சென்னை: “எனக்கு உறுதுணையாக இருந்த தமிழக்த்துக்கே நன்றி சொல்ல வேண்டும். நான் மேடையில் பேசும்போது, ‘உயிரே… உறவே… தமிழே…’ என்று சொன்னதற்கான அர்த்தத்தை முழுமையாக உணர்கிறேன்” என நடிகர் கமல்ஹாசன் நெகிழ்ச்சியுடன் பேசினார்.
மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிலம்பரசன் மற்றும் த்ரிஷா நடித்துள்ள ‘தக் லைஃப்’ திரைப்படம் நாளை (மே 5) வெளியாகவுள்ளது. இந்த நிலையில், ‘தக் லைஃப்’ படக்குழுவினர் இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தனர். இந்தச் சந்திப்பின்போது பேசிய கமல்ஹாசன், “இந்தப் படத்தில் எங்களுக்கு கிடைத்த படை என்பது வீரர்கள் நிறைந்த படை. இந்தப் படம் உலக தரத்துக்கு இருக்கும். நமது தொழில்நுட்ப கலைஞர்கள் உலகமே பாராட்டும் அளவுக்கு வேலை செய்திருக்கிறார்கள்.
உதாரணமாக, மணிரத்னத்தை சொல்லலாம். சர்வதேச தரத்தில் ‘தக் லைஃப்’ படம் உருவாகி இருக்கிறது. ‘நாயகன்’ படத்தின்போது நான் பார்த்த இளைஞர் மணிரத்னம் இன்று ஒரு சினிமா ஞானியாக உள்ளார். இந்தப் படத்தில் சிறந்த டெக்னிஷியன்கள் பதற்றம் இல்லாமல் பணியாற்றி இருக்கிறார்கள். எல்லா உயரங்களையும் தாண்டும் லாவகம் இவர்களுக்கு உள்ளது.
ரவி கே.சந்திரன் அமெரிக்காவில் படம் எடுக்கும் அளவுக்கு திறமை உள்ளவர். ஒளிப்பதிவாளர் ரவி கே.சந்திரன் 20 ஆண்டுகளுக்கு முன்பே ‘மருதநாயகம்’ படத்தில் பணியாற்றி இருக்க வேண்டும். அதனை பாதியிலேயே கைவிட்டுவிட்டோம் என்ற வருத்தம் உள்ளது. இந்தப் படத்தில் இன்னும் சிறப்பாக கூடுதல் அனுபவத்துடன் வந்து பணியாற்றியுள்ளார்.
இப்படம் வியாபார ரீதியாக வெற்றி பெற வேண்டும். அதனைவிட என் சினிமா வெற்றி பெற வேண்டும் என்பதே எங்களின் எண்ணம். இந்தப் படத்துக்கு ஆரோக்கியமான சூழல் அமைந்துள்ளது. ராஜ்கமல் நிறுவனத்துக்கு பின் உள்ள இன்டர்நேஷனல் என்ற வார்த்தைக்கு முழு அர்த்தத்தை மணிரத்னம் அளித்திருக்கிறார். சின்னச் சின்ன கதாபாத்திரத்தில் நடித்தவர்கள் கூட மிகச் சிறப்பாக நடித்துள்ளார்கள். வையாபுரி போன்றவர்கள் சிறப்பாக நடித்துள்ளார்கள். இப்படத்தில் பணிபுரிந்தவர்களின் திறமையை பற்றி பேசுவதற்கு இன்னொரு விழா நிச்சயம் நடக்கும் என்று நம்புகிறேன்.
முக்கியமாக, எனக்கு உறுதுணையாக இருந்த தமிழகத்துக்கே நன்றி சொல்ல வேண்டும். நான் மேடையில் பேசும்போது, ‘உயிரே… உறவே… தமிழே…’ என்று சொன்னதற்கான அர்த்தத்தையும் முழுமையாக உணர்கிறேன்” என்று கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து, கர்நாடகாவில் ‘தக் லைஃப்’ படத்துக்கான தடை தொடர்பாக நிருபர்கள் கேள்வி எழுப்பியபோது, “இது உங்களுக்கு நன்றி சொல்லவும், எங்களின் குதூகலத்தை வெளிப்படுத்தவும் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வு. இன்னும் பேச வேண்டியது நிறைய உள்ளது. கண்டிப்பாக அதற்கான நேரத்தை ஒதுக்கித் தர வேண்டியது எனது கடமை. தமிழனாக.” என்றார் கமல்ஹாசன்.
கமல் மன்னிப்புக் கேட்க மறுப்பு: முன்னதாக, “தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது” என்று கமல்ஹாசன் பேசியதற்கு கன்னட அமைப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து அவருக்கு எதிராக போராட்டங்களில் குதித்தனர். கர்நாடக கன்னட கலை மற்றும் கலாச்சாரத் துறை அமைச்சர் சிவராஜ் தங்கடகி கூறும்போது, “கமல்ஹாசனின் கருத்தால் கன்னடர்களின் மனம் புண்பட்டுள்ளது. அவர் மன்னிப்பு கேட்டால் மட்டுமே கர்நாடகாவில் அவரது திரைப்படம் வெளியாகும்” என எச்சரித்தார். அதற்கு கமல்ஹாசன், “நான் எந்த தவறும் செய்யாதபோது, மன்னிப்பு கேட்க மாட்டேன்” என பதிலளித்தார். இதையடுத்து கர்நாடக திரைப்பட வர்த்தக சபை, தக் லைஃப் திரைப்படத்துக்கு கர்நாடகாவில் தடை விதித்தது.
இதை எதிர்த்து கமல்ஹாசன் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் அவசர மனு ஒன்றை தாக்கல் செய்தார். அப்போது, கமல்ஹாசன் மன்னிப்பு கேட்க மறுத்ததால், அவர் நடித்த ‘தக் லைஃப்’ திரைப்படம் கர்நாடகாவில் நாளை வெளியாகாது என தெரிவிக்கப்பட்டது. இந்த விசாரணையின்போது, “கடந்த 1950-களில் இந்திய கவர்னர் ஜெனரலாக இருந்த ராஜகோபாலாச்சாரி இதேபோன்ற ஒரு கருத்தை தெரிவித்தார். அதற்கு கன்னட எழுத்தாளர்கள் கண்டனம் தெரிவித்து அவருக்கு கடிதம் எழுதினர். அதன்பிறகு ராஜகோபாலாச்சாரி தனது கருத்துக்கு மன்னிப்பு கேட்டார். அவரால் மன்னிப்பு கேட்க முடிந்தபோது, கமல்ஹாசனால் ஏன் மன்னிப்பு கேட்க முடியவில்லை.
இதேபோல காலா திரைப்படத்தின்போது நடிகர் ரஜினிகாந்த் மன்னிப்பு கேட்டார். அதனால், அந்த திரைப்படம் கர்நாடகாவில் வெளியானது. இந்தியாவில் மாநிலங்கள் மொழிரீதியாக பிரிக்கப்பட்டிருக்கும் சூழலில் மக்கள் மொழி விவகாரங்களில் உணர்வுப்பூர்வமாக இருப்பதை தவிர்க்க முடியாது. அவர்களின் மனதை புண்படுத்தும் உரிமை யாருக்கும் இல்லை” என்று கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி நாகபிரசன்னா தெரிவித்தார்.
அதேவேளையில், நடிகர் கமல்ஹாசன் தரப்போ, “தவறாக எதையும் பேசவில்லை. தவறாக புரிந்துகொள்ளப்பட்டதற்கு மன்னிப்பு கேட்க வேண்டியதில்லை. எனவே தற்போதைக்கு கர்நாடகாவில் ‘தக் லைஃப்’ திரைப்படத்தின் வெளியீட்டை ஒத்தி வைக்கிறோம். இதுகுறித்து கர்நாடக அரசு மற்றும் திரைப்பட வர்த்தக சபையுடன் பேச ஒரு வார கால அவகாசம் வேண்டும்” என கோரினார். இதையடுத்து நீதிபதி வழக்கின் அடுத்தக்கட்ட விசாரணையை வரும் ஜூன் 10-ம் தேதிக்கு ஒத்தி வைத்தது குறிப்பிடத்தக்கது.