பாரிஸ்: நடப்பு பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரின் ஆடவர் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் இத்தாலியின் ஜன்னிக் சின்னரை வீழ்த்தி, பட்டத்தை தக்கவைத்தார் ஸ்பெயினின் கார்லோஸ் அல்கராஸ். இந்த ஆட்டம் டென்னிஸ் விளையாட்டின் வரலாற்றில் அதிக நேரம் விளையாடப்பட்ட இறுதி போட்டிகளில் ஒன்றாக அமைந்தது.
சுமார் 5 மணி நேரம் மற்றும் 29 நிமிடங்கள் வரை இந்த ஆட்டத்தில் அல்கராஸ் 4-6, 6-7(7-4), 6-4, 7-6(7-3), 7-6(10-2) என்ற செட் கணக்கில் பட்டத்தை வென்றார். இதில் முதல் 2 செட்களை இழந்த நிலையில் அடுத்த மூன்று செட்களை வென்று அசத்தினார். இந்த இறுதிப் போட்டி பிரெஞ்சு ஓபன் கிராண்ட் ஸ்லாம் தொடரில் அதிக நேரம் விளையாடப்பட்ட இறுதிப் போட்டியாக அமைந்தது.
நேற்று பாரிஸில் நடைபெற்ற இந்த இறுதிப் போட்டியில் முதல் 2 செட் ஆட்டத்துக்கு பிறகு சின்னருக்கு ஒரே ஒரு செட்டில் மட்டுமே வெற்றி தேவைப்பட்டது. ஆனால், அதை தனது அபார திறனால் தவிடு பொடியாக்கினார் அல்கராஸ். அடுத்த மூன்று செட்களை வென்று அசத்தினார். இருவரும் களிமண் களத்தில் கடுமையாக போராடினர். இவர்கள் இருவரும் 2000-ம் ஆண்டுக்கு பிறகு பிறந்த வீரர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கு முன்னர் ஜோகோவிச் (2021), காஸ்டன் காடியோ (2004), ஆண்ட்ரே அகாசி (1999), இவான் (1984), ஆண்ட்ரே அகாசி (1974) ஆகியோர் இதற்கு முன்பு பிரெஞ்சு ஓபனில் முதல் 2 செட்களை இழந்த பிறகு பட்டம் வென்றுள்ளனர். இப்போது இந்தப் பட்டியலில் லேட்டஸ்ட்டாக இணைந்துள்ளார் அல்கராஸ். இது அல்கராஸ் வென்றுள்ள 5-வது கிராண்ட் ஸ்லாம் பட்டம் ஆகும்.