சென்னை: பள்ளிகரணையில் சாதி மறுப்பு திருமணம் செய்துகொண்ட இளைஞர் ஆணவக் கொலை செய்யப்பட்ட வழக்கை சிபிஐ விசாரிக்க உத்தரவிடக் கோரிய மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை பள்ளிகரணையில் வசித்து வந்தவர் பட்டியலின சமூகத்தை சேர்ந்த பிரவீன். இவர் மாற்றுச் சாதி பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார் . இதனால் பிரவீன் அப்பெண்ணின் சகோதரரால் கடந்த 2024-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஆணவக் கொலை செய்யப்பட்டார். கணவரை இழந்த ஷர்மிளா, இரண்டு மாதங்கள் கழித்து தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
பிரவீனை கொலை செய்த வழக்கில், ஷர்மிளாவின் சகோதரர் தினேஷ் மற்றும் நான்கு பேரை பள்ளிக்கரணை காவல்துறையினர் கைது செய்தனர். இவர்கள் ஜாமீனில் விடுதலை ஆகியுள்ளனர். இந்த வழக்கில், செங்கல்பட்டு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் சாட்சிகள் மிரட்டபட்டுள்ளதாகவும், குற்றப்பத்திரிக்கையில் சம்பவம் மறைக்கபட்டுள்ளதால் அதனை ரத்து செய்து, சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் எனவும், பிரவீனின் தந்தை கோபி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜி.கே.இளந்திரையன், வழக்கு விசாரணையை சிபிஐ-க்கு மாற்ற மறுத்து, மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.