சென்னை: தமிழ்நாட்டின் உரிமைகள் காக்கப்படவும், நமது திராவிட மாடல் அரசின் திட்டங்கள் தொடர்ந்து மக்களுக்குச் சென்று சேரவும் மூன்று மணி நேரத்திற்கும் மேலாக ஆக்கப்பூர்வமான ஆலோசனைகளுடன் நடந்தேறியது இன்றைய மாவட்டக் கழகச் செயலாளர்கள் கூட்டம் என திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில், “தமிழ்நாட்டின் உரிமைகள் காக்கப்படவும் – நமது திராவிட மாடல் அரசின் திட்டங்கள் தொடர்ந்து மக்களுக்குச் சென்று சேரவும், மக்களை ‘ஓரணியில் தமிழ்நாடு’ என திமுகவில் இணைத்திட, சொல்லாற்றல் – செயலாற்றல் மிக்க செயல்வீரர்களான மாவட்டக் கழகச் செயலாளர்கள், நாடாளுமன்ற – சட்டமன்ற உறுப்பினர்கள், தொகுதிப் பொறுப்பாளர்கள் பங்கேற்க மூன்று மணி நேரத்திற்கும் மேலாக ஆக்கப்பூர்வமான ஆலோசனைகளுடன் நடந்தேறியது இன்றைய மாவட்டக் கழகச் செயலாளர்கள் கூட்டம்.
‘களம் 2026’ தேர்தல் பரப்புரையை இப்போதே தொடங்கும் விதமாக மக்களை சந்திக்கப் புறப்படும் கழகத் தோழர்களின் ஒவ்வொரு நகர்வும் வெற்றி பெறத் தலைமைத் தொண்டனாக வாழ்த்துகிறேன்’ எனத் தெரிவித்துள்ளார்
முன்னதாக, திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் காணொலி மூலமாக நடைபெற்ற திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நிறைவு பெற்றது. “ஓரணியில் தமிழ்நாடு” என்ற பெயரில் திமுக புதிய உறுப்பினர் சேர்க்கையை விரைந்து செயல்படுத்தும் விதமாக இந்தக் கூட்டம் நடைபெற்றது.