மும்பை: ஷுப்மன் கில் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இதற்காக இந்திய அணி இன்று இங்கிலாந்து புறப்பட்டுச் செல்கிறது. இதையொட்டி மும்பையில் நேற்று கேப்டன் ஷுப்மன் கில்லும், பயிற்சியாளர் கவுதம் கம்பீரும் பத்திரிகையாளர்களை சந்தித்தனர். அப்போது ஷுப்மன் கில் கூறியதாவது:
நான் கேப்டனாக நியமிக்கப்பட்டபோது மிகவும் மகிழ்ச்சியடைந்தேன். பேட்டிங் வரிசையை நாங்கள் இன்னும் முடிவு செய்யவில்லை. எங்கள் திட்டங்களை வகுக்க 10 நாட்கள் உள்ளன. இங்கிலாந்தில் 10 நாட்கள் பயிற்சி முகாமில் கலந்து கொள்கிறோம். இதனுடன் நடைபெறும் பயிற்சி ஆட்டத்துக்கு பின்னரே டெஸ்ட் போட்டிக்கான பேட்டிங் வரிசையை முடிவு செய்வோம்.
ஒரு தலைவராக நான், முன்மாதிரியாக செயல்பட்டு அணியை வழிநடத்த விரும்புகிறேன், நான் விளையாடும் எந்த போட்டியிலும் ஒரு பேட்ஸ்மேனாகவே விளையாட விரும்புகிறேன். சராசரி மற்றும் ரன்கள் எண்ணிக்கையை நான் பார்ப்பது கிடையாது. ஆனால் எனது செயல்திறனால் அணியை வழிநடத்த விரும்புகிறேன்.
கேப்டன்ஷிப்பில் எனக்கென குறிப்பிட்ட பாணி எதுவும் இல்லை. நேரம் மற்றும் அனுபவத்துடன், எனது தனிப்பட்ட பாணி வெளிப்படும். வீரர்களின் பலம் மற்றும் பலவீனங்களை அறிந்து அவர்களுக்கு உதவி செய்ய விரும்புகிறேன். வீரர்கள் அணியில் தங்கள் இடம் குறித்து பாதுகாப்பாக உணருவதை உறுதி செய்வது கேப்டன் பணிகளில் முக்கியமான ஒன்று.
ஒவ்வொரு சுற்றுப்பயணத்திலும் தொடரை வெல்ல அழுத்தம் இருக்கும். இந்தியாவுக்காக பல போட்டிகளில் வெற்றி பெற்ற இரண்டு வீரர்களின் (ரோஹித் சர்மா, விராட் கோலி) இடத்தை நிரப்புவது நிச்சயமாக கடினமாக இருக்கும். இது வேறுபட்டதாக இருக்கும் என்று நான் நினைக்கவில்லை. எங்களிடம் அனுபவமும் திறமையும் சிறந்த கலவையில் உள்ளது.
இங்கிலாந்து அணி ஒரு குறிப்பிட்ட வழியில் (பாஸ்பால்) விளையாடுகிறார்கள். இந்தியாவில் நாங்கள் அதை கண்டோம். நாங்கள் எங்கள் செயல்திறனில் முன்முயற்சியுடன் இருந்தால் அது எங்களுக்கு ஒரு வாய்ப்பை அளிக்கும். இவ்வாறு ஷுப்மன் கில் கூறினார்.
‘பும்ரா விஷயத்தில் முடிவு எடுக்கவில்லை’: இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளரான கவுதம் கம்பீர் கூறும்போது, “ஆட்டத்தின் முடிவு எதுவாக இருந்தாலும் நான் எப்போதும் அழுத்தத்திலேயே இருக்கிறேன். நியூஸிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா தொடர்களுக்கு பிறகு நான் அழுத்தத்தில் இருந்தேன், சாம்பியன்ஸ் டிராபியை வென்ற பிறகும் அதே அழுத்தத்தை உணர்ந்தேன். கவுன்டி கிரிக்கெட்டில் விளையாடிய வீரர்கள் இருப்பது எப்போதும் சிறந்தது. கருண் நாயர் இந்தியா-ஏ அணிக்காக இரட்டை சதம் அடித்துள்ளார். ஒன்றிரண்டு போட்டிகளை வைத்து நாங்கள் அவரை மதிப்பிட மாட்டோம்.
அணிக்கு நல்லது செய்ய மற்றொரு வாய்ப்பு வீரர்களுக்கு கிடைத்துள்ளது. நாங்கள் நல்ல இடத்தில் இருக்கிறோம், முக்கியமான சுற்றுப்பயணத்துக்கு எங்களிடம் தரமான வீரர்கள் உள்ளனர். இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் நிலைமையை கருத்தில் கொண்டு வெற்றியை தேடித்தரக்கூடிய சிறந்த 11 வீரர்களை தேர்வு செய்வோம். ஜஸ்பிரித் பும்ரா எந்த மூன்று டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவார் என்பது குறித்து நாங்கள் இன்னும் முடிவெடுக்கவில்லை” என்றார்.
‘ரோடுஷோவை விட மக்கள் உயிர் முக்கியம்’: பெங்களூருவில் ஐபிஎல் வெற்றி கொண்டாட்டத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்கள் குறித்து இந்திய அணியின் பயிற்சியாளரான கவுதம் கம்பீர் கூறும்போது, “ரோடுஷோக்களை நடத்துவதில் எனக்கு ஒருபோதும் ஆர்வம் இல்லை. நான் ஒரு வீரராக இருந்தபோதும் அது பிடிக்கவில்லை, இப்போது ஒரு பயிற்சியாளராகவும் அதை விரும்பவில்லை. மக்களின் உயிர்கள் அதைவிட முக்கியம். பெங்களூருவில் நடந்தது துயரமானது, எதிர்காலத்தில் இதுபோன்று எதுவும் நடக்காது என்று நம்புகிறேன். நாம் பொறுப்புள்ள குடிமக்களாக இருக்க வேண்டும். நாம் ஒரு ரோடு ஷோவை நடத்தத் தயாராக இல்லை என்றால், அதைச் செய்திருக்கக் கூடாது” என்றார்.