ஸ்ரீநகர்: காஷ்மீரில் தீவிரவாத அமைப்புக்களுக்கு உதவியதாக காவலர் உட்பட 3 அரசு ஊழியர்களை துணைநிலை ஆளுநர் நேற்று பணி நீக்கம் செய்தார்.
காஷ்மீர் துணைநிலை ஆளுநராக கடந்த 2020-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பொறுப்பேற்ற மனோஜ் சின்ஹா, தீவிரவாதத்துக்கு எதிராக கடும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். குறிப்பாக தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்பு வைத்திருந்த 75-க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்களை அரசியல் சாசனத்தின் 311 (2)(சி)-வது பிரிவின் கீழ் பணி நீக்கம் செய்துள்ளார்.
அந்த வகையில், காவலர் மாலிக் இஷ்பக் நசீர், பள்ளி ஆசிரியர் அஜாஸ் அகமது மற்றும் ஸ்ரீநகர் அரசு மருத்துவக் கல்லூரியின் இளநிலை பொறியாளர் வாசீம் அகமது கான் ஆகிய 3 பேர் நேற்று பணி நீக்கம் செய்யப்பட்டனர். இவர்கள் மூவரும் பாகிஸ்தானைச் சேர்ந்த லஷ்கர்-இ-தொய்பா மற்றும் ஹிஸ்புல்-முஜாஹிதீன் ஆகிய தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்பு வைத்திருந்ததாக புகார் எழுந்த நிலையில், மனோஜ் சின்ஹா அவர்களை பணி நீக்கம் செய்துள்ளார்.
காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22-ம் தேதி தீவிரவாதிகள் துப்பாக்கியால் சுட்டதில் உள்ளூரைச் சேர்ந்த ஒருவர் மற்றும் 25 சுற்றுலாப் பயணிகள் உயிரிழந்தனர். இந்நிலையில் 3 அரசு ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.