மதுரை: மதுரை காமராசர் பல்கலைக்கழக பேராசிரியர் வரலட்சுமி தமிழ்நாடு உயிரியல் அறிவியல் துறைக்கான விஞ்ஞானி விருதுக்கு தேர்வாகியுள்ளார்.
தமிழ்நாடு மாநில அறிவியல் தொழில்நுட்ப மன்றம் சார்பில் சிறந்த ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்பாளர்களுக்கு தமிழ்நாடு உயிரியல் அறிவியல் துறைக்கான விஞ்ஞானி விருது ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது. மாநில அளவில் பங்கேற்கும் பல்கலைக்கழகம் மற்றும் அறிவியல் தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களின் பேராசிரியர்கள் சமர்ப்பிக்கும் ஆராய்ச்சிகள் மற்றும் ஆய்வுக் கட்டுரைகளின் அடிப்படையில் விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.
அதன்படி, 2023-ம் ஆண்டுக்கான விஞ்ஞானி விருதுக்கு மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் உயிரி தொழில்நுட்பப் பள்ளியின் மூலக்கூறு நுண்ணுயிரியல் துறை இணைப் பேராசிரியரான வரலட்சுமி, உயிரியல் அறிவியல் துறைக்கான விருது பெற்றுள்ளார். பேராசிரியர் வரலட்சுமி இதுவரை 110 ஆய்வுக் கட்டுரைகளை வெளியிட்டுள்ளார். 4 கண்டுபிடிப்புகளை காப்புரிமைக்கு விண்ணப்பித்து 2-க்கு காப்புரிமை பெற்றுள்ளார்.
12 பேர் பிஎச்டி பட்டம்பெற வழிகாட்டியாக இருந்துள்ளார். பல்வேறு நிறுவனங்களிடம் இருந்து ரூ.10 கோடிக்கு மேல் ஆராய்ச்சி நிதி பெற்றுள்ளார். மேலும், டிஎஸ்டி இளைய விஞ்ஞானி விருது, கவுரவ ஃபெல்லோ விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளும் பெற்றுள்ளார். இவருடன் பிற பல்கலைக்கழகங்கள், ஆராய்ச்சி நிறுவனங்களைச் சேர்ந்த மேலும் 12 பேரும் இவ்விருதுக்குத் தேர்வாகியுள்ளனர்.