பெங்களூரு: பெங்களூருவில் உள்ள ராஜனு குண்டே அருகே ஆப்பிரிக்க பெண் ஒருவர் போதைப் பொருள் விற்பனை செய்வதாக குற்றப்பிரிவு போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீஸார் நடத்திய சோதனையில் ஆப்பிரிக்க பெண் அகின்வுமி பிரின்சஸ் (25) எம்டிஎம்ஏ எனப்படும் போதைப் பொருளை வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து போலீஸார் அந்த பெண்ணின் வீட்டில் சோதனை நடத்தினர். அப்போது 5.32 கிலோ எம்டிஎம்ஏ போதைப் பொருள் சிக்கியது. இதையடுத்து அவரை கைது செய்து, போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். அதில், ஆப்பிரிக்காவில் உள்ள நைஜீரியா நாட்டை சேர்ந்த இவர், 2022ல் படிப்பதற்காக தெலங்கானா வந்துள்ளார். அங்கிருந்து பெங்களூரு வந்து போதைப் பொருள் விற்றுள்ளார்.
இதுகுறித்து போலீஸார் கூறுகையில், ‘‘சம்பந்தப்பட்ட பெண்ணிடம் இருந்து கைப்பற்றப்பட்ட எம்டிஎம்ஏ போதைப்பொருளின் சர்வதேச சந்தை மதிப்பு ரூ.10 கோடி ஆகும். அவர் மீது போதைப் பொருள் தடுப்புச் சட்டத்தின் கீழ், வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது” என்றனர்.