சென்னை: சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச்சட்ட வழக்கில் நேரில் ஆஜராக விலக்குகோரி முன்னாள் அமைச்சர் பொன்முடி தாக்கல் செய்த மனு மீதான உத்தரவை சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் ஜூன் 21-ம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளது.
கடந்த 2006 – 2011 வரையிலான திமுக ஆட்சிகாலத்தில் உயர்கல்வி மற்றும் கனிம வளங்கள், சுரங்கத்துறை அமைச்சராக க.பொன்முடி பதவி வகித்தார். அப்போது விழுப்புரம் மாவட்டத்தில் அனுமதிக்கப்பட்ட அளவைவிட கூடுதலாக செம்மண் வெட்டி எடுத்ததன் மூலம் அரசுக்கு ரூ.28 கோடியே 36 லட்சத்து 40 ஆயிரத்து 600 இழப்பு ஏற்படுத்தியதாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் வழக்குப்பதிவு செய்திருந்தனர்.
பின்னர், செம்மண் முறைகேடு மூலமாக கிடைத்த பெரும் தொகையை ஹவாலா பரிவர்த்தனை மூலம் வெளிநாடுகளில் உள்ள நிறுவனங்களில் முதலீடு செய்துள்ளதாகக் கூறி, சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச்சட்டத்தின் கீழ் திமுக முன்னாள் எம்.பி கவுதம சிகாமணி உள்ளிட்ட 6 பேருக்கு எதிராக அமலாக்கத்துறை சார்பில் கடந்த 2023 ஆகஸ்ட் மாதம், சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கில் கடந்த மாதம் அமலாக்கத்துறை தரப்பில் கூடுதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. அதில், முன்னாள் அமைச்சர் பொன்முடி, அவரது மகன்கள் கவுதம சிகாமணி, அசோக் சிகாமணி ஆகியோர் நிர்வாக இயக்குநர்களாக உள்ள மருத்துவமனை உள்ளிட்ட நிறுவனங்கள் மீதும் குற்றம்சாட்டப்பட்டது.
இந்நிலையில், இந்த வழக்கு சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி ஜெ. ஓம்பிரகாஷ் முன்பாக நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, முன்னாள் அமைச்சர் பொன்முடி, அவரது மகன்கள் கவுதம சிகாமணி, அசோக் சிகாமணி உள்ளிட்டோர் நேரில் ஆஜராகியிருந்தனர். அவர்களுக்கு கூடுதல் குற்றப்பத்திரிகை நகல்கள் வழங்கப்பட்டன.
அதைத்தொடர்ந்து, இந்த வழக்கில் நேரில் ஆஜராவதில் இருந்து தனக்கு விலக்கு அளிக்கக்கோரி பொன்முடி தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், ‘தற்போது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்து விட்ட நிலையில் திருக்கோவிலூர் எம்எல்ஏ-வாகவும், திமுகவின் செயற்குழு உறுப்பினராகவும் பதவி வகித்து வருவதால் சட்டப்பேரவை தேர்தல் தொடர்பான பணிகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது. எனது வயதைக் கருத்தில் கொண்டு விசாரணைக்கு நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும்’ எனக் கோரப்பட்டது.
ஆனால், அமலாக்கத்துறை தரப்பில், ‘பொன்முடி தற்போது திமுகவின் செயற்குழு உறுப்பினராக இல்லை என்பதால் அவருக்கு விசாரணைக்கு நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்கக்கூடாது’ என ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, முன்னாள் அமைச்சர் பொன்முடி வழக்கு விசாரணைக்கு நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்கக் கோரிய மனு மீது ஜூன் 21-ம் தேதி உத்தரவு பிறப்பிக்கப்படும், எனக்கூறி பிரதான வழக்கு விசாரணையை ஜூலை 7-ம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளார்.