இந்திய அணி இங்கிலாந்தில் 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடுகிறது, முதல் டெஸ்ட் வரும் 20-ம் தேதி தொடங்குகிறது. இந்தத் தொடரின் 2-வது டெஸ்ட் போட்டிக்கு இங்கிலாந்தின் அதிவேக பந்து வீச்சாளார் ஜோப்ரா ஆர்ச்சர் இங்கிலாந்து அணியில் இடம்பெறுவார் என்று ஆதாரபூர்வ செய்திகள் தெரிவிக்கின்றன.
இங்கிலாந்து அணித்தேர்வுக்குழுவும் இதை உறுதி செய்துள்ளது. இன்னும் 15 நாட்களில் சசெக்ஸ் அணி டுர்ஹம் அணியுடன் செஸ்டர் லீ ஸ்ட்ரீட் மைதானத்தில் மோதும் போது ஆர்ச்சரின் உடல்தகுதி தெரிந்து விடும். எனவே 2-வது இந்திய டெஸ்ட் போட்டிக்கு ஆர்ச்சர் அணிக்குள் வருவதற்கான பிரகாசமான வாய்ப்புகள் உள்ளன.
30 வயதாகும் ஆர்ச்சர் முதல் தர கிரிக்கெட் ஆடியே 4 ஆண்டுகள் ஆகின்றன. இந்தியா ஏ அணிக்கு எதிராக இங்கிலாந்து லயன்ஸ் அணிக்காக 2-வது போட்டியில் ஆடுவதாக இருந்தார், ஆனால் கட்டை விரலில் ஏற்பட்ட காயம் காரணமாக இடம்பெறவில்லை.
இந்திய அணி உடனான தொடருக்கு ஆர்ச்சர் வந்தார் என்றால், அவர் 4 டெஸ்ட் போட்டிகள் ஆடி நிரூபித்து விட்டார் என்றால் இங்கிலாந்தின் கனவுத் தொடரான ஆஷஸ் தொடரிலும் அவர் இருப்பார். இதுவரை 13 டெஸ்ட் போட்டிகள் ஆடி 42 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார் ஆர்ச்சர். இதில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆஷஸ் தொடரில் இருமுறை 6 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.
அதே போல் காயமடைந்து மீண்டுள்ள மார்க் உட், ஆலி ஸ்டோன் ஆகியோருக்கும் முழங்கால் அறுவை சிகிச்சை நடந்துள்ளது. இவர்களும் இந்தியாவுக்கு எதிரான தொடரின் பிற்பகுதியில் இங்கிலாந்து அணியுடன் இணைவார்கள் என்று எதிர்பார்க்கலாம் என்கிறார் தேர்வுக்குழுத் தலைவர் லூக் ரைட்.
சமீபத்திய இங்கிலாந்தின் சென்சேஷனல் வேகப்பந்து வீச்சாலர் கஸ் அட்கின்சனும் காயம் காரணமாக முதல் டெஸ்ட் போட்டியில் இல்லை.
இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடர் இங்கிலாந்துக்குப் பெரிய சவாலாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. காயங்கள் அந்த அணியின் பவுலிங்கை காலி செய்துள்ளது. ஆனால், அந்த அணியின் பேட்டிங் வலுவாக உள்ளது. இருந்தாலும் எதிரணியின் 20 விக்கெட்டுகளை வீழ்த்தினால்தான் வெற்றி சாத்தியம்.
ஜூன் 20-ம் தேதி தொடங்கும் முதல் டெஸ்ட் போட்டி ஹெடிங்லீயில் நடக்கிறது. எட்ஜ்பாஸ்டனில் ஜூலை 2-6 மற்றும் லார்ட்ஸ் மைதானத்தில் ஜூலை 10-14 தேதிகளில் அடுத்தடுத்து 2 டெஸ்ட் போட்டிகள் நடைபெறுகின்றன. இந்திய அணியும் அனுபவ வீரர்கள் இல்லாத ஆனால் திறமை நிரம்பிய அணியாக உள்ளது. பந்து வீச்சில் பும்ரா மட்டுமே அவர்களுக்கு அச்சுறுத்தல். எது எப்படியிருந்தாலும் ஜூன் 20 முதல் சவாலான டெஸ்ட் கிரிக்கெட்டுக்குப் பஞ்சமில்லை.