்டது.

    மகன் திருமணத்தை தள்ளிவைத்த நெதன்யாகு: நெதன்யாகுவின் மகன் அவ்னர் நெதன்யாகுவுக்கு, அமித் யார்தேனி என்ற பெண்ணுடன் இன்று (ஜூன் 16) திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. ஆனால், ஈரானுடனான மோதல் அதிகரித்து வருவதால், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தனது மகனின் திருமணத்தை ஒத்திவைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    பேச்சுவார்த்தைக்கு ‘நோ’ சொன்ன ஈரான்: இஸ்ரேல் – ஈரான் மோதலால் கச்சா எண்ணெய் விலை சர்வதேச அளவில் உயர்ந்து வருகிறது. இந்தச் சூழலில் இந்த மோதலை முடிவுக்குக் கொண்டு வர ஓமன், கத்தார் போன்ற வளைகுடா நாடுகள் முனைப்புக் காட்டி வருகின்றன. ஆனால், ஈரானோ “நாங்கள் தாக்குதலுக்கு உள்ளாகும்போது பேச்சுவார்த்தை நடத்த மாட்டோம்” என்று திட்டவட்டமாகத் தெரிவித்துவிட்டது.

    அமெரிக்க தூதரகம் சேதம்: ஈரான் ஏவுகணைத் தாக்குதல்களால் இஸ்ரேலின் தலைநகர் டெல் அவிவில் உள்ள அமெரிக்க தூதரக கட்டிடம் சிறிய அளவிலான சேதத்தை சந்தித்ததாக இஸ்ரேலுக்கான அமெரிக்க தூதர் மைக் ஹக்காபி உறுதிப்படுத்தினார். இது குறித்து இஸ்ரேலுக்கான அமெரிக்க தூதர் மைக் ஹக்காபி வெளியிட்ட அறிவிப்பில், “டெல் அவிவ் தூதரகக் கிளைக்கு அருகில் ஈரானிய ஏவுகணைகள் தாக்கியதால் சில சிறிய சேதங்கள் ஏற்பட்டன, ஆனால் அமெரிக்க பணியாளர்களுக்கு எந்தக் காயமும் ஏற்படவில்லை. தற்போதைய பாதுகாப்பு நிலைமை காரணமாக, முன்னெச்சரிக்கையாக டெல் அவிவில் உள்ள துணைத் தூதரகம் மற்றும் ஜெருசலேமில் உள்ள தூதரகம் இன்று அதிகாரப்பூர்வமாக மூடப்பட்டிருக்கும்” என்று தெரிவித்துள்ளார்.

    முன்னதாக ட்ரம்ப் வெளியிட்ட சமூக வலைதளப் பதிவில், ”இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையில் விரைவில் அமைதி ஏற்படும். இப்போது பல அழைப்புகளும் சந்திப்புகளும் நடக்கின்றன. நான் நிறைய செய்கிறேன், எதற்கும் ஒருபோதும் பேர் கிடைப்பதில்லை. ஆனால் அது பரவாயில்லை. மக்கள் புரிந்துகொள்கிறார்கள். மத்திய கிழக்கை மீண்டும் சிறந்ததாக்குவோம்” எனக் கூறியிருந்தார்.

    ஆனால், அதேவேளையில் இஸ்ரேலுக்கான ஆதரவு தொடரும் என்றும், ஒருவேளை எந்த வடிவிலாவது, வகையிலாவது அமெரிக்காவை ஈரான் தாக்கினால், முழு பலத்தோடு பதிலடி கொடுப்போம் என்றும் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளது கவனிக்கத்தக்கது.

    அதிகாலை தாக்குதலுக்கு இஸ்ரேல் பதிலடி: இன்றைய அதிகாலை தாக்குதலுக்கு பதிலடியாக இஸ்ரேல் விமானப் படைகள் தெஹ்ரானில் உள்ள ஐஆர்ஜிசி (இஸ்லாமிய புரட்சிகர காவல் படை) தளத்தின் கமாண்ட் மையங்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்தியது. இந்த கமாண்ட் மையங்கள் ஈரான் படைகளோடு அதற்கு ஆதரவான ஏமனின் ஹவுதிகள், லெபனானின் ஹெல்புல்லாக்கள் மற்றும் பாலஸ்தீனத்தின் ஹமாஸ் கிளர்ச்சிப் படைகளையும் உள்ளடக்கியிருந்ததாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

    மேலும், இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் காட்ஸ் எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்த பதிவில், “மோசமான சர்வாதிகாரி, கோழைத்தனமான கொலைகாரன் என்று ஈரான் உச்ச தலைவரை விமர்சித்துள்ளதோடு, ஈரானின் அதிகாலை தாக்குதலுக்கு தெஹ்ரானின் பொதுமக்கள் தகுந்த விலை கொடுக்க வேண்டியிருக்கும்” என்று மிரட்டல் விடுத்திருந்தார்.

    அவருடைய இந்தப் பதிவு உலக நாடுகளின் கண்டனங்களைப் பெறவே அவர் தனது கருத்தைத் திரும்பப் பெற்றுள்ளார். அது பற்றி அவர் பகிர்ந்த பதிவில், “இஸ்ரேல் ஈரானில் உள்ள ராணுவ தளங்கள், புரட்சிப் படைகளின் முகாம்களை மட்டுமே அழிக்கும். நாங்கள் பொதுமக்களை அழிக்க வேண்டும் என்று நினைக்கவில்லை. ஆனால், தாக்குதலின் போது பாதிப்புகளில் இருந்து தற்காத்துக் கொள்ள ஈரான் பொது மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்வது நல்லது” என்று குறிப்பிட்டுள்ளார்.

    ஈரான் கருத்தும், பாகிஸ்தான் மறுப்பும்: இந்த நிலையில் ஈரான் தொலைக்காட்சிக்கு அளித்த நேர்காணலில் பேசிய இஸ்லாமிய புரட்சிகர காவல்படையின் (IRGC) மூத்த அதிகாரியும், ஈரானின் தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் உறுப்பினருமான மொஹ்சென் ரெசே, “இஸ்ரேல் ஈரான் மீது அணுகுண்டை வீசினால், இஸ்ரேலை அணு ஆயுதத்தால் தாக்குவோம் என்று பாகிஸ்தான் எங்களுக்கு உறுதியளித்துள்ளது” என்றார்.

    ஆனால், இதனை திட்டவட்டமாக மறுத்த பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் க்வாஜா ஆசிப், “எங்களுடைய அணுசக்தி என்பது எங்கள் மக்களின் நன்மைக்காக, எங்கள் நாட்டின் தற்காப்புக்காக உள்ளது. ஈரானுக்கு ஆதரவாக இஸ்ரேல் மீது அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவோம் என்று நாங்கள் எங்கும் வாக்குறுதி அளிக்கவில்லை” என்று குறிப்பிட்டுள்ளார்.

    ஜூன் 13 தொடங்கி இதுவரை… – ஜூன் 13 தொடங்கி இதுவரை ஈரான் தாக்குதலுக்கு பதிலடியாக, தெஹ்ரானில் உள்ள தரையிலிருந்து தரையைக் குறிவைத்து ஏவப்படும் ஏவுகணை ஏவு தளத்தின் மூன்றில் ஒரு பாகத்தை முழுவதும் துவம்சம் செய்துவிட்டதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. இதன்மூலம் இஸ்ரேல் இப்போது முழுக்க முழுக்க ஈரானைவிட வான்வழித் தாக்குதலில் அதீத பலம் கொண்டதாக உள்ளது என்று ராணுவ செய்தித் தொடர்பாளர் பிரிகேடியர் ஜெனரல் எஃப் டெஃப்ரின் தெரிவித்துள்ளார்.

    இந்திய தூதரகம் நடவடிக்கை: மோதல்களுக்கு மத்தியில் ஈரானில் சிக்கியுள்ள தத்தம் நாட்டு மக்களை பாதுகாக்க உலக நாடுகள் முயற்சித்து வருகின்றன. ஈரானில் சிக்கியுள்ள இந்திய மருத்துவ மாணவர்கள் உள்பட ஆயிரக்கணக்கான இந்தியர்கள் தங்களை பாதுகாப்பாக அழைத்துச் செல்லுமாறு இந்திய அரசாங்கத்திடம் கோரிக்கை வைத்தனர். இந்நிலையில், அங்குள்ள இந்தியர்களை ஈரானுக்குள்ளேயே பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றும் பணிகளை இந்திய தூதரகம் தொடங்கியுள்ளது. மேலும், விரைவில் அவர்களை இந்தியாவுக்கு திருப்பி அழைத்துவரும் நடவடிக்கைகள் குறித்தும் ஆய்வு செய்யத் தொடங்கியுள்ளதாக தூதரகம் தெரிவித்துள்ளது.

    ஈராக் வரை எச்சரிக்கையை நீட்டித்த அமெரிக்கா: ஏற்கெனவே ஈரான் தாக்குதலால் இஸ்ரேலில் உள்ள தூதரகத்தை தற்காலிகமாக மூடியுள்ள அமெரிக்கா, ஈராக்கில் உள்ள அமெரிக்கர்களுக்கு பத்திரமாக இருக்கும்படி எச்சரிக்கை விடுத்துள்ளது. ஈராக் வாழ் அமெரிக்கர்கள் பொது இடங்களில் கூடுவது, வெளிநாட்டவர்கள் அதிகம் செல்லும் பகுதிகளுக்கு செல்வது போன்ற செயல்களை தவிர்க்குமாறு அறிவுறுத்தியுள்ளது.

    ஈரானில் சிக்கியிருக்கும் வெளிநாட்டவர்களை மீட்க உலக நாடுகளுக்கு உதவத் தயராக இருப்பதாக அஸர்பைஜான் நாடு தெரிவித்துள்ளது. தைவான், போலந்து, செக் குடியரசு நாடுகளைச் சேர்ந்தவர்கள் ஈரானில் இருந்து மீட்கப்பட்டுள்ளனர்.

    இத்தனை பதற்றத்துக்கு இடையேயும்… – ஈரான் தாக்குதல் சமாளிக்க வியூகங்கள் வகுத்துக் கொண்டிருக்கும் இத்தனை பதற்றத்துக்கு இடையேயும், காசாவில் உணவு விநியோக மையங்கள் அமைந்துள்ள பகுதியில் இஸ்ரேல் படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 38 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டதாக காசா சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    இஸ்ரேல் – ஈரான் மோதல் 4-வது நாள் இந்த மோதல் அணு ஆயுத மோதலாக மாறுமோ என்ற அச்சம் அதிகரித்துள்ளது. சர்வதேச அணுசக்தி முகமை உள்ளிட்ட அணுசக்தி சார்ந்த கண்காணிப்பு அமைப்புகளும் இது தொடர்பாக கவலை எழுப்பி வருகின்றன. ஏற்கெனவே இஸ்ரேல் ஈரானின் அணுசக்தி மையங்களை குறிவைத்து நடத்திய தாக்குதலால் கதிர்வீச்சு அபாயம் ஏதும் இல்லையென்றாலும் கூட அந்த மையங்களுக்குள் கதிரியக்க ரீதியான மாசுபாடுகள் இருக்கலாம் என்று சர்வதேச அணுசக்தி முகமை எச்சரித்துள்ளது.

    மத்திய கிழக்குப் பிராந்தியத்தின் அமைதியை உறுதிப்படுத்துதல், உலக அளவிலான கச்சா எண்ணெய் சரக்கு போக்குவரத்தை சீர்படுத்துதல், அணு ஆயுதப் போரை தவிர்த்தல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக பல்வேறு நாடுகளும் இஸ்ரேல் – ஈரான் மோதலை முடிவுக்குக் கொண்டு வர விழைகின்றன.

    சைப்ரஸ் நாட்டுக்குச் சென்றுள்ள பிரதமர் மோடி, “இது போரின் சகாப்தம் அல்ல. பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண்பதும், ஸ்திரத்தன்மையை மீட்டெடுப்பதும் மனிதகுலத்தின் தேவை” என்று கூறியுள்ளார்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    உலகம்

    கலிபோர்னியாவில் ஃபெராரி விபத்தில் கால் ஆஃப் டூட்டி இணை உருவாக்கியவர் வின்ஸ் ஜாம்பெல்லா கொல்லப்பட்டார் | உலகச் செய்திகள் – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா

    December 23, 2025
    உலகம்

    ஜிம்மி கார் சர்ச்சைக்குரிய ‘கேரியர்-எண்டர்’ ஹோலோகாஸ்ட் ஜோக் குறித்து மௌனம் கலைத்தார் – டைம்ஸ் ஆஃப் இந்தியா

    December 23, 2025
    உலகம்

    MAGA பிளவு: ஹெரிடேஜ் அறக்கட்டளை ஊழியர்கள் நிக் ஃபியூண்டஸ் உடனான டக்கர் கார்ல்சன் நேர்காணலை ஜனாதிபதி ஆதரித்த பிறகு வெளியேறினர் | உலகச் செய்திகள் – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா

    December 23, 2025
    உலகம்

    Real-life Stranger Things: Hawkins Lab site ஐ ஆராய சென்ற பெண் கட்டிடத்தில் இருந்து விழுந்து மரணம் | உலகச் செய்திகள் – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா

    December 23, 2025
    உலகம்

    சிங்கப்பூரில் சர்ச் பீதி: மிரட்டல் விடுத்ததாக இந்திய வம்சாவளி நபர் மீது வழக்கு; மனநல பரிசோதனைக்கு உட்படுத்த – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா

    December 22, 2025
    உலகம்

    டிரம்பின் மருமகன் ஜாரெட் குஷ்னர், காசா இடிபாடுகளை தொழில்நுட்ப மையமாக மாற்ற $112bn திட்டம் உலகச் செய்திகள் – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா

    December 22, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • “கொழுப்பு இழப்பின் தங்க பிரமிடு” என்றால் என்ன, மக்கள் ஏன் பெரும்பாலும் தவறான மட்டத்தில் தொடங்குகிறார்கள்
    • கீல்வாத பராமரிப்புக்கு எலுமிச்சை நீர் உதவியாக இருக்க முடியுமா? ஒரு பைலட் ஆய்வு ஆரம்ப ஆதாரங்களை வழங்குகிறது – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • கலிபோர்னியாவில் ஃபெராரி விபத்தில் கால் ஆஃப் டூட்டி இணை உருவாக்கியவர் வின்ஸ் ஜாம்பெல்லா கொல்லப்பட்டார் | உலகச் செய்திகள் – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • ஜிம்மி கார் சர்ச்சைக்குரிய ‘கேரியர்-எண்டர்’ ஹோலோகாஸ்ட் ஜோக் குறித்து மௌனம் கலைத்தார் – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • சோயா துண்டுகள் vs சோயா சாப் vs வேகவைத்த பீன்ஸ்: இதில் அதிக புரதம் மற்றும் ஊட்டச்சத்து உள்ளது

    Recent Comments

    No comments to show.

    Archives

    • December 2025
    • November 2025
    • October 2025
    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.