Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Thursday, July 3
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»தேசியம்»உலகையே உலுக்கிய பெரும் சோகம்: குஜராத் விமான விபத்தில் 241 பேர் உயிரிழப்பு – முழு விவரம்
    தேசியம்

    உலகையே உலுக்கிய பெரும் சோகம்: குஜராத் விமான விபத்தில் 241 பேர் உயிரிழப்பு – முழு விவரம்

    adminBy adminJune 13, 2025No Comments4 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    உலகையே உலுக்கிய பெரும் சோகம்: குஜராத் விமான விபத்தில் 241 பேர் உயிரிழப்பு – முழு விவரம்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    அகமதாபாத்: குஜராத்தின் அகமதாபாத்தில் இருந்து 242 பேருடன் லண்டன் செல்லும் ஏர் இந்தியா விமானம், புறப்பட்ட சில நிமிடங்களில் கீழே விழுந்து நொறுங்கி தீப்பிடித்தது. இந்த பயங்கர விபத்தில் குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானி உட்பட விமானத்தில் சென்ற 241 பேர் உயிரிழந்தனர். தரையில் விழுந்த விமானம், மருத்துவ கல்லூரி விடுதியில் மோதியதில், மருத்துவ மாணவர்கள் 10 பேரும் இந்த விபத்தில் பரிதாபமாக உயிரிழந்தனர்.

    குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள சர்தார் வல்லபபாய் படேல் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து நேற்று பிற்பகல் 1.38 மணிக்கு ஏர் இந்தியா நிறுவனத்தின் பயணிகள் விமானம் லண்டனுக்கு புறப்பட்டது. இதில் 2 விமானிகள், 10 விமான ஊழியர்கள், 230 பயணிகள் என 242 பேர் பயணம் செய்தனர்.

    முன்னாள் முதல்வர் உயிரிழப்பு: இந்நிலையில், புறப்பட்ட 2 நிமிடங்களில் அகமதாபாத் மெஹானி நகர் குடியிருப்பு பகுதியில் விமானம் விழுந்து நொறுங்கி தீப்பிடித்தது. இதில், விமானத்தில் பயணம் செய்த 241 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். விமான பயணிகளில் 169 பேர் இந்தியர்கள். பிரிட்டனை சேர்ந்த 53 பேர், போர்ச்சுகல் நாட்டை சேர்ந்த 7 பேர், கனடாவை சேர்ந்த ஒருவரும் விமானத்தில் இருந்தனர். விமான ஊழியர்கள், பயணிகள் என மொத்தம் உள்ள 242 பேரில், 128 பேர் ஆண்கள், 100 பேர்பெண்கள், 14 பேர் குழந்தைகள் என தெரியவந்தது. குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானியும் விமானத்தில் பயணம் செய்துள்ளார். விபத்தில் அவரும் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதற்கிடையே, விமானம் விழுந்து நொறுங்கிய குடியிருப்பு பகுதியில் அரசு மருத்துவ கல்லூரி மாணவர் விடுதி உள்ளது. இங்கு ஏராளமான மருத்துவ மாணவர்கள் மதிய உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்த நேரத்தில், விடுதியின் 4 மாடி கட்டிடம் மீது விமானம் மோதியதில், அந்த கட்டிடம் உடைந்து நொறுங்கியது. இதில்,இளநிலை, முதுநிலை மருத்துவ மாணவர்கள் 10 பேர் உயிரிழந்தனர். 50-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படுகாயம் அடைந்தனர். இதில் 25 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளனர்.


    அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட சில நிமிடங்களில், தொடர்ந்து மேலே எழும்ப முடியாமல் மிகவும் தாழ்வாக பறந்த விமானம், தரையில் விழுந்து தீப்பிடித்து எரிந்தது.படம்: பிடிஐ

    விபத்துக்கான காரணம் என்ன? – விபத்து குறித்து அகமதாபாத் விமான நிலைய வட்டாரங்கள் கூறியதாவது: விமான நிலையத்தின் ஓடுபாதையில் ஏர் இந்தியா விமானம் சரியான வேகத்தில்தான் இயக்கப்பட்டுள்ளது. ஆனால், தரையைவிட்டு பறக்க தொடங்கிய பிறகு,போதுமான உயரத்துக்கு மேலே எழும்பவில்லை. அடுத்த 2 நிமிடங்களில் விமானம் கீழே விழுந்து நொறுங்கியுள்ளது. கீழே விழுந்த வேகத்தில் பயங்கரமாக தீப்பிடித்து எரிந்தது.லேண்டிங் கியர் கோளாறு காரணமாக விமான சக்கரம் ஏதாவது கட்டிடம் மீது மோதியிருக்கலாம். விமான இன்ஜினில் பறவைகள் மோதியிருக்கலாம். விமான இன்ஜினில் திடீரென கோளாறு ஏற்பட்டிருக்கலாம். இதுபோன்ற காரணங்களால் விபத்து நேரிட்டிருக்க வாய்ப்பு உள்ளது. விமானத்தின் கறுப்பு பெட்டி மீட்கப்பட்டுள்ளது. அதை ஆய்வு செய்ய வேண்டும். விபத்து குறித்து முழுமையாக விசாரணை நடத்த வேண்டும். அதன் பிறகே, விபத்துக்கான உண்மையான காரணம் தெரியவரும். இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

    அகமதாபாத் போலீஸார் கூறியதாவது: லண்டன் செல்லும் விமானம் என்பதால் எரிபொருள் முழுமையாக நிரப்பப்பட்டு இருந்தது. சுமார் 1.25 லட்சம் லிட்டர் பெட்ரோல் நிரப்பப்பட்டதாக கூறப்படுகிறது. விமானம் புறப்பட்ட 2 நிமிடங்களில், அருகே உள்ள மருத்துவ கல்லூரி விடுதி மீது மோதியுள்ளது. இதில், விமானம் வெடித்து சிதறி, சுற்றுவட்டார பகுதி முழுவதும் தீப்பிடித்து எரிந்தது. உடனடியாக 40 தீயணைப்பு வாகனங்களில் வீரர்கள் விரைந்து வந்து தீயணைக்கும் பணியில் ஈடுபட்டனர். பல மணி நேரம் தீவிரமாக போராடி தீ அணைக்கப்பட்டது. உடல்கள் மிகவும் கருகிய நிலையில் உள்ளதால் அடையாளம் காண முடியவில்லை. ஏராளமான பயணிகளின் தலை, உடல் பாகங்கள் தனித்தனியாக மீட்கப்பட்டுள்ளன. டிஎன்ஏ சோதனைக்கு பிறகு, குடும்பத்தினரிடம் உடல்கள் ஒப்படைக்கப்படும்.

    உயிரிழந்தவர்களின் உறவினர்கள் தொடர்பு கொள்ள, குஜராத் அரசு சார்பில் சிறப்பு கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது. 9978405304, 079 23251900 ஆகிய உதவி எண்கள் வெளியிடப்பட்டுள்ளன. இவ்வாறு போலீஸார் கூறினர்.

    அமித் ஷா ஆய்வு: பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் குஜராத் முதல்வர் பூபேந்திர படேலை செல்போனில் தொடர்பு கொண்டு, மீட்பு பணிகள் குறித்து முழுமையாக கேட்டறிந்தனர். பின்னர், உள்துறை அமைச்சர் அமித் ஷா டெல்லியில் இருந்து அகமதாபாத்துக்கு விரைந்து வந்தார். முதல்வர் பூபேந்திர படேலுடன் சென்று, விபத்து நிகழ்ந்த பகுதியை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    ஒரே ஒரு பயணி உயிர் பிழைத்த அதிசயம்: விமான விபத்தில் விஷ்வாஸ் குமார் ரமேஷ் (40) என்றபயணி அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்துள்ளார். சற்று பதற்றமான நிலையில் இருந்தாலும், மிக சாதாரண விபத்தில் சிக்கியவரை போல வெகு இயல்பாக அவர் நடந்து சென்றார். காலில் லேசாக அடிபட்டிருந்ததால், சற்று தாங்கியபடி சென்றார். அவர் நடந்து செல்லும் காட்சி, வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

    அவர் கூறியபோது, ‘‘கண்மூடி திறப்பதற்குள் எல்லாம் முடிந்துவிட்டது. எப்படி உயிர் பிழைத்தேன் என்பது தெரியவில்லை. மீட்பு படை வீரர்கள் என்னை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்’’ என்றார். இவர், டையூ பகுதியை பூர்வீகமாக கொண்டவர். 20 ஆண்டுகளாக குடும்பத்துடன் லண்டனில் வசிக்கிறார். அந்நாட்டு குடியுரிமை பெற்றுள்ளார். விமானத்தின் 11ஏ இருக்கையில் பயணம் செய்துள்ளார். அதே விமானத்தில் பயணம் செய்த அவரது அண்ணன் அஜய் குமார் விபத்தில் உயிரிழந்துவிட்டார். அவரது உடலை அடையாளம் காண முடியவில்லை என்று உறவினர்கள் தெரிவித்தனர்.

    கறுப்பு பெட்டி கிடைத்தது: விமானத்தின் வால் பகுதியில் கறுப்பு பெட்டி பொருத்தப்பட்டு இருக்கும். விமானிகள், ஊழியர்களின் உரையாடல்கள் அனைத்தும் இதில் பதிவாகும். விமானத்தின் வேகம், பறக்கும் உயரம், திசை, காலநிலை உள்ளிட்ட தகவல்களும் பதிவாகும். பெரும் தீ விபத்து, கடலில் மூழ்கினாலும் கறுப்பு பெட்டிக்கு பாதிப்பு ஏற்படாது.

    விபத்துக்குள்ளான விமானத்தின் கறுப்பு பெட்டி மீட்கப்பட்டுள்ள நிலையில், ஆய்வகத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது. இதை ஆய்வு செய்து, அதில் பதிவான தகவல்களை பெற 15 நாட்கள் வரை ஆகும். இதன்பிறகே, விபத்துக்கான உண்மையான காரணம் தெரியும் என்று விமான போக்குவரத்து துறை அதிகாரிகள் கூறினர். ‘இந்திய அதிகாரிகள் கேட்டுக் கொண்டால், விபத்து குறித்த விசாரணைக்கு உதவ அமெரிக்கா தயாராக இருக்கிறது’ என்று அமெரிக்க விமான போக்குவரத்து துறை (எஃப்ஏஏ) தெரிவித்துள்ளது.

    குடியரசு தலைவர், பிரதமர், முதல்வர், உலக தலைவர்கள் இரங்கல்: விமான விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பல்வேறு தலைவர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

    குடியரசு தலைவர் திரவுபதி முர்மு: விமான விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். அவர்களது குடும்பங்களின் மனஆறுதலுக்காக பிரார்த்தனை செய்கிறேன். இந்த நேரத்தில் ஒட்டுமொத்த நாடும் உங்களது துயரத்தில் பங்கு கொள்கிறது.

    உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய்: விமான விபத்தில் உயிரிழந்த பயணிகள், மருத்துவ கல்லூரிமாணவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.

    பிரதமர் மோடி: அகமதாபாத் விமான விபத்து பேரதிர்ச்சி அளிக்கிறது. மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வார்த்தைகளால் விவரிக்க முடியாத வகையில் இதயம் உடைந்திருக்கிறது. இந்த துயரமான நேரத்தில், விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்துக் கொள்கிறேன். மீட்பு பணியில் ஈடுபட்டிருக்கும் அமைச்சர்கள், அதிகாரிகளுடன் தொடர்பில் உள்ளேன்.

    முதல்வர் ஸ்டாலின்: அகமதாபாத் விமான விபத்தில் பாதிக்கப்பட்டவர்கள் குறித்து மிகவும் கவலை கொள்கிறேன். சாத்தியம் உள்ள அனைத்து வழிகளிலும் மீட்பு, நிவாரண பணிகள் நடந்து வருகின்றன என நம்புகிறேன்.

    பிரிட்டிஷ் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர்: அகமதாபாத் – லண்டன் விமான விபத்து தொடர்பான புகைப்படங்கள், வீடியோ அதிர்ச்சி அளிக்கும் வகையில் உள்ளன. இதில் பிரிட்டிஷ் குடிமக்களும் உயிரிழந்துள்ளனர். விமான விபத்தில் உயிரிழந்த அனைவரது குடும்பங்களுக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர். ரஷ்ய அதிபர் புதின் உள்ளிட்ட உலக தலைவர்கள், பல்வேறு மாநில முதல்வர்கள், அரசியல் கட்சிகளின் தலைவர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.





    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    தேசியம்

    “மகாராஷ்டிராவில் மராத்தி தான் பேச வேண்டும், இல்லையெனில்…” – மாநில அமைச்சர் எச்சரிக்கை

    July 3, 2025
    தேசியம்

    இமாச்சலப் பிரதேசத்தில் கனமழைக்கு இதுவரை 63 பேர் உயிரிழப்பு – மீட்புப் பணிகள் தீவிரம்

    July 3, 2025
    தேசியம்

    விவசாயிகள் கடனில் மூழ்குகிறார்கள்; அரசு அலட்சியமாக இருக்கிறது: ராகுல் காந்தி

    July 3, 2025
    தேசியம்

    தலாய் லாமா தவிர வேறு யாரும் அடுத்த புத்த மதத் தலைவரை தீர்மானிக்க முடியாது: சீனாவுக்கு இந்தியா பதிலடி

    July 3, 2025
    தேசியம்

    பிஹார் மாநிலத்தில் இளைஞர்களுக்கு உதவித் தொகையுடன் தொழிற்பயிற்சி

    July 3, 2025
    தேசியம்

    இந்தியா – அமெரிக்கா இடையே கையெழுத்தாகிறது 10 ஆண்டு பாதுகாப்பு கட்டமைப்பு ஒப்பந்தம்

    July 3, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • சென்னையில் வீடு வீடாகச் சென்று முதல்வர் ஸ்டாலின் ‘ஓரணியில் தமிழ்நாடு’ பிரச்சாரம்
    • இஸ்ரோவின் சம்வாட் திட்ட தொடர்பு: சுபன்ஷு சுக்லா மாணவர்களுடன் பேசுகிறார்; விண்வெளியில் வாழ்க்கை பற்றி பேசுகிறது – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு விசாரணையை சிபிஐக்கு மாற்றக் கோரிய வழக்கு: காவல் துறை பதிலளிக்க உத்தரவு
    • சிறந்த செரிமானம், சர்க்கரை கட்டுப்பாடு மற்றும் அதிக ஆற்றலுக்காக 3 உணவுகளை சத்குரு பரிந்துரைக்கிறார்
    • இங்கிலாந்துக்கு எதிராக இரட்டை சதம் விளாசி ஷுப்மன் கில் சாதனை!

    Recent Comments

    No comments to show.

    Archives

    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.