சென்னை: ஆன்லைன் ரம்மி, போக்கர் போன்ற பணம் வைத்து விளையாடப்படும் விளையாட்டுகளுக்கு ஆதார் இணைப்பை கட்டாயமாக்கியும், நேரக்கட்டுப்பாடு விதித்தும் தமிழக அரசு கொண்டு வந்த விதிமுறைகள் செல்லும் என தீர்ப்பளித்துள்ள சென்னை உயர் நீதிமன்றம், இந்த விதிமுறைகளை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகளை தள்ளுபடி செய்தது.
தமிழகத்தில் ஆன்லைன் விளையாட்டுகளை முறைப்படுத்தும் வகையில் கடந்த 2022-ம் ஆண்டு தமிழ்நாடு ஆன்லைன் சூதாட்ட தடை மற்றும் ஆன்லைன் விளையாட்டுகள் ஒழுங்குமுறைச் சட்டத்தின்கீழ், ஆன்லைன் விளையாட்டுகளை விளையாட ஆதார் இணைப்பை கட்டாயமாக்கியும், நள்ளிரவு 12 மணி முதல் அதிகாலை 5 மணி வரை இந்த விளையாட்டுகளை யாரும் விளையாட முடியாதபடி நேர கட்டுப்பாடு விதித்தும் தமிழக அரசு விதிமுறைகளை அமல்படுத்தியது.
கடந்த பிப்ரவரி மாதம் கொண்டு வரப்பட்ட இந்த விதிமுறைகளை எதிர்த்து பல்வேறு ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்கள் மற்றும் சங்கங்கள் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்குகள் மீதான விசாரணை நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், கே.ராஜசேகர் ஆகியோர் அடங்கிய அமர்வில் நடந்தது.
அப்போது ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்கள் சார்பில் மூத்த வழக்கறிஞர்கள் சி.ஆர்யமா சுந்தரம், முகுல் ரோஹ்தகி, சஜன் பூவையா உள்ளிட்டோரும், தமிழக அரசின் தரப்பில் தலைமை வழக்கறிஞர் பி.எஸ். ராமன், கூடுதல் தலைமை வழக்கறிஞர் அமித் ஆனந்த் திவாரி மற்றும் சிறப்பு அரசு வழக்கறிஞர் டி.சந்திரசேகரன் உள்ளிட்டோரும், மத்திய அரசு சார்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல்.சுந்தரேசனும் ஆஜராகி வாதிட்டனர்.
அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் நேற்று பிறப்பித்துள்ள தீர்ப்பில் கூறியிருப்பதாவது: ஆன்லைன் ரம்மி, போக்கர் போன்ற பணம் வைத்து விளையாடப்படும் விளையாட்டுகள் பொதுநலனுக்கும், தனிநலனுக்கும் அச்சுறுத்தலாக இருப்பதால் ஆன்லைன் விளையாட்டுகளை ஒழுங்குபடுத்த மாநில அரசுக்கு அனைத்து அதிகாரமும் உள்ளது.
ஆன்லைன் விளையாட்டுகளை விளையாட ஆதார் இணைப்பை கட்டாயமாக்கியும், நள்ளிரவு 12 மணி முதல் அதிகாலை 5 மணி வரை இந்த விளையாட்டுகளை யாரும் விளையாட முடியாதபடி நேர கட்டுப்பாடு விதித்தும் தமிழக அரசு கொண்டு வந்துள்ள விதிமுறைகள் மத்திய அரசின் விதிகளுக்கு எதிராக இல்லை.
நிபுணர்கள் குழுவின் அறிக்கை அடிப்படையில் ஆன்லைன் விளையாட்டுக்களால் ஏற்படும் எதிர்மறையான பாதிப்புகளைப் பார்க்கும்போது இதுபோன்ற ஒழுங்குமுறை விதிகள் கட்டாயம் தேவை. மத்திய அரசின் தகவல் தொழில்நுட்ப விதிகள் இன்னும் அமலுக்கு வராத நிலையில், அந்த வெற்றிடத்தை நிரப்பும் வகையில் மாநில அரசு எடுத்துள்ள நடவடிக்கையில் எந்த தவறும் இல்லை.
தனது ஆளுமைக்குட்பட்ட பகுதியில் இதுபோன்ற வர்த்தக நடவடிக்கைகளை முறைப்படுத்தவும், தேவையான ஒழுங்கு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் மாநில அரசுக்கு முழு அதிகாரம் உள்ளது. ஆன்லைன் விளையாட்டுகளால் தற்கொலை போன்ற உயிரிழப்பு சம்பவங்கள் அதிகமாக நிகழ்ந்துள்ளதால் பொதுநலனுடன் நேரடி தொடர்பு கொண்டுள்ள இந்த ஆன்லைன் விளையாட்டுகளை மாநில அரசு முறைப்படுத்த முடியும். இந்த விளையாட்டுகளால் பொதுமக்கள் தீவிரமான மனஅழுத்தம் மற்றும் உடல் ரீதியிலான பாதிப்புகளுக்கு உள்ளாகும்போது அரசு கைகட்டி பார்த்துக்கொண்டு மவுனம் காக்க முடியாது.
இந்திய அரசியலமைப்புச் சட்டம் தொழில்புரியும் உரிமையை சட்டப்பூர்வமாக வழங்கியுள்ளது என்றாலும், அதற்கும் நியாயமான கட்டுப்பாடுகளும் உள்ளன. தொழில் புரியும் உரிமை உள்ளது என்பதற்காக மக்களின் வாழ்வுரிமையை பொருளாதார ரீதியாகவும், மனரீதியாகவும் பாதிக்கும் வகையிலான செயல்களை செய்ய அனுமதிக்க முடியாது. பொதுமக்களின் அனைத்து உரிமைகளையும் பாதுகாக்க வேண்டிய கடமையும், பொறுப்பும் மாநில அரசுக்கும் உள்ளது.
ஆன்லைன் ரம்மி, போக்கர் போன்ற பணம் வைத்து விளையாடப்படும் விளையாட்டுகளுக்கு வயது கட்டுப்பாடு கொண்டு வரும் வகையில் ஆதார் இணைப்பை கட்டாயமாக்கியும், பல்வேறு அறிவியல்பூர்வமான காரணங்களால் நேரக்கட்டுப்பாடு விதித்தும் தமிழக அரசு கொண்டு வந்துள்ள விதிமுறைகள் செல்லும் என்பதால் மனுதாரர்களின் கோரிக்கை ஏற்புடையதல்ல என்பதால் வழக்குகளை தள்ளுபடி செய்கிறோம். இவ்வாறு தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளனர்.