சியோல்: உஸ்பெகிஸ்தான், ஜோர்டான் அணிகள் முதன்முறையாக ஃபிபா உலகக் கோப்பை கால்பந்து தொடரில் விளையாடுவதற்கான தகுதியை பெற்றுள்ளன. அதேவேளையில் தென் கொரியா 11-வது முறையாக தொடர்ச்சியாக பங்கேற்க உள்ளது.
ஃபிபா உலகக் கோப்பை கால்பந்து தொடர் வரும் 2026-ம் ஆண்டு தென் அமெரிக்காவில் நடைபெறுகிறது. இந்த தொடரை அமெரிக்கா, கனடா, மெக்சிகோ ஆகிய 3 நாடுகள் இணைந்து நடத்துகின்றன. இதில் 48 அணிகள் கலந்து கொள்கின்றன. இந்த தொடருக்கான தகுதி சுற்று பல்வேறு கண்டங்களில் நடைபெற்று வருகின்றன.
இதில் ஆசிய கண்டங்களைச் சேர்ந்த அணிகளுக்கான தகுதி சுற்றின் 3-வது கட்டத்தில் நேற்று முன்தினம் இரவு அபுதாபியில் நடைபெற்ற ஆட்டத்தில் ஐக்கிய அரபு அமீரகம் – உஸ்பெகிஸ்தான் அணிகள் மோதின. இந்த ஆட்டம் கோல்களின்றி டிராவில் முடிவடைந்தது.
இதன் மூலம் இன்னும் ஒரு ஆட்டம் மீதமுள்ள நிலையில் ‘ஏ’ பிரிவில் 2-வது இடத்தை பிடித்து உலகக் கோப்பை தொடருக்கு நேரடியாக தகுதி பெறுவதை உறுதி செய்துள்ளது உஸ்பெகிஸ்தான். அந்த அணி உலகக் கோப்பை தொடருக்கு தகுதி பெறுவது இதுவே முதன்முறையாகும்.
இதே பிரிவில் 3 மற்றும் 4-வது இடங்களை பிடித்துள்ள ஐக்கிய அரபு அமீரகம், கத்தார் அணிகள் தகுதி சுற்றின் அடுத்த கட்டத்துக்கு முன்னேறி உள்ளன. ‘பி’ பிரிவில் நடைபெற்ற ஆட்டத்தில் தென் கொரியா 2-0 என்ற கோல் கணக்கில் ஈராக் அணியை வீழ்த்தி உலகக் கோப்பை தொடருக்கு தகுதி பெற்றது. இதே பிரிவில் இடம் பெற்றுள்ள ஜோர்டான் அணி 3-0 என்ற கோல் கணக்கில் ஓமன் அணியை வீழ்த்தி முதன் முறையாக உலகக் கோப்பை தொடரில் விளையாட தகுதி பெற்றது.
‘சி’ பிரிவில் ஜகாத்தாவில் நடைபெற்ற ஆட்டத்தில் சீனா 0-1 என்ற கோல் கணக்கில் இந்தோனேஷியாவிடம் தோல்வி அடைந்தது. இந்த தோல்வியால் சீனா, 2026-ம் ஆண்டு ஃபிபா உலகக் கோப்பை கால்பந்து தொடருக்கு தகுதி பெறும் வாய்ப்பை இழந்தது.
ஃபிபா உலகக் கோப்பை கால்பந்து தொடருக்கான தகுதி சுற்றில் ஆசிய கண்டத்தை சேர்ந்த 18 அணிகள் மோதின. இதில் தற்போது தென் கொரியா, உஸ்பெகிஸ்தான், ஜோர்டான் அணிகள் தகுதி பெற்றுள்ளன. ஏற்கெனவே ஈரான், ஜப்பான் அணிகள் தகுதி பெற்றிருந்தன.
தகுதி சுற்று 3-வது கட்டத்தில் அனைத்து அணிகளுக்கும் தலா ஒரு ஆட்டங்கள் மீதம் உள்ளன. இதில் ‘சி’ பிரிவில் உள்ள ஆஸ்திரேலியா, சவுதி அரேபியா அணிகளில் ஏதேனும் ஒன்று தகுதி பெற வாய்ப்பு உள்ளது.
3-வது கட்ட தகுதி சுற்று ஆட்டங்களின் முடிவில் 3 பிரிவுகளிலும் 3 மற்றும் 4-வது இடங்களை பிடிக்கும் 6 அணிகள் 4-வது கட்ட தகுதி சுற்றில் பலப்பரீட்சை நடத்தும்.
இந்த 6 அணிகளம் இரு பிரிவுகளாக பிரிக்கப்படும். இந்த இரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் உலகக் கோப்பை தொடருக்கு முன்னேறும். அதேவேளையில் இரு பிரிவிலும் 2-வது இடங்களை பிடிக்கும் அணிகள் 5-வது கட்ட தகுதி சுற்றில் 2 முறை நேருக்கு நேர் மோதும்.
இதில் வெற்றி பெறும் அணி ஆப்பிரிக்க கால்பந்து கூட்டமைப்பு, தென் அமெரிக்க கால்பந்து கூட்டமைப்பு, ஒசியானா கால்பந்து கூட்டமைப்பு ஆகியவற்றை சேர்ந்த தலா ஒரு அணிகள் வடக்கு, மத்திய அமெரிக்கா மற்றும் கரீபியன் கால்பந்து கூட்டமைப்பை சேர்ந்த 2 அணிகள் ஆகியவற்றுடன் இணைந்து கண்டங்களுக்கு இடையிலான பிளேஆஃப் சுற்றில் விளையாடும்.