தமிழில் ‘முந்தானை முடிச்சு’ மூலம் நடிகையாக அறிமுகமான ஊர்வசி, தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் என பல்வேறு மொழிகளில் ஏராளமான படங்களில் நடித்துள்ளார். இவர் நடிகர் மனோஜ் கே ஜெயனை காதலித்துக் கடந்த 2000-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு தேஜலட்சுமி என்ற மகள் இருக்கிறார். ஊர்வசிக்கும் மனோஜுக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 2008-ம் ஆண்டு பிரிந்தனர். பின்னர் ஊர்வசி, சிவபிரகாஷ் என்பவரையும் மனோஜ் கே ஜெயன், ஆஷா என்பவரையும் திருமணம் செய்துகொண்டனர்.
இந்நிலையில், ஊர்வசியின் மகள் தேஜலட்சுமி, ‘சுந்தரியாயவள் ஸ்டெல்லா’ என்ற மலையாளப் படத்தில் அறிமுகமாகிறார். இதற்கான செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்துகொண்ட மனோஜ் கே ஜெயன், மகளை அறிமுகப்படுத்தும்போது கண்கலங்கினார்.
அவர் கூறும்போது, “தேஜலட்சுமி நடிக்க வேண்டும் என்ற ஆசையை என் மனைவி ஆஷாவிடம்தான் முதலில் சொன்னார். பிறகு அவர் அம்மாவிடம் (ஊர்வசி) முதலில் சொல்லி அவர் ஆசீர்வாதத்தை வாங்கிவிட்டு வருமாறு கூறினேன். அதன்படி சென்னை சென்று அவரை சந்தித்துவிட்டு வந்தார். பிறகு அவருக்கான சிறந்த கதையைத் தேர்வு செய்ய எனது நெருங்கிய நண்பர்களான சேது மற்றும் அலெக்ஷிடம் சொன்னேன்.
சேது, சரியான கதை என்று இந்தக் கதையைத் தேர்வு செய்தார். ஊர்வசி இந்தக் கதையைக் கேட்கட்டும் என்று சொன்னேன். அவரும் தேஜலட்சுமியின் அறிமுகத்துக்கு சரியான கதையாக இது இருக்கும் என்று நம்பினார். பிறகு தான், நான் இந்தப் படத்தின் கதையைக் கேட்டேன். எனக்கும் பிடித்தது” என்றார்.