பரந்தூர் விமான நிலையம் அமையவுள்ள ஏகனாபுரம் கிராமத்தில் கட்டிட சீரமைப்பு பணிகள் உள்பட பல்வேறு பணிகள் நிறுத்தப்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இதனைத் தொடர்ந்து தங்கள் கிராமத்தில் உள்ள பழுதடைந்த நியாய விலைக் கடையை அவர்களே சரி செய்துள்ளனர். காஞ்சிபுரம் அருகே உள்ள பரந்தூரில் 5476 ஏக்கர் பரப்பளவில் பசுமை வழி விமான நிலையம் அமைய உள்ளது.
மொத்தம் 13 கிராமங்களில் இருந்து இந்த விமான நிலையத்துக்காக நிலங்கள் கையகப்படுத்தப்பட உள்ளன. இந்த நிலங்களில் நீர்நிலைகள், ஏரி, குளங்கள், விவசாய நிலங்கள், வீடுகள், அரசு புறம்போக்கு நிலங்கள் உள்ளிட்டவை அடக்கம். இந்த விமான நிலையத்துக்காக நிலம் எடுக்கப்படும் கிராமங்களில் ஏகனாபுரம் உள்ளிட்ட கிராமங்கள் முழுவதுமாக கையகப்படுத்தப்பட உள்ளன. இதனால் இந்த கிராமத்தை மையமாக வைத்து ஆயிரம் நாளை கடந்து மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் இந்த கிராமத்தில் பழுதடைந்த அரசு கட்டிடங்களை சீரமைத்தல், சாலை அமைத்தல், சிறுபாலங்கள் அமைத்தல் என எந்த பணிகளையும் செய்யாமல் அரசு நிறுத்தி வைத்திருப்பதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவிக்கின்றனர். இந்தப் பகுதி மக்கள் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம், நியாய விலைக் கடை ஆகியவற்றை புதுப்பிக்க வேண்டும் என்று வலியுறுத்தி பல்வேறு இடங்களில் மனு அளித்தனர். கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம் சேதமடைந்த நிலையில் இருப்பதால் அதனை முழுவதுமாக இடித்துவிட்டனர். அதன் பின்னர் அந்த கட்டிடம் கட்டப்படவில்லை என்று பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். நியாய விலைக் கடையையும் சீரமைக்கவில்லை.
இந்நிலையில் ஏகனாபுரம் நியாய விலைக் கடையை அப்பகுதி மக்கள், போராட்டக் குழுவினர் இணைந்து தாங்களாகவே சீரமைக்கத் தொடங்கினர். அரசு சார்பில் சீரமைக்கப்படாததால் தாங்களே சீரமைப்பதாக சமூக வலைதளங்களிலும் பதிவிட்டனர். இதனால் காஞ்சிபுரம் மாவட்டத்தில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து பரந்தூர் விமான நிலைய எதிர்ப்பு போராட்டக் குழுவின் செயலர் சுப்பிரமணியிடம் கேட்டபோது, “பரந்தூர் விமான நிலையத்துக்காக ஏகனாபுரம் கிராமம் கையகப்படுத்தப்பட உள்ளதால் எந்த பணிகளும் நடைபெறவில்லை. குறிப்பாக பொதுப் பணித்துறையால் நடைபெறும் கட்டிடப்பணிகள் உட்பட முக்கிய பணிகளை நிறுத்தி வைத்துள்ளனர். இதேபோல் விமான நிலைய எல்லைக்குள் வரும் சிங்கிள்பாடி என்ற கிராமத்தில் கம்பக்கால்வாய் மீது ரூ.4.5 கோடியில் பாலம் கட்ட அனுமதி தருகின்றனர்.
இந்த பாலம் ஒப்பந்ததாரர் திமுக முக்கிய பிரமுகர்களுக்கு நெருக்கமானவர் என்பதால் இதற்கான நிதி விடுவிக்கப்படுகிறது. ஆனால் எங்கள் கிராமத்தில் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம், நியாய விலைக் கடைக்குகூட போராட வேண்டியுள்ளது. வேறு வழியில்லாமல் நியாய விலைக் கடையை நாங்களே மக்களுடன் இணைந்து சீரமைத்துள்ளோம். பெரும்புதூரைச் சேர்ந்த பொறியாளர் ஒருவர் ஏகனாபுரத்தில் எந்த பணிகளும் வரக் கூடாது என்பதில் மிகத் தீவிரமாக செயல்படுகிறார்” என்றார்.
இதுகுறித்து வட்டார வளர்ச்சி அலுவலகத்தைச் சேர்ந்த சில அலுவலர்களிடம் கேட்டபோது, பரந்தூர் விமான நிலையம் அமைய உள்ள அனைத்து கிராமங்களிலும் அத்தியாவசிய பணிகளை செய்துதான் வருகிறோம். சில முக்கிய பணிகள் தொடர்பான கோரிக்கை வந்தால் அது தொடர்பாக அனுமதி பெற்று நிதி ஒதுக்கினால்தான் செய்ய முடியும் என்றனர்.