சென்னை: தமிழகத்தின் பிரதிநிதித்துவம் குறையும் சூழல் வந்தால், அதை எதிர்க்கும் முதல் குரல் என்னுடையதாகத்தான் இருக்கும் என்று அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
தமிழக முதல்வர் ஸ்டாலின் கடந்த ஜூன் 4-ம் தேதி தனது எக்ஸ் வலைதளப் பக்கத்தில், “தொகுதி மறுவரையறை ஆபத்து குறித்து முன்பே நான் எச்சரித்திருந்தேன். அது இப்போது நிரூபணமாகிவிட்டது. பாஜகவுடன் கூட்டு சேர்ந்துள்ளதன் மூலம், பழனிசாமி இந்த சதித்திட்டம் பற்றிப் பேசாமல் அமைதி காப்பதுடன், துரோகத்துக்குத் துணைபோகிறவராகவும் இருக்கிறார். டெல்லி ஆதிக்கத்தின் முன் அவர் அடிபணிந்துவிட்டது இப்போது தெள்ளத் தெளிவாகியுள்ளது” என்று பதிவிட்டிருந்தார்.
இதற்கு பதில் அளித்து அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி, தனது எக்ஸ் வலைதளப் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது: தொகுதி மறுசீரமைப்பு எப்போது நடந்தாலும், அதில் தமிழகத்தின் உரிமைகள் பாதிக்கப்படக் கூடாது என்பதை மத்திய உள்துறை அமைச்சரை சந்தித்தபோதே தெரிவித்தது நான்.
என் நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை. தமிழகத்தின் பிரதிநிதித்துவம் குறையும் சூழல் வந்தால், அதை எதிர்க்கும் முதல் குரல் என்னுடையதாகத்தான் இருக்கும். கூட்டணி அறிவிக்கையின்போதே அடிமை சாசனம் எழுதிக் கொடுக்கும் கட்சிகள் திமுக கூட்டணியில்தான் இருக்கின்றனவே தவிர, இங்கு யாரும் அப்படி இல்லை.
இன்னும் வராத ஒன்றை `புலி வருது, புலி வருது’ என்று பூச்சாண்டி காட்டும் வேலையைத்தான் ஸ்டாலின் தொடர்ந்து செய்கிறார். தன் ஆட்சியின் அவலங்களை இதைவைத்து மறைக்க நினைக்கும் ஸ்டாலினின் வழக்கமான அரசியலை தமிழக மக்கள் இனியும் நம்பப் போவதில்லை.
உண்மையில் தமிழக மக்கள் தொகுதி மறுவரையறை குறித்தோ, இந்தி திணிப்பு குறித்தோ தெளிவான மனநிலையில் இருக்கிறார்கள். ஆனால், தமிழகத்தில் நடக்கும் திமுக ஆட்சியில் மக்கள் அன்றாடம் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து, அவமானம் சுமந்து, வேலைவாய்ப்பு இல்லாமல், தங்கள் வீட்டுப் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லாமல்தான் அவதிப்படுகிறார்கள்.
ஸ்டாலின் அவர்களே, மடைமாற்று அரசியலை நிறுத்திவிட்டு, முதலில் உங்கள் ஆட்சியில் நடக்கும் ரவுடியிசத்தையும், திருட்டுகளையும் நிவர்த்தி செய்வது எப்படி என்பது குறித்து பேசுங்கள். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.