ஓசூர்: ஒசூரில் கழிவுநீர் கால்வாயில் விழுந்த தொழிலாளிக்கு இழப்பீடு வழங்காத மாநகராட்சியின் அசையா சொத்துகளை நீதிமன்ற ஊழியர்கள் ஜப்தி செய்ய வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் ராஜீவ்காந்தி நகரை சேர்ந்த விவேகானந்தன் (55). இவர் தனியார் தொழிற்சாலையில் பணி செய்து வந்தார். இந்நிலையில், கடந்த 1996-ம் ஆண்டு ஓசூர் பேருந்து நிலையம் அருகே நகராட்சிக்கு சொந்தமன திறந்த நிலையில் இருந்த கழிவுநீர் கால்வாயில் தவறிவிழுந்தார். மேலும், கழிவுநீர் கால்வாயில் இருந்து வெளியான விஷ வாய்வு தாக்கி உயிரிழந்தார்.
இதனையடுத்து உயிரிழந்த விவேகானந்தனின் மனைவி சாந்தி கணவர் உயிரிப்புக்கு நகராட்சியின் அலட்சியமே காரணம், எனவே ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என ஓசூர் சார்பு நீதிமன்றத்தில் 2001-ம் ஆண்டு வழக்கு தொடந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் கடந்த 2015-ம் ஆண்டு ரூ.6.65 லட்சம் இழப்பீடு வழங்க மாநகராட்சிக்கு உத்தரவிட்டது. இருப்பினும், நகராட்சி சார்பில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்கவில்லை என கூறப்படுகிறது.
இதனிடையே, உயிரிழந்த விவேகானந்தன் மனைவி சாந்தி, மீண்டும் நீதிமன்றத்தை நாடினார். அப்போது 2 மாதங்களுக்குள் 9 சதவீதம் வட்டி உடன் சேர்த்து பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு இழப்பீடு வழங்க வேண்டும் என நகராட்சிக்கு மீண்டும் உத்தரவிட்டது. இருப்பினும், மாநகராட்சி சார்பில் இழப்பீடு வழங்காததையடுத்து சாந்தி நீதிமன்றத்தில் உத்தரவை நிறைவேற்ற மனு தாக்கல் செய்தார்.
இதனையடுத்து இன்று சார்பு நீதிமன்ற நீதிபதி, மாநகராட்சியின் அசையா சொத்துகளை ஜப்தி செய்ய உத்தரவிட்டார். இதனையடுத்து பாதிக்கப்பட்ட சாந்தி, நீதிமன்ற ஊழியர்கள் மற்றும் போலீஸாருடன் ஓசூர் மாநகராட்சியின் அசையா சொத்துகளை ஜப்தி செய்ய சென்றனர். நீதிமன்றத்தின் ஜப்தி கடிதத்தை நீதிமன்ற ஊழியர் ஓசூர் மாநகராட்சி ஆணையர் மாரிசெல்வியிடம் வழங்கினார்.
இதனையடுத்து பாதிக்கப்பட்ட சாந்தியிடம் ஆணையாளர் ஒரு வாரத்திற்குள் வட்டியுடன் சேர்த்து ரூ.20.85 லட்சம் வழங்குவதாக அவகாசம் வழங்கு கோரிக்கை விடுத்தார். பின்னர் பாதிக்கப்பட்டவர் சம்மதம் தெரிவித்தையடுத்து, நீதிமன்ற ஊழியர்கள் ஜப்தி நடவடிக்கையை கைவிட்டு திரும்பி சென்றனர். நீதிமன்ற ஊழியர்கள் ஜப்தி செய்ய மாநகராட்சி அலுவலகம் வந்த சம்பத்தால் ஓசூரில் பரபரப்பு ஏற்பட்டது.