மதுரை: “நகைக் கடன் கட்டுப்பாடு விவகாரத்தில் மக்களின் ஆலோசனைகளும் பரிசீலித்து இறுதி செய்யப்படும்” என சு. வெங்கடேசன் எம்.பி எழுதிய கடித்தத்துக்கு ரிசர்வ் வங்கி கவர்னர் சஞ்சய் மல்ஹோத்ரா பதிலளித்துள்ளார்.
இது தொடர்பாக சு.வெங்கடேசன் எம்.பி வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், “புதிய நகைக் கடன் ‘நகல்’ விதிமுறைகள் எளிய, நடுத்தர மக்களின் வாழ்வுரிமையை பறிக்கும் வகையில் அமைந்திருப்பது குறித்து ரிசர்வ் வங்கி கவர்னருக்கு மே 28-ல் கடிதம் எழுதியிருந்தேன். இதற்கு ஜூன் 4, 2025 அன்று ரிசர்வ் வங்கி கவர்னர் சஞ்சய் மல்ஹோத்ரா பதில் அளித்துள்ளார்.
கவர்னர் பதிலில், தற்போது வெளியிடப்பட்டு இருப்பது நகல் விதிமுறைகளே. உங்கள் கருத்துகள் கணக்கில் கொள்ளப்படும். இது தொடர்பான மக்களின் ஆலோசனைகளும் பரிசீலிக்கப்பட்டே இறுதி செய்யப்படும். சிறு கடன்தாரர்கள் உள்ளிட்டோர் நலன்களும் கருத்தில் கொள்ளப்படும் என பதிலளித்துள்ளார்.
ஏற்கெனவே நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து இப்பிரச்சினை மீதான தீர்வைக் கோரிய பின்புலத்தில் அவர் ரிசர்வ் வங்கிக்கு அறிவுறுத்தல்களை வழங்கி இருந்தார். நகல் விதிமுறைகள் இறுதி செய்யப்படும்போது, நாம் எழுப்பியுள்ள பிரச்சினைகள் அனைத்திற்கும் தீர்வு காணப்படும் என நம்புகிறேன்” என்று கூறியுள்ளார்.