அகமதாபாத்: குஜராத் விமான விபத்தில் கனடாவை சேர்ந்த ஒருவர் உயிரிழந்த நிலையில் அவர், இந்திய வம்சாவளியை சேர்ந்த பல் மருத்துவர் நிராளி படேல் (32) எனத் தெரியவந்துள்ளது.
கனடாவில் ரொடன்டோ நகரின் எடோபிகோக் பகுதியில் நிராளி தனது கணவர் மற்றும் ஒரு வயது குழந்தையுடன வசித்து வந்தார். மிசிசாகா என்ற இடத்தில் உள்ள ஒரு பல் மருத்துவமனையில் பணியாற்றி வந்தார். அவரது பெற்றோரும் சகோதரரும் பிராம்டன் நகரில் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில் 5 நாள் பயணமாக இந்தியா வந்த அவர் தனது பயணத்தை முடித்துக்கொண்டு கனடா திரும்பும்போது துரதிருஷ்ட விபத்தில் சிக்கினார். நிராளி கடந்த 2016-ல் இந்தியாவில் பல் மருத்துவப் படிப்பை முடித்தார். இதையடுத்து 2019-ல் கனடாவில் பல் மருத்துவருக்கான உரிமம் பெற்றார். கனடா வெளியுறவு அமைச்சர் அனிதா ஆனந்த் உள்ளிட்ட பலர் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.