ஆர்சிபியின் 18 ஆண்டு கால கோப்பைத் தவம் வெற்றியுடன் நிறைவேறியது. விராட் கோலியின் கிரிக்கெட் வாழ்க்கையில் ஐபிஎல் கோப்பை வெல்லாதது ஒரு பெரிய கறையாக இருந்து வந்தது நேற்று நீக்கப்பட்டது. ஆர்சிபி வெற்றியில் பலரும் பங்களித்திருக்கலாம். ஆனால் கிருணல் பாண்டியாவின் பங்களிப்பு அதிகம் பேசப்படுவதில்லை. ஆனால், அவர்தான் ‘அன் சங் ஹீரோ’ என்பார்களே அந்த எதிர்மறைப் பெருமையில் மிளிர்கிறார். 15 போட்டிகளில் 17 விக்கெட்டுகளுடன் ஐபிஎல் 2025 பவுலர்கள் பட்டியலில் 10-ம் இடத்தில் திகழ்கிறார் கிருணல்.
டாப் 10 பவுலர்களில் ஒருவராகத் திகழும் இவர், இந்திய அணியில் நிரந்தர இடம் பிடிக்க முடியவில்லை என்பது இப்போதைய அணித் தேர்வுக்குழுவின் விசித்திரங்களில் மகத்தான விசித்திரமே. டாப் 10-ல் இருப்பதோடு கிருணல் பாண்டியா சிக்கன விகிதத்திலும் 7-ம் இடத்தில் இருக்கிறார். ஈஎஸ்பிஎன் கிரிக் இன்போ தாக்கம் ஏற்படுத்தும் வீரர்கள் பட்டியலில் 6-ம் இடத்தில் இருக்கிறார். இதோடு பேட்டிங்கில் டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு எதிராக எடுத்த அதிரடி 73 ரன்களும் சேரும்போது கிருணல் பாண்டியாவின் பங்களிப்பின் பரிமாணம் புரியும்.
நேற்று 4 ஓவர்கள் வீசி 17 ரன்களுக்கு 2 முக்கியமான விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். டி20 கிரிக்கெட்டில் பேட்டர்களின் மனநிலையை கச்சிதமாகக் கணித்து வீசுபவர் கிருணல் பாண்டியா. இந்த விதத்தில் ரவீந்திர ஜடேஜா, கிருணலை ஒப்பிடும்போது வெகு தொலைவில் இருக்கிறார். இவரது பந்து வீச்சில் பெரிய அளவில் பந்துகள் திரும்பாது, ஸ்பின்னர்களுக்கே உரிய டிரிஃப்ட், ஆர்க் போன்றவையும் இருக்காது. பேட்டர்களின் கால் அசைவை வைத்து நுட்பமாக பந்தின் வேகத்தையும் லெந்த்தையும் மாற்றக்கூடியவர் கிருணல்.
நேற்று குறிப்பாக ஸ்வீப் ஷாட்களை ஆட முடியாதவாறு வீசினார். இந்த ஸ்வீப் ஷாட் தெரிவை ஒரு பவுலர் கட்டுப்படுத்தி விட்டார் என்றால், அடுத்ததாக பேட்டர் ஒன்று பின்னால் சென்று கட், புல் ஆட வேண்டும் அல்லது இறங்கி வந்து தூக்க வேண்டும். இந்த வாய்ப்புகளில் கிருணல் விக்கெட்டுகள் வீழ்த்தும் சாத்தியக்கூறுகள் அதிகம். அதைத்தான் செய்தார் கிருணல்.
நேற்று பிரப்சிம்ரன் சிங் ஆட்டத்தை முடக்கியதில் கிருணலுக்கு முக்கியப் பங்கு உண்டு. பிரப்சிம்ரனையும் ஆஸ்திரேலிய அதிரடி மன்னன் ஜாஷ் இங்லிஸையும் அவர் தன் சாதுரியத்தினாலும் கணிக்கும் திறனினாலும் வீழ்த்தினார். இது ஆர்சிபி வெற்றியில் 75% பங்களித்தது என்றால் அது மிகையாகாது.
கிருணல் பாண்டியாவின் பொறுமையும் அனுபவமும் அவரை ஒரு ஐபிஎல் கிரேட் பவுலர் என்றே நம்மைக் கூற அழைக்கிறது. 4 ஐபிஎல் இறுதிகளை வென்ற 8 வீரர்கள் பட்டியலில் கிருணல் இப்போது ஒருவர். ஸ்டார் வீரர்கள் பின்னால் ஊடகங்களும், தேர்வுகளும், ஏலங்களும் ஓட, கிருணால் அமைதியாக தன் டி20 பவுலிங் மேதமையை நிரூபித்துள்ளார்.